தன்னுயிர் பிரிந்தாலும் கட்சிக்கு உயிர் கொடுத்த விஜயகாந்த்! தேமுதிகவுக்கு கிடைத்த ஆக்சிஜன்!
சென்னை: தன்னுயிர் பிரிந்தாலும் தேமுதிகவுக்கு புத்துயிர் அளித்துவிட்டுச் சென்றிருக்கிறார் விஜயகாந்த். இதனால் தேமுதிக தமிழக அரசியல் களத்தில் மீண்டும் பரபரப்பு வளையத்திற்குள் வந்துள்ளது.
விஜயகாந்த் மறைந்து இன்றுடன் 10 நாட்கள் ஆகிவிட்ட நிலையிலும், அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்துக்கு சாரை சாரையாக மக்கள் வந்து அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர். மெரினாவில் உடல் அடக்கம் செய்யப்பட்டிருந்தால் கூட கடல்நீரில் கால் நனைத்து விளையாட வந்தவர்கள் அப்படியே நினைவிடத்திற்கும் வந்து செல்கிறார்கள் என்று சொல்லலாம். ஆனால் விஜயகாந்த் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடம் சுற்றுலா தலம் கூட கிடையாது என்பது தான் கவனிக்கத்தக்கது. ஆனால் அப்படியிருந்தும் விஜயகாந்தின் நினைவிடத்திற்கு செல்ல வேண்டும் என விரும்பி இதற்காகவே கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகம் வந்து செல்கிறார்கள் மக்கள்.

இதனால் தேமுதிக தலைமை அலுவலகம் பகல் நேரங்களில் ஜே.ஜே.வென காணப்படுகிறது. நீண்ட வருடங்களுக்கு பிறகு கட்சி புத்துயிர் பெறத் தொடங்கியிருக்கிறது. மனச்சோர்வில் இருந்த தொண்டர்கள் எல்லாம் இப்போது வீறுகொண்டு கட்சிப் பணிகளில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். இதனை தேமுதிகவுக்கு கிடைத்த ஆக்சிஜனாக பார்க்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். கட்சிக்கு உயிர் கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார் விஜயகாந்த் என்கிறார்கள். இதனால் கடந்த காலங்களில் எடுத்த குழப்பமான முடிவுகளை போல் இல்லாமல், வரும் காலங்களில் பிரேமலதா விஜயகாந்த் கட்சியின் வளர்ச்சி கருதி, தொண்டர்களின் நலன் கருதி எடுக்கப் போகும் முடிவுகள் மிகுந்த முக்கியமானது.
இதனிடையே விஜயகாந்த் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில் தினமும் மதியம் சாப்பாடு வழங்கப்படுகிறது. இதனை 500க்கும் மேற்பட்டோர் சாப்பிட்டு வருகின்றனர். இதனால் தேமுதிக தலைமை அலுவலகம் பார்ப்பதற்கு பரபரப்பாக காணப்படுகிறது. விஜயகாந்தின் மகன்கள் தினமும் தனது தந்தை நினைவிடம் வந்து செல்கிறார்கள், கட்சி நிர்வாகிகளை சந்திக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications