25 ஆயிரம் போலி பூத் கமிட்டி.. ஆதாரங்களுடன் சொன்ன தவெக நிர்வாகி.. அப்செட்டான விஜய்
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் சார்பாக அமைக்கப்பட்ட பூத் கமிட்டிகளில் சுமார் 25 ஆயிரம் பூத் கமிட்டி போலி என்பதை விஜய் அறிந்து அப்செட்டாகி இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. இதனால் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை கடிந்து கொண்ட விஜய், மாவட்டச் செயலாளர்களுக்கு டோஸ் விட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு ஆகஸ்ட் 21ஆம் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மதுரை மாநாட்டுக்கான ஏற்பாடுகளை அக்கட்சியின் நிர்வாகிகள் தீவிரப்படுத்தி இருக்கின்றனர். மதுரையில் முதலில் பூத் கமிட்டி மாநாடு நடத்துவதாகவே இருந்தது. கோவைக்கு பின் மதுரையில் நடக்கலாம் என்று அக்கட்சியினர் ஆலோசித்து வந்தனர்.

ஆனால் திமுக மற்றும் அதிமுகவின் தேர்தல் பணிகள் ஓராண்டுக்கு முன்பாகவே தொடங்கப்பட்டுவிட்டதால், தவெகவும் மாநாடு மூலமாகத் தேர்தல் பணிகளைத் தொடங்க திட்டமிட்டிருக்கிறது. இதனிடையே மாவட்டச் செயலாளர்களுக்கு பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை விரைவுபடுத்த விஜய் உத்தரவிட்டிருந்தார். ஏனென்றால் பூத் கமிட்டி தான் ஒரு கட்சியின் அடிப்படை கட்டமைப்புக்கு வலுவான தூணாக இருக்கும்.
இதனால் பூத் கமிட்டி விவகாரத்தில் விஜய் தீவிரமாக இருந்து வருகிறார். இந்த நிலையில் மதுரை மாநாட்டுக்கு முன்பாகவே பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை முடிக்க விஜய் அறிவுறுத்தி இருந்தார். இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பாக மாவட்டச் செயலாளர்கள் தரப்பில் அமைக்கப்பட்ட பூத் கமிட்டி பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விஜய் கைகளில் கொடுத்துள்ளார்.
இதனால் உற்சாகமான விஜய், உடனடியாக 2 நிர்வாகிகளிடம் கொடுத்து பரிசோதனை மேற்கொள்ளக் கூறி இருக்கிறார். அந்த பூத் கமிட்டி பட்டியலில் சுமார் 25 ஆயிரம் பூத் கமிட்டிகள் போலியானவை என்று தெரிய வந்துள்ளது. இதனை ஆதாரத்துடன் தவெக நிர்வாகிகள் விஜய் முன் போட்டு உடைத்துள்ளனர். இதனால் விஜய் மிகுந்த சோகத்திற்கு உள்ளாகி இருக்கிறார்.
உடனடியாக புஸ்ஸி ஆனந்தை அழைத்து என்னவென்று விசாரித்திருக்கிறார். அதில் மாவட்டச் செயலாளர்கள் செய்யும் தவறுகள் புஸ்ஸி ஆனந்த்-க்கும் தெரியவில்லை என்று புரிந்துள்ளது. இதனால் புஸ்ஸி ஆனந்த் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் என்று இரு தரப்புக்கும் விஜய் கடுமையான டோஸ் விட்டுள்ளார். இதனால் புஸ்ஸி ஆனந்த், மாவட்டச் செயலாளர்களிடம் இப்படி மாட்டிவிட்டுவிட்டீர்களே என்று கொந்தளித்திருக்கிறார்.
தொடர்ந்து மதுரை மாநாட்டுக்கு முன்பாக பூத் கமிட்டி பணிகளை விரைந்து முடிக்க விஜய் கூறி இருக்கிறார். இதனால் மாவட்டச் செயலாளர்கள் பலருக்கும் கூடுதல் சிக்கல் உருவாகி இருக்கிறது. விஜய் இன்னும் களத்திற்கு வராத சூழலில், மாவட்டச் செயலாளர்கள் அரசியல் பணிகளை மேற்கொள்வதில் சுணக்கம் காட்டி வருவதாகவும் விவரம் அறிந்தவர்கள் கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications