பவளவிழா பாப்பா! "அநீதி அராஜகம் தில்லுமுல்லு.."! திமுகவை விமர்சித்து திருக்குறள் சொன்ன விஜய்
சென்னை: இந்த காலத்தில் திருவள்ளுவர் இருந்திருந்தால், திமுகவுக்கு ஒரு குறள் எழுதியிருந்தால் எப்படி இருக்கும் தெரியுமா என கூறி, திமுகவை விமர்சித்து விஜய் ஒரு திருக்குறளை தெரிவித்தார். இதனால் அரங்கமே அதிர்ந்தது.
தவெகவின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவில் விஜய் பேசுகையில், 1977-ஆம் ஆண்டு ஜூன் மாதம், புரட்சி தலைவர் எம்ஜிஆர் ரேடியோவில் பேட்டி கொடுத்தார். அவர் கூறுகையில், அண்ணா இருந்த இடத்தில் இப்படிப்பட்டவர்களா என கண்ணீர் விட்டார்.

அது போல் காமராஜர், அண்ணா, எம்ஜிஆர் ஆகியோர் இருந்த இடத்தில் இப்படிப்பட்டவர்களா என மக்கள் கண்ணீர் விடுகிறார்கள். அவர்களிடம் இருந்து இந்த தமிழகத்தை காக்க இந்த தமிழக வெற்றிக் கழகத்தால்தான் முடியும்.
திருவள்ளுவர் இருந்திருந்தால் திமுகவுக்கு ஒரு குறள் சொல்லியிருந்தால் எப்படியிருக்கும் தெரியுமா?
"அநீதி அராஜகம் தில்லுமுல்லு இவையெல்லாம்
திமுக முதற்றே உலகு"
என தெரிவித்தார். இதனால் அரங்கமே அதிர்ந்தது. பின்னர் விஜய்யிடம் ஒன்ஸ்மோர் கேட்டு தொண்டர்கள் சிலாகித்தனர்.
தவெக கொடி
இந்த விழாவில் முதலில் தவெக கொடியை ஏற்றிய விஜய், தனது கட்சியின் கொள்கைத் தலைவர்களான அம்பேத்கர், பெரியார், காமராஜர், அஞ்சலை அம்மாள், ராணி லட்சுமி பாய் ஆகியோரது படங்களுக்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.
தமிழக தேர்தல் களம்
பின்னர் இந்த விழாவில் விஜய் பேசுகையில், "தமிழக தேர்தல் களத்தில் மும்முனைப் போட்டி, நான்கு முனை போட்டி என்றெல்லாம் சொல்கிறார்கள். அவர்களுக்கு நான் ஒன்றை சொல்கிறேன், இங்கே மாபெரும் மக்கள் சக்தி கூட்டணி, திமுக கூட்டணி, பாஜக தலைமையில் மற்றும் பலர் கூட்டணிதான் இருக்கிறது.
விஜய் வீட்டை விட்டு வெளியே வா
திமுகவை வீழ்த்த மாபெரும் மக்கள் சக்தியாக தவெகவால் மட்டும்தான் முடியும். அப்புறம், "ஏய் விஜய் வீட்டை விட்டு வெளியே வா" சொல்லிக் கொண்டே இருக்கிறீர்கள். கொஞ்சம் பொறுமையா இருங்க பாஸ், தேர்தல் தேதியில் தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டில் இருக்கும் ஒவ்வொரு விஜய்யும் ஒவ்வொரு விஜியும் வாக்காளர் அடையாள அட்டையுடன் காலையிலேயே பூத் பூத்தாக வந்து நிற்பார்கள். அன்றைக்கு "இந்த விஜய்யை ஏன் வெளியே கூப்பிட்டோம்" என நீங்கள் நினைப்பீர்கள்.
சினிமாவை விட்டுவிட்டேன்
நான் என்ன பேசினாலும் "இது என்ன சினிமாவா" என கேட்க ஆரம்பித்து விடுகிறார்கள். நானே சினிமாவை விட்டுவிட்டேன். ஆனால் திமுகவினர் அதை விடுவதாக இல்லை என விஜய் பேசினார்.
3ஆம் ஆண்டு தொடக்க விழாவுக்கு வருகை தந்தவர்களுடன் கைக்குலுக்கி வரவேற்று அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அது போல் தவெக நிர்வாகிகளும் விஜய்க்கு பொன்னாடை போர்த்தி பூங்கொத்துகளையும் கொடுத்தனர்.
41 பேர் பலி
விஜய் கட்சியை தொடங்கியதிலிருந்தே திமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறார். கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் சிக்கி இறந்ததற்கும் திமுகதான் காரணம் என விமர்சித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த ஜனவரி 12, 19 ஆகிய தேதிகளில் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனநாயகன்
அது போல் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படமும் சென்சார் பிரச்சினையால் இன்னும் வெளியே வராமல் உள்ளது. இந்த படம் ஜனவரி 9-ஆம் தேதி வெளியாக வேண்டியது. இன்னும் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருப்பதால் இதன் நிலை என்னவாகும் என தெரியவில்லை.












Click it and Unblock the Notifications