இது என்ன புது வேஷம்.. எதற்காக இந்த முண்டாசு.. விளக்குகிறார் விஜயதாரணி
சென்னை: காங்கிரஸ் கட்சி விவசாயிகளின் நண்பன் என்பதை காட்டுவதற்காகவும் கருப்புச் சட்டங்கள் வாபஸ் பெற வேண்டும் என்பதற்காகவும் நாங்கள் தலையில் பச்சை முண்டாசை கட்டியிருந்தோம் என காங்கிரஸ் கட்சியின் விளவங்கோடு எம்எல்ஏ விஜயதாரணி விளக்கமளித்துள்ளார்.
தமிழக சட்டசபை கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. அப்போது ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றினார். சட்டசபைக்கு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தலையில் பச்சை நிறத்தில் துண்டை முண்டாசு போல் கட்டிக் கொண்டு வந்திருந்தனர்.
இதுகுறித்து விஜயதாரணி ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், தலையில் முண்டாசு எதற்கென கேட்கிறீர்கள். இந்த வேஷம் போட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

பச்சை துண்டு
இது ஏன் என்பது உங்கள் அனைவருக்கும் புரியும் என நினைக்கிறேன். குறிப்பாக இந்த பச்சை துண்டை அணிவது விவசாயிகள்தான். இந்த விவசாய சட்டங்கள் இந்த நாட்டிற்கு எத்தனை விரோதமாக இருக்கிறது?

உணவுக் கழகம் மூடல்
இந்த சட்டத்தால் ஆதார விலையை இழந்துள்ளோம். தமிழகத்தில் இருக்கும் இலவச அரிசி திட்டம் கைவிட கூடிய சூழல் இந்த வேளாண் சட்டங்களால் ஏற்படும். அது போல் அத்தியாவசிய பொருட்களை கார்பரேட் கையில் ஒப்படைப்பது, உணவுக் கழகத்தை மூடும் நிலை உள்ளிட்டவை ஏற்படும்.

விவசாயிகளின் நண்பன்
இது நிறைய சிரமங்களை மக்களுக்கு ஏற்படுத்தும். இதை எடுத்துரைப்பதற்காகத்தான் நாங்கள் ஆளுநர் உரையை புறக்கணித்தோம். காங்கிரஸ் கட்சி தலையில் பச்சை துண்டை முண்டாசு போல் கட்டியதே எங்கள் கட்சி விவசாயிகளின் நண்பன் என காண்பிப்பதற்காகவே!
போராட்டம்
இந்த துண்டை கட்டிக் கொண்டுதான் சட்டசபையில் உட்கார்ந்திருந்தோம். சட்டசபையை புறக்கணிப்பும் செய்தோம். விவசாயிகளுக்கான போராட்டம் தொடர்ந்து டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டங்கள் வெற்றி பெற வேண்டும். இந்த கருப்புச் சட்டங்கள் வாபஸ் பெற வேண்டும். அதற்காகத்தான் இந்த போராட்டமே தவிர, இது வேஷம் அல்ல. விஷயம் இருக்கிறது என்றார் விஜயதாரணி.












Click it and Unblock the Notifications