பிறந்தநாளை வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடிய கேப்டன் விஜயகாந்த்.. பலர் பசியாற்றிய வள்ளல்
சென்னை: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது பிறந்த நாளை வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடியதோடு நலத்திட்ட உதவிகளை வழங்கி வந்தார். லட்சக்கணக்கான தொண்டர்களின் பசியாற்றியவர் விஜயகாந்த் என்று அவரால் பலனடைந்த பலரும் கண்ணீர் மல்க கூறி வருகின்றனர்.
நடிகர் விஜயகாந்த் பல ஆண்டுகளாகவே தனது பிறந்த நாளை பல ஆண்டுகாலம் சிறப்பாக கொண்டாடாமல் இருந்தார். இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும்போதுதான் எனது பிறந்த நாளை நான் கொண்டாடுவேன் என்று அவர் கூறியிருந்தார்.

தனது பிறந்த நாள் கொண்டாட்டத்திற்குப் பதில் அன்றைய தினம் நலத்திட்ட உதவிகள் வழங்குவதை அவர் வழக்கமாக வைத்துள்ளார். கடந்த 2006ஆம் ஆண்டு முதல் தனது பிறந்த நாளை வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடி வருகிறார் விஜயகாந்த்.
2020ஆம் ஆண்டு கொரோனா காலத்தில் என்பதால் இந்த முறை சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் விஜயகாந்த் கிராமப்புற சுகாதார திட்டத்தை, வறுமை ஒழிப்பு தினத்தில் கடைபிடிக்க வேண்டும் என்று தொண்டர்களுக்கு அறிவித்திருந்தார்.
மக்களின் முதுகெலும்பான கிராமத்தில் இருந்து இத்திட்டம் தொடங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் கிராமங்கள் தோறும் கபசுர குடிநீர்,முகக்கவசம், கையுறை, சோப்புகள், சானிடைசர் கொசு மருந்து தெளிப்பது மற்றும் ஏழை எளிய மக்களுக்கு மளிகை பொருட்கள், காய்கறி உள்ளிட்ட நிவாரண உதவி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள், பேனா பென்சில் போன்றவற்றை வழங்க வேண்டும்.
ஆதரவற்றவர்களுக்கு தேவையான துணிமணிகள் வழங்குவது, ஆதரவற்ற குழந்தைகள், முதியோர் இல்லங்களுக்கு உணவளிப்பது ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்குவது, குடியிருப்புகள் மற்றும் சாலைகளில் தேங்கியுள்ள கழிவு நீரை அகற்றுவது விபத்தை தவிர்க்கும் வகையில் வேகத்தடைக்கு கலர் பெயிண்ட் அடிப்பது மற்றும் கொரோனா மருத்துவ உபகரணங்களை வழங்குவது போன்ற பணிகளையும், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்களை பாராட்டுவது ஆகிய திட்டங்களையும், கிராமப்புற சுகாதார திட்டத்தின் மூலம் செயல்படுத்த வேண்டும்.
மேலும் ஏழைத் தாய்மார்கள் சுயதொழில் செய்வதற்காக தையல் இயந்திரங்களும், ஏழை சகோதரிகளின் திருமணத்திற்கு உதவிகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்களும், காது கேட்கும் கருவிகள் சலவைத் தொழிலாளர்களுக்கு நலிவுற்ற ஏழை கலைஞர்கள் எளிய புகைப்படக் சலவை பெட்டிகளும், விவசாயிகள் மற்றும் குடும்பங்களுக்கு தேவையான உதவிகள், நாடகக் கலைஞர்கள் மற்றும் கிராமப்புற தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள், சிறந்த மாணவர்களை தேர்ந்தெடுத்து காசோலை வழங்குதல், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தல், இலவச கணினி பயிற்சி மையம் அமைத்தல் உள்ளிட்ட பல திட்டங்களை பல ஆண்டுகளாக கழக நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
அதேபோல், இந்த ஆண்டும் கொரோனா இருக்கும் காலகட்டத்தில் தனது பிறந்தநாளன்று வறுமை ஒழிப்பு தினமாக இந்த திட்டங்களை செயல்படுத்துங்கள் என்று கேட்டுக்கொண்டிருந்தார் விஜயகாந்த். கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட பல மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்ய உத்தரவிட்ட விஜயகாந்த் இன்றைய தினம் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
விஜயகாந்த் பற்றி பேசும் பலரும் அவரது இரக்க குணம், வள்ளல் தன்மை, அனைவருக்கும் அன்போடு உணவு கொடுத்து உபசரிக்கும் தன்மை குறித்து பேசி கண்ணீருடன் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications