"கேப்டன்" விட்டு சென்ற வேலைகளை கையில் எடுக்கும் "வைஸ் கேப்டன்".. உற்சாகத்தில் தேமுதிக!
ஆசிரியர்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு விஜய பிரபாகரன் ஆதரவு அளித்துள்ளார்.
சென்னை: கேப்டன் விட்டு சென்ற வேலைகளை வைஸ் கேப்டன். அதாங்க விஜய பிரபாகரன் செய்ய ஆரம்பித்து விட்டார்.. உற்சாகமாகியுள்ளது தேமுதிக தரப்பு.
பொதுவாக, மற்ற கட்சிகளின் களப்பணிகள் போல தேமுதிக பெரிதாக இறங்குவதில்லை என்ற பரவலான கருத்து மிக ஆழமாகவே உள்ளது.
எப்பவுமே கட்சி சார்பில் ஒரு கூட்டம் நடத்தப்படும், அதற்கு ஆட்கள் திரண்டோ அல்லது திரட்டப்பட்டோ வருவார்கள். இப்படித்தான் இத்தனை வருடங்களாக நடந்து வந்து கொண்டிருக்கிறது.

கடந்த கால அரசியல்
ஆனால் மக்களை நாம் எந்த அளவுக்கு அணுகுகிறோமோ அந்த அளவுக்கு மக்களும் நம்மை நெருங்கி வருவார்கள் என்பதுதான் கடந்த கால அரசியல் தந்த பாடங்கள். இதை இப்போதுதான் தேமுதிக புரிந்து கொண்டுள்ளது போலும்.

டிபிஐ வளாகம்
சென்னை டிபிஐ வளாகத்தில் போராடி வரும் இடைநிலை ஆசிரியர்களுக்கு விஜயபிரபாரகன் இன்று நேரில் சென்று தனது ஆதரவை தெரிவித்திருக்கிறார்.

ஸ்டாலின், தினகரன்
டிபிஐ வளாகத்தில் 5 நாட்களுக்கும் மேலாக போராடக்கூட திராணியற்று, கொத்து கொத்தாக மயங்கி விழுந்து, கோரிக்கைகளை முன்வைத்து போராடி வருகிறார்கள் இடைநிலை ஆசிரியர்கள். இவர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின், அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் நேரில் சென்று தங்கள் ஆதரவினை தெரிவித்து வருகிறார்கள்.

விஜய பிரபாகரன்
அந்த வரிசையில் இப்போது விஜயபிரபாகரனும் நேரில் சென்று ஆதரவு தந்திருக்கிறார். அப்பா, அம்மா ஊரில் இல்லாத நிலையில், விஜய பிரபாகரனின் செயல்பாடுகள் அனைவருக்கும் ஆச்சரியத்தை தந்து வருகிறது. குறிப்பாக இளைஞர்கள் இவரது அணுகுமுறையை வரவேற்றுள்ளார்கள்.

கட்சி சாய்ந்திருக்காது
இப்படி பொது மக்கள் விஷயங்களை தேமுதிக அன்றைக்கே கையில் எடுத்திருந்தால், இவ்வளவு பலவீனம் அந்த கட்சிக்கு வந்திருக்காது. மக்களை அன்றே நெருங்கி அவர்களின் பிரச்சனைகளை அணுகியிருந்தால், கட்சி சாய்ந்திருக்காது.

தேமுதிகவினர் உற்சாகம்
அப்பா கட்சி என்ற மிதப்பு இல்லாமல், அடி மட்ட தொண்டனாகவே தன்னை நினைத்து ஆர்ப்பாட்டம், போராட்டம், என்று மக்களை அணுகுவது தேமுதிகவினர் மத்தியில் உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications