பிரபாகரனை கொன்று.. ஒரு இனத்தையே அழித்த ராஜபக்சேவுக்கு இன்று பெரிய தண்டனை- விஜயகாந்த்
சென்னை: ஒரு இனத்தை அழித்த ராஜபக்சே இன்று மிகப் பெரிய தண்டனையை அனுபவித்து வருகிறார் என தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விஜயகாந்த் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: இலங்கையில் கடும் பொருளாதாரநெருக்கடி, வேலையின்மை பிரச்சினை, விலைவாசி உயர்வு ஏற்பட்டதை அடுத்து நாடு முழுவதும் மக்கள் போராட்டம் வெடித்தது.
ராஜபக்சே சகோதரர்கள் பதவி விலக கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது மகிந்தவின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதால் தலைநகர் கொழும்புவில் வன்முறை வெடித்தது.

போராட்டக்காரர்கள்
இந்த நிலையில் போராட்டக்காரர்களின் அழுத்தத்திற்கு பணிந்து பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்துள்ளார். ஒரு இனத்திற்காக போராடிய விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை இரக்கமற்ற முறையில் கொலை செய்து அத்தனை மக்களையும் கொலை, கொள்ளை, பலாத்காரம் செய்து மிக கொடூரமாக நடந்து கொண்ட ராஜபக்சேவிற்கு கிடைத்த மிகப் பெரிய தண்டனை.

பாவம்
முன்பெல்லாம் பாவம் செய்தால் அதற்கான தண்டணையை பெற பல ஆண்டுகள் ஆகும். ஆனால் தற்போது பாவத்திற்கான தண்டனையை கண்ணெதிரிலேயே அவர்கள் அனுபவித்து வருகிறார்கள். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும், உப்பு தின்னா தண்ணி குடிச்சு தான் ஆகணும்.

தப்பு செய்தவர்கள்
தப்பு செய்தவர்கள் யாரும் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது. அதிகாரம் கையில் இருக்கும் போது மமதையின் காரணமாக மக்களை மதிக்காத யாராக இருந்தாலும் இதுதான் தீர்ப்பு என்பதை இன்றைக்கு இலங்கையில் ராஜபக்சேவுக்கு நடந்திருப்பது பறைசாற்றுகிறது. இலங்கை முழுவதும் தீப்பற்றி எரிகிறது என விஜயகாந்த் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதாரம்
இலங்கையில் கடந்த 2019ஆம் ஆண்டு கொரோனா பரவலுக்கு பிறகு ஏற்பட்ட ஊரடங்கால் சுற்றுலா துறை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனால் இலங்கையில் விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து மக்கள் உணவின்றி தவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications