Vijayakanth: விஸ்வரூபம் எடுத்த விஜயகாந்த்.. கருணாநிதி, ஜெயலலிதாவை தூங்கவிடாமல் சாதித்த தேமுதிக!
சென்னை: மக்களிடையே அதிக அளவில் செல்வாக்கு பெற்றுள்ள நடிகர் விஜயகாந்த் தேமுதிக எனும் கட்சியை தொடங்கிய போது அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் தூக்கத்தை தொலைத்தன.
நடிகர் விஜயகாந்த்- இவருடைய இயற்பெயர் நாராயணன் விஜயராஜ் அழகர்சாமி. இவர் கடந்த 2005 ஆம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிட கழகம் எனும் கட்சியை தொடங்கினார்.

தமிழகத்தில் அதிமுக, திமுக எனும் கட்சிகளே மாறி மாறி ஆட்சி செய்துவந்தன. ஒன்றுக்கு ஒன்று மாற்று என்ற நிலையே இருந்தது. இதனால் இந்த 5 ஆண்டு இல்லைன்னா அடுத்த தேர்தலில் வெல்வோம் என்ற நம்பிக்கையில் இரு கட்சிகளுமே இருந்தன.
ஆனால் தேமுதிகவை விஜயகாந்த் ஆரம்பித்தவுடன் முன்னாள் முதல்வர்களான ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் புதிய கட்சி எடுபடாது என்றே நம்பிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில்தான் கடந்த 2006 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் வந்தது. அப்போது விஜயகாந்த் மக்களுடன் கூட்டணி என அறிவித்து தனித்து போட்டியிட்டார்.
அப்போது அவர் மட்டும் விருத்தாசலம் என்ற தொகுதியில் முதல் முறையாக வென்றார். அதுவும் எதிர்க்கட்சிகளை, பாரம்பரிய கட்சிகளை தோற்கடித்து வென்றார். அப்போது தேமுதிக எடுத்த வாக்குச் சதவீதம் 8.38 சதவீதம் ஆகும். அது போல் 2009 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு இடங்களில் கூட தேமுதிக வெல்லாவிட்டாலும் அக்கட்சி பெற்ற வாக்கு சதவீதம் 10.3 ஆக இருந்தது.

புதிய கட்சிகள் சாதிக்காத சாதனையை தேமுதிக படைத்தது. 2006 ஆம் ஆண்டு ஒரு இடத்திலும் 2009 ஆம் ஆண்டு ஒரு இடத்திலும் வெல்லாமல் தேமுதிக இருந்தாலும் விஜயகாந்த் அசைக்க முடியாத போட்டியாளராக அதிமுகவுக்கும் திமுகவுக்கும் இருந்தார். ஆற்றல்மிக்கவராகவும் திகழ்ந்தார். இதுவே 2011 ஆம் ஆண்டு விஜயகாந்தை கூட்டணியில் சேர்க்க முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரை சுண்டி இழுத்தது.
அரசியல் கப்பலின் கேப்டனாக மாறிய விஜயகாந்த் அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக விளங்கினார். கடந்த 2011 ஆம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி வைத்த தேமுதிக 41 இடங்களில் போட்டியிட்டு 29 இடங்களில் வென்றது. இதன் மூலம் திமுகவை தேமுதிக தோற்கடித்தது. எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தையும் விஜயகாந்த் திமுகவிடம் இருந்து பறித்து தன் வசப்படுத்தினார்.
ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததுமே மின்சாரக் கட்டணத்தை உயர்த்திய போது கூட்டணி கட்சி என வேடிக்கை பார்க்காமல் தமிழக சட்டசபையில் எதிர்த்தார் விஜயகாந்த். அப்போது ஜெயலலிதா, விஜயகாந்த் சங்கரன்கோவில் தொகுதியில் தனித்து போட்டியிட திராணி இருக்கிறதா என்றெல்லாம் கேட்டார். அப்போது நடந்த பிரச்சினையில் அதிமுக- தேமுதிக கூட்டணி முறிந்தது.

சட்டசபையில் ஜெயலலிதாவுக்கும் விஜயகாந்துக்கும் இடையே நடந்த வாக்குவாதத்தை தொடர்ந்து விஜயகாந்த் ஜெயலலிதாவிடம் தேமுதிகவுடன் கூட்டணி வைத்திருக்காவிட்டால் நீங்கள் ஆட்சிக்கே வந்திருக்க மாட்டீர்கள் என்றார். அதற்கு ஜெயலலிதாவோ, உங்கள் கட்சியுடன் கூட்டணி வைக்க எனக்கு விருப்பமே இல்லை. என்னுடன் இருந்த நிர்வாகிகள், நலம் விரும்பிகள் கட்டாயப்படுத்தியதால் உங்கள் கட்சியுடன் கூட்டணி வைத்தேன் என கடுமையாக சாடினார்.
இதையடுத்து அதிமுக ஆட்சியில் விஜயகாந்துக்கு எதிராக மான நஷ்ட வழக்குகள் பதியப்பட்டன. ஆனால் உச்சநீதிமன்றமோ மான நஷ்ட வழக்கு தொடர்ந்த அதிமுகவை விமர்சித்துவிட்டு அவருக்கு எதிரான வழக்குகளை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications