பண பலத்தை மீறி தேர்தலில் நிற்கிறோம், துவண்டு விடாதீர்கள்: தேமுதிக தொண்டர்களுக்கு விஜயகாந்த் அழைப்பு
சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற தேமுதிக வேட்பாளருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ள கட்சியின் பொதுச் செயலாளர் விஜயகாந்த், துவண்டு விடாமல் வெற்றியை நோக்கி அயராது பாடுபட வேண்டும் என்று தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை:
உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற தேமுதிக வேட்பாளர்களுக்கும் தேமுதிக சார்பில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கும் எனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறேன்.

முரசு சின்னம்
9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில்
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி ஒன்றியத்திற்குட்பட்ட தும்பேரி 2வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு முரசு சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருமதி செல்வி பழனிக்கு எனது வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

வாழ்த்துக்கள்
இதேபோல் தேமுதிக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கும், சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தேமுதிக வேட்பாளர்களின் வெற்றிக்காக அரும்பாடு பட்ட அனைத்து மாவட்ட செயலாளர்கள், கழக நிர்வாகிகள், கழக தொண்டர்கள் என அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
Recommended Video

பண பலம்
தேர்தலில் வெற்றி தோல்வி என்பது சகஜம். அதிகார பலம், பண பலத்தை மீறி நாம் தேர்தல் களத்தில் நிற்கிறோம். உண்மை, நேர்மை, உழைப்பை மட்டுமே நம்பி நாம் தேர்தலை எதிர்கொண்டோம். நமக்கான காலம் நிச்சயம் வரும். அதுவரை கழக தொண்டர்கள் துவண்டு விடாமல் வெற்றியை நோக்கி அயராது பாடுபட வேண்டும். இவ்வாறு விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சி தேர்தல்
நடந்த முடிந்த 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில், திமுக அமோக வெற்றி பெற்றது. அதிமுக அதிக தொகுதிகளில் தோல்வியடைந்துள்ளது. தேமுதிக, ம.நீ.ம, நாம் தமிழர் போன்ற கட்சிகள் மிக மோசமாக தோல்வியை தழுவியுள்ளன. இந்த நிலையில், விஜயகாந்த் இவ்வாறு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். விஜயகாந்த் பிரச்சாரத்திற்கு வராத நிலையில், சட்டசபை தேர்தல் அதற்கு முன்பு லோக்சபா தேர்தல் உள்ளிட்டவற்றில் தொடர்ந்து, தேமுதிக மோசமாக தோற்று வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications