விஜய் ஒரு பச்சைத் தமிழர் தான்.. ஆனால் தவெக உடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை.. வேல்முருகன் அறிவிப்பு!
சென்னை: சட்டசபைத் தேர்தலில் தவெக தலைவர் விஜய்யுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை என்று தவாக தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். விஜய் ஒரு பச்சைத் தமிழர் என்று கூறிய வேல்முருகன், எதிர்காலத்தில் சீமானுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணியில் வன்னியர் சமூக முகமாக இருந்த தமிழக வாழ்வுரிமை கட்சி திடீரென அந்த கூட்டணியில் இருந்து வெளியில் வந்துள்ளது. தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் முன் வைத்த கோரிக்கைகளை திமுக ஏற்கவில்லை. நெய்வேலி, பண்ருட்டி உட்பட 4 தொகுதிகளை வேல்முருகன் கேட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் திமுகவும் அவரை கண்டுகொள்ளவில்லை என்று தெரிகிறது.

இதன் காரணமாக கூட்டணியில் இருந்து வெளியேறிய வேல்முருகன், 10 அம்ச கோரிக்கைகளை திமுக ஏற்க முன் வரவில்லை என்று தெரிவித்தார். அதேபோல் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய அவர், அதிமுக கூட்டணி பக்கம் நகர்வார் என்று கருதப்பட்டது. ஆனால் அதே பேட்டியில், பாஜக இருக்கும் கூட்டணியில் ஒருபோதும் இணைய மாட்டேன் என்று அறிவித்து அதிர்ச்சி ஏற்றினார்.
தொடர்ந்து இந்த தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை என்று கூறிய வேல்முருகன், இம்முறை தனது கட்சியினர் போட்டியிடுவார்கள் என்று கூறினார். இந்த நிலையில் தவாக தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், நாங்கள் தனித்து போட்டியிடுவோம் என்று அறிவிக்கவில்லை. எங்களை நோக்கி பல்வேறு அமைப்புகள் வருகிறார்கள்.
வேட்புமனு தாக்கல் முடிவடையும் கடைசி நாளில் கூட மிகப்பெரிய அரசியல் மாற்றம் உருவாகும். அதற்கான வாய்ப்புகள் உள்ளது. விஜய்யுடன் கூட்டணி வைப்பதற்கான வாய்ப்பு கிடையாது. விஜய் இப்போதுதான் அரசியலுக்கு வந்துள்ளார். அவர் மக்கள் பிரச்சனைகளை பேசட்டும். விஜய் ஒரு பச்சைத்தமிழர். விஜய் அரசியலுக்கு வந்த போது, நான்தான் முதல் அரசியல்வாதியாக வரவேற்றேன்.
அதேபோல் விஜய் அவரை யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம் என்ற நிலையை உருவாக்க வேண்டும். இந்த தேர்தலில் தவெக உடன் தவாக கூட்டணி இல்லை. திமுக, அதிமுக மற்றும் தேசிய கட்சிகளுக்கு பாடம் கற்பிக்க எந்த முடிவையும் கூட எடுப்போம். பண்ருட்டி தொகுதியில் தான் நான் நேரடியாக போட்டியிடவில்லை. 234 தொகுதிகளில் போட்டியிடுவதற்கான கட்டமைப்பு தவாகவிடம் இருக்கிறது.
வருங்காலத்தில் சீமானுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளது. மண்ணுக்கும், மொழிக்கும் எதிரானவர்களுக்கு எதிராக எங்களுக்குள் இருக்கும் மனக்கசப்புகளை கடந்து நாங்கள் அரசியல் மாற்றத்திற்காக அமர்ந்து பேசுவோம் என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை என்பதையும் அழுத்தமாக கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications