நிரூபிக்கிறேன் நான் யார்-னு.. பொங்கியெழுந்த 'கேப்டன்' - 'வெற்றி முரசு' கொட்டுமா தேமுதிக ?
சென்னை: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தேமுதிகவை.. குறிப்பாக விஜயகாந்தை ரொம்பவே வேதனைப்படுத்தி இருப்பதாக தெரிகிறது.
Recommended Video
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2021 முடிவுகளை எதிர்நோக்கி அனைத்து கட்சிகளும் காத்திருக்கின்றன. ஒருபக்கம் 10 ஆண்டுகால அதிகார பசி, இன்னொரு பக்கம் பதவி கையை விட்டு போயிடக் கூடாது என்ற வெறி. இதற்கிடையில், நேற்று முளைத்த கட்சிகள், பல்லாண்டு சிறிய கட்சிகளின் எதிர்பார்ப்புகள் என்று பல கனவுகளுக்கு விடை அளிக்க தயாராகிக் கொண்டிருக்கிறது தேர்தல் களம்.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு ஆதரவாக இருந்தாலும், ஆளும் அதிமுக அரசு ஏதாவது 'மேஜிக்' நடந்துவிடாதா என்று நம்பிக்கையோடு காத்திருக்கிறது. மநீம, நாம் தமிழர், அமமுக என்று அனைத்து கட்சிகளும், எத்தனை 'சீட்' கிடைக்கும் என்று கணக்குப் போட்டுக் கொண்டிருக்க, தேமுதிக இன்னமும் அதிர்ச்சியில் இருந்து மீளாமல் உள்ளது.

ஒரேயொரு சீட்
ஆம்! விஜயகாந்த் எனும் திரை ஆளுமை, அரசியலிலும் ஆளுமையாகி, தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் என்ற அந்தஸ்து வரை உயர காரணமாக இருந்த தேமுதிக, இன்று தனது ஜுனியர் கட்சிகள் எல்லாம் ஏளனம் செய்யும் அளவுக்கு சென்றுவிட்டது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில், தேமுதிக ஒரேயொரு இடத்தில் மட்டும் வெல்ல வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டது அக்கட்சித் தலைமையை ரொம்பவே வேதனைக்கு உள்ளாக்கிவிட்டதாம்.

அட்லீஸ்ட் 5
இதுகுறித்து நாம் தேமுதிக நிர்வாகிகள் சிலரிடம் பேசுகையில், "இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் உண்மையில் அதிர்ச்சி அளிக்கின்றன. நாங்கள் குறைந்தது 8-10 இடங்களிலாவது வெல்வோம் என்று எதிர்பார்த்தோம். இருந்தாலும், நம்பிக்கையோடு இருக்கிறோம். கருத்துக்கணிப்புகள் பல முறை பொய்த்து போயிருக்கிறது. அட்லீஸ்ட் 5 இடங்களாவது வெல்வோம், வேற எதுவும் கேட்காதீங்க" என்று நறுக்கென முடித்துக் கொண்டனர்.

தேமுதிக தலையெழுத்து
அதேசமயம், இந்தளவுக்கு தேமுதிக நிலை செல்ல என்ன காரணம் என்பது குறித்து அரசியல் ஆய்வாளர் பெருமாள் மணியிடம் நாம் பேசிய போது, 'நாளை தேர்தல் முடிவுகள் வெளியாகவிருக்கும் சூழலில், இப்போதே தேமுதிக நிலை குறித்து கணிப்பது சரியாக இருக்காது. ஆனால், ஒன்று மட்டும் சொல்கிறேன். அவர்கள் நாளை எவ்வளவு வாக்கு சதவிகிதம் வாங்குகிறார்கள் என்பதை பொறுத்தே அவர்களது எதிர்காலம் இருக்கப் போகிறது' என்றார்.

கேப்டன் பலம் என்ன?
தொடர்ந்து சில அரசியல் நோக்கர்களிடம் நாம் பேசுகையில், "தங்களை மதிக்கவில்லை என்பதால் அதிமுக மீது காரசாரமான விமர்சனத்தை முன்வைத்து தேமுதிக வெளியேறியது வரை எல்லாம் சரியாக தான் சென்றுக் கொண்டிருந்தது. இன்னும் சொல்லப்போனால், தேமுதிக வெளியேறியதால் தொண்டர்கள் உற்சாகமாக இருந்தனர். தனித்துப் போட்டியிட்டு தங்கள் பலத்தை நிரூபிக்கும் அருமையான சந்தர்ப்பம் அக்கட்சிக்கு கிடைத்தது. அதைத் தான் தொண்டர்களும் விரும்பினர். தங்கள் கேப்டனின் பலத்தை நிரூபிக்க அவர்கள் விரும்பினர்.

இம்பேலன்ஸ் தேமுதிக
ஆனால், தேர்தலுக்கு இருந்த மிகக் குறைவான கால நேரம் அவர்களை தனித்துப் போட்டியிடுவதில் இருந்து பின்வாங்க வைத்து அமமுகவுடன் கூட்டணி அமைக்க வைத்துவிட்டது. அதுமட்டுமின்றி, பிரச்சார நேரத்தில் சுதீஷ் கொரோனாவால் பாதிக்கப்பட்டது பெரும் பின்னடைவாக அமைந்துவிட்டது. விஜய பிரபாகரன் ஆக்டிவாக இருந்தாலும், அவரால் எழுச்சியை ஏற்படுத்த முடியவில்லை. மொத்தமாக தேர்தலில் அக்கட்சி இம்பேலன்ஸ் ஆகி தடுமாறிவிட்டது. அதன் விளைவு தான் ஒரேயொரு 'சீட்' என்பது கருத்துக்கணிப்புகளில் வெளியாகியுள்ளது. ஒருவேளை தனித்துப் போட்டியிருந்தால், கூடுதலாக 3, 4 இடங்கள் வென்றிருக்கலாம்" என்றனர். எது எப்படியிருந்தாலும், நாளை மே.2ம் தேதி தேமுதிகவின் தலையெழுத்து என்ன என்பது தெரிந்துவிடும். அதுமட்டுமின்றி, கருத்துக்கணிப்பு முடிவுகளை பொருட்டாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்பதும், நம் சக்தி என்ன என்பதை அனைவரும் விரைவில் அறிந்து கொள்வார்கள் என்று கேப்டன் தரப்பில் இருந்து முக்கிய நிர்வாகிகளுக்கு தகவலும் பறந்துள்ளதாம்.












Click it and Unblock the Notifications