"விஜய் வெற்றி பெற்றால் திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்யமாட்டார்” - சொல்வது கு.ப கிருஷ்ணன்
திருச்சி: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் 2 தொகுதிகளிலும் வெற்றி பெறுவார். மக்கள் விருப்பப்படி திருச்சி கிழக்கு தொகுதியை ஒருபோதும் அவர் ராஜினாமா செய்யமாட்டார் என லால்குடி தவெக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான கு.ப.கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் லால்குடி சட்டசபை தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன் தேர்தல் அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "அதிமுக வேட்பாளர் லீமா ரோஸ் மார்ட்டின் 500 ரூபாய், ஆயிரம் ரூபாய் என அச்சடிக்கப்பட்ட கூப்பன்களை விநியோகம் செய்து அதில் 5,000 ரூபாய், பத்தாயிரம் ரூபாய்க்கு என்ன பொருளை வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம் என கியூ ஆர் கோடுடன் விநியோகிக்கின்றனர்.

இதை பறிமுதல் செய்துள்ளோம். தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளோம். ஜனநாயகத்தை நம்பாமல் பணநாயகத்தை இரண்டு கட்சியும் நம்புகிறார்கள். மக்கள் தமிழக வெற்றி கழகத்திற்கு வாக்களித்து ஜனநாயகத்தை வெற்றி பெற செய்வார்கள்" என்றார்.
எந்த தேர்தலிலும் பார்க்காத அளவுக்கு இந்த முறை வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணம் பட்டுவாடா நடைபெறுகிறது. என்னை 20 கோடி ரூபாய்க்கு விலைக்கு வாங்கி விட்டதாக அதிமுக வேட்பாளர் லீமா ரோஸ் குற்றச்சாட்டை முன்வைத்து அதனை பரப்பி வருகின்றனர். இந்த பொய்யான குற்றச்சாட்டை பரப்புவதை கண்டிக்கிறேன்" எனத் தெரிவித்தார்.
இந்த முறை இரண்டு கட்சிகளும் பணப்பட்டுவாடா செய்தாலும் அதையும் தாண்டி மைக்ரோ லெவலில் பரப்புரை சென்று குடும்பத்திற்குள் உள்ள அனைவரும் தமிழக வெற்றி கழகத்திற்கு வாக்களிக்க தயாராகிவிட்டனர். திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் வெற்றி பெற்றால் ராஜினாமா செய்து விடுவதாக பரப்புரை செய்கிறார்கள்.
இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்று கிழக்கு தொகுதியை அவரை ராஜினாமா செய்ய மக்கள் விடமாட்டார்கள். வெற்றி பெற்ற மற்றொரு தொகுதியை எங்கள் தலைவர் ராஜினாமா செய்து கொள்ளட்டும். கிழக்கு தொகுதி மக்களின் விருப்பமே முக்கியம் எனத் தெரிவித்தார்.
தமிழக சட்டசபை தேர்தல் களத்தில் அனல் பறக்கிறது. வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடைபெற இருக்கும் நிலையில், இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்ந்துள்ளது. அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வந்த நிலையில், பிரச்சாரம் முடிவடைந்துள்ளது.
விஜய் இந்த தேர்தலில் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். ஒருவேளை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுவிட்டால் அதில் ஒரு தொகுதி எம்.எல்.ஏ பதவியை அவர் ராஜினாமா செய்ய வேண்டி இருக்கும். அங்கு இடைத்தேர்தல் நடத்தப்படும். இந்நிலையில் தான் திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்யமாட்டார் என தவெக நிர்வாகி கு.ப.கிருஷ்ணன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications