அம்பேத்கரா? திமுக கூட்டணியா? விஜய்க்காக அம்பேத்கரை விட்டுத் கொடுத்த திருமாவளவன்? பரபர பாலிடிக்ஸ்
சென்னை: டிசம்பர் ஆறாம் தேதி நடைபெற இருக்கும் 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' புத்தக வெளியீட்டு விழாவில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கலந்து கொள்கிறார். விஜய் புத்தகத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதி அரசர் சந்துரு பெற்றுக் கொள்வதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் திமுக கூட்டணிக்காக விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியை திருமாவளவன் புறக்கணித்து இருப்பதாக எதிர்தரப்பினர் குற்றம் சாட்டுகின்றனர். அதுவும் தனது சொந்த கட்சி நிர்வாகியான ஆதவ் அர்ஜுனா நடத்தும் நிகழ்வில் திருமாவளவன் பங்கேற்காதது பேசுபொருளாக மாறி இருக்கிறது.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கடந்த மாதம் அக்டோபர் 27 ஆம் தேதி தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டை நடத்தினார்.

இந்தக் கூட்டத்தில் பேசிய விஜய், தனது கட்சியுடன் கூட்டணி அமைக்கும் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு அளிக்கப்படும் எனவும் கூறினார். விஜய்யின் இந்த பேச்சு தமிழக அரசியலில் பெரும் விவாதப்பொருளானது.
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் திருமாவளவன், பல ஆண்டுகளாகவே ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது பற்றி பேசி வரும் நிலையில், விஜய்யின் பேச்சு அவருக்கு விடுத்த நேரடி அழைப்பு போலவே தெரிவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறினர். எனினும், திருமாவளவன், விஜய்யை விமர்சித்து கடுமையாக அறிக்கை விட்டதோடு, திமுக கூட்டணியில் இருந்து விலக போவது இல்லை என ஆணித்தரமாக கூறினார்.
ஆனாலும் விஜய்யின் பேச்சு ஏற்படுத்திய தாக்கம் தமிழக அரசியலில் இன்னும் விவாதப் பொருளாகவே இருந்து வருகிறது. இதற்கிடையே, சென்னையில் வரும் டிசம்பர் 6 ஆம் தேதி நடைபெறும் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் தவெக தலைவர் விஜய்யும் திருமாவளவனும் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியானது. திருமாவளவன் புத்தகத்தை வெளியிட விஜய் அதனை பெற்றுக்கொள்வார் என்று சொல்லப்பட்டது.
வரும் 2026 சட்டமன்ற தேர்தல் தான், தங்களின் இலக்கு என்றும் பாஜக மற்றும் திமுக கட்சிகளை நேரடியாக விமர்சித்த விஜய், பிற கட்சிகளை விமர்சிக்கவில்லை. இதனால் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளை தனது கட்சி பக்கம் இழுக்கவும் விஜய் வியூகம் வகுத்து தான் இப்படி விமர்சித்ததாக பேசப்படுகிறது. திமுகவை தனது அரசியல் எதிரியாக பிரகடனப்படுத்தியிருக்கும் விஜய்யுடன் ஒரே மேடையில் திருமாவும் பகிர்ந்து கொள்ளவிருப்பதை திமுக தலைமை அவ்வளவாக ரசிக்கவில்லை என்று கூறப்பட்டது. இந்த நிலையில்தான், நடிகர் விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் தன்னால் பங்கேற்க முடியாது என்று திருமாவளவன் கூறினார்.
தற்போதைய அரசியல் சூழலில், விஜய்யுடன் ஒரே மேடையை பகிர்ந்தால் அது தேவையில்லாத அரசியல் யூகங்களுக்கும் விவாதங்களுக்கும் வித்திடும் எனக் கருதிய திருமாவளவன் இந்த முடிவை எடுத்து இருப்பதாக சொல்லப்படுகிறது. தனது முடிவை நிகழ்ச்சியை நடத்தும் தனது கட்சியின் துணைப் பொதுச் செயலாளரான ஆதவ் அர்ஜுனாவின் நிறுவனத்திடமும் திருமாவளவன் தெரிவித்துவிட்டதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் புத்தக வெளியீட்டு விழாவில் விஜய் பங்கேற்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. புத்தகத்தை விஜய் வெளியிட ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு பெற்றுக் கொள்கிறார். இந்த நிலையில் விஜய் காரணமாக, அம்பேத்கரா? திமுக கூட்டணியா? என குழப்பத்தில் இருந்த திருமாவளவன், தற்போது திமுக கூட்டணியை தேர்ந்தெடுத்து இருப்பதாக விமர்சிக்கப்படுகிறது.
குறிப்பாக விடுதலை சிறுத்தைகளை தொடர்ந்து விமர்சித்து வரும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இது தொடர்பாக பேசி இருக்கிறார். "அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் விஜய் கலந்து கொள்வதால் திருமாவளவன் கலந்து கொள்ளவில்லை. அம்பேத்கர் எங்களது கொள்கை தலைவர். அவரை ஒரு சிலர் பட்டியலின தலைவராக தோற்றத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
அம்பேத்கர் தேசிய தலைவர், மகாத்மா காந்தியை போன்று அவர் ஒரு தேசிய தலைவர். அவரைக் குறித்து நூல் வெளியிடுவது இதைவிட மகிழ்ச்சி மற்றும் சந்தோஷம் ஏதாவது இருக்குமா? அந்த நிகழ்ச்சியை திருமாவளவன் புறக்கணிக்கிறார் என்றால் அம்பேத்கருக்கு அவர் கொடுக்கும் மரியாதை அவ்வளவுதானா ? இது குறித்து அவர் சிந்திக்க வேண்டும். நீங்கள் அம்பேத்காரா திமுக கூட்டணியா என்பது குறித்து அவர் சிந்திக்க வேண்டும்" என பேசியிருக்கிறார். இதே கேள்வி தான் மற்ற அம்பேத்கரியவாதிகளின் சிந்தனையாகவும் இருக்கிறது.












Click it and Unblock the Notifications