அடுத்தடுத்து பாசிட்டிவ் சிக்னல்.. கரூர் செல்லும் விஜய்! நாளை அனுமதி கேட்கிறது தவெக
சென்னை: கரூர் நெரிசலில் பாதிக்கப்பட்ட குடும்பத்தை விஜய் நேரில் சென்று சந்திக்கவில்லை என்கிற விமர்சனங்கள் இருக்கின்றன. இந்நிலையில், விஜய் கரூர் செல்ல, நாளை எஸ்பி அலுவலகத்தில் தவெக சார்பில் மனு அளிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த மாதம் 27ம் தேதி கரூரில் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார். விஜய்யை பார்க்க வந்த கூட்டம் நெரிசலில் சிக்கியது. இதில் குழந்தைகள், பெண்கள் என மொத்தம் 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் என தவெக வலியுறுத்தியிருந்தது.

பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பில் சிபிஐ விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் இன்று இடைக்கால தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், சிபிஐ விசாரணை நடத்தப்படும் என்றும், தமிழக அரசு அமைத்திருந்த அருணா ஜெகதீசன் ஆணையம் மற்றும் வடக்கு மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையிலான விசாரணை குழு ஆகியவை விசாரணை நடத்தக்கூடாது என்றும், இதுவரை மேற்கொண்ட விசாரணை ஆவணங்களை சிபிஐ வசம் தாக்கல் செய்யவும் தீர்ப்பு வழங்கப்பட்டது.
தவெக எதிர்பார்த்தபடி, பாசிட்டிவ் அம்சங்கள் நடந்துக்கொண்டிருக்கும் நிலையில், தவெக நிர்வாகிகள் அடுத்த கட்ட வேலையில் இறங்கியுள்ளனர். குறிப்பாக தவெக நிர்வாகியும் ஜேப்பியார் தொழில்நுட்பக் கல்லூரி தலைவருமான மரிய வில்சன், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மாதம் ரூ.5000 வழங்கும் திட்டத்திற்கான பணிகள் நாளை முதல் தொடங்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதேபோல, மாநில இணை செயலாளர் சி.டி.நிர்மல்குமார் விஜய்யை அவரது இல்லத்தில் வைத்து சந்தித்திருக்கிறார்.
பின்னர் செய்தியாளர்களுக்கும் பேட்டியளித்திருக்கிறார். கரூர் சம்பவத்தையடுத்து தற்போது தவெக நிர்வாகிகள் ஆக்டிவாக செயல்பட தொடங்கியுள்ளனர். இந்நிலையில், விஜய் கரூர் போக எஸ்பி அலுவலகத்தில் நாளை மனு கொடுக்க தவெக திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கெனவே டிஜிபியிடம் இது தொடர்பாக தவெக மனு கொடுத்திருந்தது. அதில் கட்சியினர் வைத்த கோரிக்கைகள் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது.
"விஜய் தனி விமானத்தில் திருச்சி வருவேன். ஆனால் சென்னை, திருச்சி இரண்டு விமான நிலையங்களிலும் ரசிகர்கள் பொதுமக்கள் இருக்கக் கூடாது. திருச்சி விமான நிலையம் முதல் கரூர் வரை க்ரீன் காரிடர் வேண்டும். செல்லும் வழியில் உள்ள வேகத்தடைகள் அகற்ற வேண்டும். கரூரில் துக்கம் விசாரிக்கும் வீடுகளை தவிர, சந்திக்கப் போகும் இடத்தில் வேறு யாரும் இருக்கக் கூடாது. பத்திரிகை, டிவி நிருபர்கள் படம் பிடிக்கவோ, கேள்வி கேட்கவோ அனுமதிக்கக் கூடாது" என்று கூறப்பட்டிருந்தது.
அந்த வகையில் நாளை மனு கொடுக்கும்போது தவெக என்னென்ன கோரிக்கைகளை முன்வைக்கிறது என்பது கேள்வியாக எழுந்திருக்கிறது.












Click it and Unblock the Notifications