சொப்பனத்திலும் கண்டில்ல சாரே.. சென்னையில் சரிந்த திமுக கோட்டை! அதிர்ச்சி தோல்வியடைந்த மெயின் தலைகள்!
சென்னை: யாரும் எதிர்பாராத வகையில் 2026 தமிழக சட்டசபை தேர்தலில் தமிழகத்தின் தனிப்பெரும் கட்சியாக தமிழக வெற்றி கழகம் உருவாகி இருக்கிறது. நூற்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் அந்த கட்சி முன்னிலை வகிக்கும் நிலையில் திமுகவின் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல முக்கிய அமைச்சர்கள் தோல்வியை சந்தித்திருக்கின்றனர். அதே நேரத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி உள்ளிட்ட சிலர் வெற்றிக் கனியை எட்டிப் பறித்துள்ளனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026 முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், அரசியல் களத்தில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் பல முக்கிய தலைவர்கள் தோல்வியை சந்தித்துள்ளனர். குறிப்பாக ஆட்சியில் இருந்த முதல்வர் ஸ்டாலின் மற்றும் முக்கிய அமைச்சர்கள் பலர் தங்கள் தொகுதிகளில் பின்னடைவை சந்தித்தது, இந்தத் தேர்தலின் மிகப் பெரிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.

சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் மு.க. ஸ்டாலின், எதிர்பாராத வகையில் தவெக வேட்பாளரிடம் ஆயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளார். இந்தத் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ். பாபு வெற்றி பெற்றிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி தான்.
அதேபோல், அமைச்சரவையில் இருந்த பல முக்கிய அமைச்சர்கள் பலரும் தோல்வியை சந்தித்துள்ளனர். சைதாப்பேட்டை தொகுதியில் மா. சுப்பிரமணியன் தோல்வியடைந்த நிலையில், அந்த இடத்தில் தவெக வேட்பாளர் அருள் பிரகாசம் வெற்றி பெற்றுள்ளார். ராதாபுரம் தொகுதியில் சட்டசபை சபாநாயகர் அப்பாவும் தோல்வி அடைந்துள்ளார். அந்த தொகுதியில் தவெக வேட்பாளர் சதீஷ் கிறிஸ்டோபர் முன்னிலை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட்ட பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தோல்வியை சந்தித்துள்ளார். தூத்துக்குடி தொகுதியில் கீதா ஜீவனும் தோல்வி அடைந்துள்ளார். மன்னார்குடி தொகுதியில் டி.ஆர்.பி. ராஜா குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வீழ்ந்துள்ளார். திருவெறும்பூர் தொகுதியில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தோல்வியடைந்ததும் கவனிக்கத்தக்கதாக உள்ளது.
அதே நேரத்தில் திமுகவின் சில முக்கிய தலைவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை பெற்று வெற்றியை உறுதி செய்துள்ளார். துறைமுகம் தொகுதியில் சேகர்பாபு வெற்றி பெற்றுள்ளார். திருச்சி மேற்கு தொகுதியில் கே.என். நேரு வெற்றி பெற்றுள்ளார்.
மேலும், உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன், அமைச்சர் சிவசங்கர், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் தங்கள் தொகுதிகளில் வெற்றி பெற்று திமுகவுக்கு ஒரு அளவிற்கு ஆதரவாக இருந்துள்ளனர்.
இந்தத் தேர்தலில் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், புதிய கட்சியாக இருந்தாலும் தமிழக வெற்றி கழகம் மிகப்பெரிய அளவில் முன்னிலை பெற்று அரசியல் வரலாற்றையே முற்றிலும் மாற்றியிருக்கிறது. இளைஞர்கள் மற்றும் பெண்கள் வாக்குகள் இந்த மாற்றத்துக்கு முக்கிய காரணமாக இருந்ததாக அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
மொத்தத்தில், இந்தத் தேர்தல் தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியிருக்கிறது. பல ஆண்டுகளாக நிலவி வந்த பாரம்பரிய அரசியல் கணக்குக்ள் முறியடிக்கப்பட்டுள்ளன. மக்கள் மாற்றத்தை விரும்பியிருப்பது இந்த முடிவுகள் மூலம் தெளிவாக தெரிகிறது என்கின்றனர் விஜயின் ஆதரவாளர்கள்.












Click it and Unblock the Notifications