விஜயதாரணி பாஜகவில் இனைந்ததை.. ஸ்வீட் எடுத்து கொண்டாடிய காங்கிரஸ் விளவங்கோடு தொகுதி நிர்வாகிகள்
சென்னை: விஜயதாரணி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் விஜயதாரணியை விமர்சித்து வருகிறார்கள். இந்த நிலையில், விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் விஜயதாரணி கட்சியில் இருந்து விலகியதை இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி. கன்னியாகுமரி மாவட்டத்தின் உள்ள விளவங்கோடு தொகுதியில் எம்எல்ஏவாக உள்ளார். இந்த விளவங்கோடு தொகுதியில் இருந்து 3 முறை எம்எல்ஏவாக விஜயதாரணி வெற்றி பெற்றுள்ளார். தமிழக சட்டசபையில் காங்கிரஸ் கட்சியின் முதன்மை கொறடா, காங்கிரஸ் அகில இந்திய மகளிரணி அணி பொறுப்பு உள்ளிட்ட பதவிகளில் இருந்து வந்தார்.

பாஜகவில் இணைந்த விஜயதாரணி: இந்த நிலையில், விஜயதாரணி இன்று காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். சென்னையில் உள்ள பாஜக தலைமையகத்தில் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். விரைவில் லோக்சபா தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விஜயதாரணி பாஜகவில் இணைந்திருப்பது காங்கிரஸ் கட்சிக்கு சற்று பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
மக்கள் மன்னிக்க மாட்டார்கள்: காங்கிரசில் இருந்து விலக காரணங்களை கூறியுள்ள விஜயதாரணி, நடக்க இருக்கும் லோக்சபா தேர்தல் போட்டியிட சீட் கேட்டு காங்கிரஸ் தலைமையிடம் பேசியதாகவும், அதற்கு தலைமை சம்மதிக்கவில்லை என்ற காரணத்தால் அதிருப்தியில் பாஜகவில் இணைந்ததாக தெரிவித்துள்ளார். எம்எல்ஏவாக இருக்கும் விஜயதாரணி கட்சி மாறியிருப்பதால், கட்சி தாவல் தடை சட்டத்தின் மூலம் அவர் எம்எல்ஏ பதவியை இழப்பார் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறினார்.
காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த விஜயதாரணியை காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் விமர்சித்து வருகின்றனர். விஜய் வசந்த் எம்பி கூறுகையில், "விஜயதாரணி மாற்று கட்சியில் இணைந்தது அவரை மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக்கி அழகு பார்த்த விளவங்கோடு தொகுதி மக்களுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் செய்த மிகப்பெரிய துரோகம் என்றும் மக்கள் அவரை மன்னிக்க மாட்டார்கள் என்று கூறினார்.
இனிப்பு வழங்கி கொண்டாட்டம்: இவ்வாறு காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் விஜயதாரணியை விமர்சித்து வரும் நிலையில், விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் விஜயதாரணி கட்சியில் இருந்து விலகியதை இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர். மேலும் "வென்றே தீரும்.. வென்றே தீரும்.. காங்கிரஸ் கட்சி வென்றே தீரும்.. என்ற கோஷமிட்டு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
மேலும் ஒருவருக்கு வாழ்த்துக்கள் என்று கூறியும்.. கொண்டாடுவோம்.. கொண்டாடுவோம்.. பீடை போனதை கொண்டாடுவோம்.. காங்கிரசை பிடித்த பீடை.. ஒழிந்தது.. ஒழிந்தது.. ஒழிக ஒழிக.. விஜயதாரணி ஒழிக.. விஜயதாரணியை கண்டிக்கிறோம் என்றும் சாலையில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் சாலையில் பொதுமக்களுக்கு இனிப்பு கொடுத்து கொண்டாடினர்.












Click it and Unblock the Notifications