விக்கிரவாண்டியில் விளாசிய விஜய்! பழைய முகங்களால் போர் அடிக்குது.. புதுசா வரட்டும்.. தடலாடி தயாநிதி
சென்னை: தமிழக வெற்றிக் கழக முதல் மாநாட்டில் தனது அரசியல் எதிரிகள் என திமுகவையும் பாஜகவையும் குறிப்பிட்டு பேசியிருக்கிறார் விஜய். இதை அடுத்து பாஜகவினரும் திமுகவினரும் விஜய் மீது விமர்சனக் கணைகளை தொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் பழையவர்களை பார்த்து போர் அடித்து விட்டதாகவும்.. புதுசாக வருபவர்களையும் பார்த்து விடலாம் என்கிறார் திமுக எம்பி ஆன தயாநிதி மாறன்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டின், முதல் பேச்சிலேயே திமுகவையும் பாஜகவையும் கதற விட்டிருக்கிறார் விஜய் என கூறி வருகின்றனர் அவரது கட்சியினர். அதுவும் உண்மை தான். காரணம் விஜயின் பேச்சு அப்படி தான் இருந்தது.

கடும் கட்டுப்பாடுகள், சில சர்ச்சைகள், பிரச்சனைகளுக்கு மத்தியில் முதல் மாநில மாநாடு நேற்று தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
முறையாக 4 மணிக்கு மாநாடு தொடங்கி சுமார் 6:15 மணிக்கு எல்லாம் நிறைவு பெற்றுவிட்டது. விஜய் சுமார் 43 நிமிடங்கள் மட்டுமே பேசினார். அதே நேரத்தில் கொள்கை விளக்கம் உள்ளிட்ட பேச்சுகள் தவிர சுமார் ஐந்து நிமிடங்கள் மட்டுமே அவரது அரசியல் எதிரிகள் குறித்த பேச்சு இருந்தது. பிளவுவாத அரசியல் செய்பவர்கள் தான் நமது எதிரிகள். சாதி மதம், ஏழை பணக்காரர் என பிளவுபடுத்துபவர்களுக்கு எதிராக நமது அரசியல் பாதை இருக்கும் என கூறினார். இது பாஜகவுக்கான நேரடி அறிவிப்பு என்கின்றனர் அரசியல் நிபுணர்கள்.
அதே நேரத்தில் தமிழக அரசியலைப் பொறுத்தவரை திமுக தான் தனது எதிரி என்பதை விஜய் தெளிவாக குறிப்பிட்டு விட்டார். அண்ணா, பெரியாரின் பெயரைச் சொல்லி திராவிட மாடல் என்ற பெயரில் மக்களை கொள்ளை அடிக்கும் குடும்பத்திற்கு எதிராக அரசியல் என்பதன் மூலம் திமுகவை விஜய் நேரடியாக சீண்டி இருப்பதாக கூறுகின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
பாஜக குறித்து மறைமுக பேசினாலும் திமுகவை நேரடியாக விஜய் விமர்சித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் விஜய் பேச்சுக்கு திமுகவினர் பதிலடி கொடுத்து வருகின்றனர். அமைச்சர்கள் தொடங்கி ஆர்.எஸ்.பாரதி வரையிலான நிர்வாகிகளும் திமுக ஆதரவாளர்களும் சமூக வலைதளங்களில் விஜயை மிகக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
அதே நேரத்தில் விஜய் குறித்து ஜாலியான விமர்சனங்களை பேசியிருக்கிறார் எம்பி தயாநிதி மாறன். மக்களவைத் தேர்தலில் தனது வெற்றிக்காக பணியாற்றிய நிர்வாகிகளுக்கு பரிசு பொருள் வழங்கும் நிகழ்வில் பங்கேற்ற அவர் விஜய் கட்சி தொடங்கியது பற்றியும் பேசி இருந்தார்.
“முதலில் பல திமுகவை விமர்சித்து காணாமல் போய்விட்டார்கள். இப்போது மறுபடியும் ஆரம்பிச்சுட்டாங்க.. இதில் தவறு எதுவும் கிடையாது. புதுசு புதுசாக வரவேண்டும்.. பழைய முகங்களை பார்த்து எவ்வளவு நாள் தான் டைம் பாஸ் செய்வது.. நமக்கும் போர் அடிக்கும் இல்லையா.. நமக்கும் கொஞ்சம் டைம் பாஸ் ஆக வேண்டும் இல்லையா.. நாம் பார்க்காதவர்கள் எத்தனை எத்தனை முகங்களை பார்த்திருக்கிறோம். அத்தனை முகங்களையும் பார்த்து மக்கள் அனைவரும் மனதை பிடித்த ஒரே கட்சி என்றால் அது திமுக தான். தொடர்ந்து மக்களுக்கு நாம் சேவை செய்தால் மக்களை நம்மை மறக்க மாட்டார்கள். அதனால் தான் இன்று வரை திமுகவை விரும்பி வருகின்றனர்” என கூறினார்.












Click it and Unblock the Notifications