திருமணமான உடன் விஜயகாந்த் கொடுத்த முதல் கிப்ட்... வாழ்நாள் பொக்கிஷமாக பாதுகாக்கும் பிரேமலதா
சென்னை: தனது கணவர் விஜயகாந்த் தனக்கு கொடுத்த முதல் பரிசை பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறாராம். வெள்ளை மனசுக்காரர் விஜயகாந்த் அப்படி என்ன பரிசு கொடுத்தார். திருமணம் முடிந்த பிறகு விஜயகாந்த் தனக்கு அளித்த பரிசு பற்றி பிளாஷ் பேக் சம்பவங்களை பகிர்ந்துள்ளார் பிரேமலதா.
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே பொது நிகழ்ச்சிகளை தவிர்த்து வந்தார். கட்சி நிகழ்ச்சிகள், நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவது, தேர்தல் சமயத்தில் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது, பிரச்சாரம் செய்வது என அனைத்துப் பணிகளையும் பிரேமலதா விஜயகாந்தே மேற்கொண்டு வருகிறார்.

விஜயகாந்த் உடல்நிலை எப்படி இருக்கிறது என்று அவரது ரசிகர்களும், தேமுதிக தொண்டர்களும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். இதனால் அவ்வப்போது குடும்பத்துடன் விஜயகாந்த் இருக்கும் புகைப்படத்தை அவரது மகன்கள் வெளியிடுவார்கள்.
இந்த சூழலில் ஆகஸ்ட் 25 விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நேரடியாக தொண்டர்களை சந்திப்பார் என்று கூறப்பட்டது. இதனால் காலை முதலே சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் தொண்டர்கள் குவியத் தொடங்கினர்.
தொண்டர் படையை பார்த்ததும் உற்சாகமானார். நாற்காலியில் அமர்ந்த படியே தொண்டர்களை பார்த்து லேசாக கை அசைத்தார். அப்போது தொண்டர்கள் கேப்டன் வாழ்க.. கேப்டன் வாழ்க என்று முழக்கமிட்டனர். அவரது டிரேட் மார்க் முத்திரையாக தொண்டர்களை நோக்கி 'தம்ஸ் அப்' காட்டினார். நீண்ட நாட்கள் கழித்து விஜயகாந்தை பார்த்ததும் தொண்டர்களும் ஆரவாரம் செய்தனர்.
இந்த சூழ்நிலையில் விஜயகாந்த் பற்றி பிரேமலதா அளித்த பேட்டி ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. நடன மாஸ்டர் கலாவிற்கு பிரேமலதா அளித்த பேட்டியில், விஜயகாந்த் தனக்கு பரிசளித்தது பற்றி கூறியுள்ளார். தனக்கு திருமணமான பிறகு முதல் பிறந்தநாளுக்கு வி என்று போட்ட டாலரை பரிசாக கொடுத்தாராம் விஜயகாந்த். அதை வாழ்நாள் பொக்கிஷமாக பாதுகாத்து வருவதாக கூறியுள்ளார் பிரேமலதா.
ஜனவரி 31ஆம் தேதி விஜயகாந்த் பிரேமலதா திருமணம் நடைபெற்றது. மார்ச் மாதத்தில் பிரேமலதாவிற்கு பிறந்தநாள் வந்தது. அப்போது கூட அவருக்கு பிறந்தநாள் நினைவில்லை. என்ன பரிசு கொடுப்பது என்று யோசித்து அந்த டாலரை வாங்கிக் கொடுத்தாராம். அதை விட முக்கியமான இரண்டு பரிசுகளைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார் பிரேமலதா.
கேப்டன் உழைப்பால் உயர்ந்தவர். அவரால் மேற்கொண்டு படிக்க முடியவில்லை. மதுரையில் ரைஸ்மில்லை பார்த்துக்கொண்டிருந்தார். ஏழைகளுக்கு உதவி செய்பவர் விஜயகாந்த். ஏழை ரிக்ஷா தொழிலாளி ஒருவர் தனது குழந்தையை படிக்க வைக்க முடியவில்லை என்று சொன்ன போது தனது நகையை கழற்றி கொடுத்து படிக்க வைக்க சொன்னார்.
அப்பா வாங்கிக் கொடுத்த நகை என்பதால் தந்தையிடம் திட்டும் அடியும் வாங்கினாராம் விஜயகாந்த். அதன் பின்னர் தான் சொந்தமாக உழைத்து சம்பாதிக்கும் பணத்தில் நகை வாங்கிப் போடுவேன் என்று சொன்னார். அப்படி சம்பாதித்த பணத்தில் செயின், 786 என்ற எண் பதித்த மோதிரமும் வாங்கினார். நான் திருமணமாகி வீட்டிற்கு வந்த போது அந்த நகைகளை எனக்குக் கொடுத்தார். அதனை நான் பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறேன் என்று சொன்னார். தங்களின் திருமணத்திற்காக ஜானகி ராமச்சந்திரன் அவர்கள், எம்ஜிஆர், ஜானகி எம்ஜிஆர் என்று பெயர் பொறித்த மோதிரத்தை பரிசளித்தாராம். அந்த மோதிரங்களையும் பத்திரமாக பாதுகாத்து வைத்திருப்பதாகவும் கூறினார் பிரேமலதா. கொடுத்து சிவந்த கரங்களுக்குச் சொந்தக்காரர் விஜயகாந்த் விரைவில் நலம் பெற வேண்டும் என்பதே அனைவரின் பிரார்த்தனையாகும்.












Click it and Unblock the Notifications