காலையிலேயே ஹேப்பி.. தமிழகம் முழுதும் இன்று விஜயதசமி கொண்டாட்டம்.. கோயில்களில் சிறப்பு வழிபாடுகள்
சென்னை: தமிழகம் முழுவதும் இன்று விஜயதசமி பண்டிகையை தமிழக மக்கள் சிறப்பித்து வருகிறார்கள். வெற்றி திருநாள் என்று சொல்லக்கூடிய இன்றைய தினம், வாழ்த்துக்களை பரிமாறி கொண்டு, பொதுமக்கள் வீடுகளில் பூஜைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
தற்போது, 4 நாட்கள் தொடர் விடுமுறையால் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு 12 லட்சம் பேர் படையெடுத்துள்ளனர். சுற்றுலா தலங்களிலும் மக்கள் குவிந்துள்ளனர். வீடுகளிலும், ஆயுத பூஜை கொண்டாட்டங்கள் களைகட்டி வருகின்றன.

பண்டிகை: 9 நாள் நவராத்திரி பண்டிகையின் நிறைவை கொண்டாடும் வகையில், நேற்று தமிழகம் முழுவதும் ஆயுதபூஜை கொண்டாடப்பட்டு வருகிறது.. தொழில் வளம் சிறக்கவும், கல்வி மேம்படவும் ஆயுத பூஜை சிறப்புடன் கொண்டாடப்பட்டு வருகிறது.
கல்விக்குரிய சரஸ்வதி, செல்வத்துக்குரிய லட்சுமி, வீரத்துக்குரிய பார்வதி போன்றோரை வணங்கக்கூடிய பண்டிகைதான் நவராத்திரி. இந்த பண்டிகையின் ஒன்பதாவது நாளில் ஆயுத பூஜையும், சரஸ்வதி பூஜையும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆயுதபூஜையில், தங்களது தொழிலுக்கு உறுதுணையாக இருக்கும் பொருட்களை, முன்வைத்து பூஜைகள் செய்யப்படுவது வழக்கம்.
கருவிகள்: அந்தவகையில், தொழில் நிறுவனங்களிலும் நேற்று சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. நம்முடைய தொழிலுக்கு பயன்படுத்தும் பொருட்களை வைத்து, அதற்கு தீப, தூப ஆராதனை காட்டி வழிபடுவதே இந்த ஆயுத பூஜையின் நோக்கம் என்பதால், தொழிலுக்கும், போக்குவரத்திற்கும், பயன்படுத்தக்கூடிய ஆயுதமாக விளங்கும் சைக்கிள், கார், பைக்குகளை, தண்ணீர் ஊற்றி, கழுவி, சுத்தம் செய்து அவைகளை அலங்கரித்தனர். பின்னர், பொரி, தேங்காய், பழங்களை கொண்டு, பொதுமக்கள் வழிபட்டனர்.
கல்விக்கு உதவும் சரஸ்வதியை வழிபடும் வகையில், கல்வி உபகரணங்களை வைத்தும் பூஜை செய்யப்படுகின்றன. நாம் செய்யும் செயல்கள், வித்தைகள் அனைத்திற்கும் அதிபதி சரஸ்வதி என்பதால், வீட்டிலுள்ள கருவிகள், எழுதுகோல்கள், புத்தகங்கள் அனைத்தையும் அழகுற வைத்து, இந்த பூஜைகள் நடத்தப்பட்டன.
விஜயதசமி: இன்று விஜயதசமி என்பதால், பொதுமக்கள் தங்களது வீடுகளில் வழிபாடு நடத்தி வருகிறார்கள்.. அதுபோலவே, இன்று விஜயதசமி.. விஜயதசமி என்றால், வெற்றி தருகிற நாள் என்று அர்த்தம்.
அதனால்தான், சிறுவர்கள் இன்றைய விஜயதசமி நன்னாளில், ஆரம்பக்கல்வியை தொடங்கினால், அவர்கள் மென்மேலும் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்று நம்பப்படுகிறது.. வீடுகளில் பூஜைகளை செய்தும், கோவில்களுக்கு சென்றும் விஜயதசமியை பொதுமக்கள் கொண்டாடி வருகிறார்கள். விஜய தசமியை முன்னிட்டு கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு வருகின்றன.

மாணவர்கள்: இன்றைய தினம், அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை நடத்திட தொடக்க கல்வித்துறை உத்தரவிட்டிருக்கிறது.. அந்தவகையில், தொடக்க கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள், பள்ளிகளுக்கு சென்று மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.
பெற்றோர்களும், இந்த தினத்தில் தங்கள் குழந்தைகளைக் கை விரல் பிடித்து, நெல்லை தட்டில் பரப்பி, முதல் எழுத்தாக "அ" என்று எழுதப்பழக்குவார்கள் என்பதால், குழந்தைகளுக்கான கல்வி வித்யாரம்பம் இன்று நடைபெறுகிறது.. அதேபோல, சிறிய கடைகள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை தொழில் சிறப்பதற்காகவும், தாங்களும், தங்களின் கடைகளுக்கு வருபவர்களும் எல்லா நலன்களும் பெற்று சிறப்பாக வாழவும் பொதுமக்கள் வழிபட்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications