குவியும் மக்கள்.. சென்னை தீவுத்திடலில் வைக்கப்படும் விஜயகாந்த் உடல்.. இறுதி ஊர்வலத்தின் ரூட் இதுதான்
சென்னை: இடநெருக்கடி காரணமாக நடிகரும், தேமுதிகவின் நிறுவன தலைவருமான விஜயகாந்தின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக தேமுதிக அலுவலகத்தில் இருந்து சென்னை தீவுத்திடலுக்கு கொண்டு செல்லப்பட உள்ளது. மேலும் நாளை இறுதி ஊர்வலம் நடக்கும் ரூட் விபரம் வெளியாகி உள்ளது.
நடிகராக இருந்து அரசியலில் நுழைந்தவர் விஜயகாந்த். தேமுதிகவின் நிறுவன தலைவரான இவர் உடல் நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் இன்று காலமானார். அவரது உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள், திரைபிரபலங்கள் விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் மாநிலம் முழுவதும் இருந்து கட்சியின் தொண்டர்கள், ரசிகர்கள் ஏராளமானவர்கள் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த கூடி வருகின்றனர்.
இதனால் நேரம் செல்ல செல்ல தேமுதிக அலுவலகத்தில் கூட்டம் என்பது அதிகரித்து வருகிறது. அதிகளவில் மக்கள் கூட அங்கு போதிய இடவசதி இல்லை. இதனால் விஜயகாந்தின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட உள்ளது. விஜயகாந்தின் உடல் ராஜாஜி ஹாலுக்கு கொண்டு செல்லப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அங்கு பராமரிப்பு பணி நடைபெற்று வருவதால் தீவுத்திடலுக்கு எடுத்து செல்லப்பட உள்ளது.

தேமுதிக அலுவலகத்தில் இருந்து விஜயகாந்தின் உடல் நாளை அதிகாலை 4 மணிக்கு தீவுத்திடலுக்கு எடுத்து செல்லப்பட உள்ளது. இதையடுத்து அங்கு வைத்து மக்கள் அவருக்கு அஞ்சலி செலுத்த உள்ளனர். அதன்பிறகு மதியம் 1 மணிக்கு விஜயகாந்த் உடல் தீவுத்திடலில் இருந்து தேமுதிக அலுவலகம் எடுத்து வரப்பட உள்ளது. இதையடுத்து இறுதி சடங்குகள் செய்யப்பட்டு மாலை 4.45 மணிக்கு விஜயகாந்தின் உடல் தேமுதிக அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது. இதுபற்றி தேமுதிக சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
‛‛தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்த் இன்று காலை 1.10 மணிக்கு மறைவு என்ற செய்தி தேமுதிகவிற்கும், திரையுலகிற்கும், உலகில் உள்ள அனைத்து தமிழக மக்களுக்கும் பேரிழப்பாகும். பொதுமக்கள், கட்சி தொண்டர்கள், அரசியல் பிரமுகர்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் கலைத்துறை சேர்ந்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் விஜயகாந்த்துக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நாளை காலை 6 மணியிலிருந்து மதியம் 1 மணி வரை சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட உள்ளது. அதன்பிறகு மதியம் 1 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு பூந்தமல்லி சாலை வழியாக தேமுதிக தலைமை கழக அலுவலகம் அடைந்து இறுதிச்சடங்குகள் நடத்தப்பட்டு மாலை 4.45 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படுகிறது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications