விஜயகாந்த்.. படக்குனு "ஆமை"ன்னு சொல்லிட்டாரே.. நிறைய ஸ்பீடு வேணும்.. கோட்டை வரை எகிறி சென்ற கோரிக்கை
சென்னை: விஜயகாந்த் தமிழக அரசை கண்டித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.. அந்த அறிக்கையில், போர்க்கால அடிப்படையில் மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்படும் என பொய்யான வாக்குறுதி அளித்த தமிழக அரசு என்றும் தேமுதிக தலைவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் மழை பெய்ய துவங்கிவிட்டது.. அதுவும் நேற்று முன்தினம் முதல் கனமழை வெளுத்து கட்டியது.. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக இன்று முதல் ஜூன் 22 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதுமட்டுமல்லாமல், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தி.மலை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனிடையே, நேற்று முன்தினம், விடிய விடிய பெய்த மழையால், நேற்று பகல் வேளைகளிலும் விட்டு விட்டு மழை பெய்தது. இதனால், சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
மழை: சென்னை மட்டுமின்றி, சுற்றுவட்டார பகுதிகளிலும், வெளி மாவட்டங்களிலும் மழை பெய்தது. சென்னை நுங்கம்பாக்கம், சூளைமேடு, தி.நகர், கோடம்பாக்கம், சைதாப்பேட்டை, ஆயிரம் விளக்கு, அண்ணாநகர், பரங்கிமலை, கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், மீனம்பாக்கம், மடிப்பாக்கம், வேளச்சேரி, திரிசூலம், எழும்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித்தீர்த்ததால், சாலையோரங்களில் மழைநீர் தேங்கி நின்றதை காண முடிந்தது.
ஆனால், மழைநீர் வடிகால் பணிகளை தமிழக அரசு சரியாக முடிக்கவில்லை என்று தேமுதிக குற்றஞ்சாட்டி உள்ளது.. இது தொடர்பாக, தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.. அந்த அறிக்கையில், "கடந்த ஆண்டை போல் மழைநீர் தேங்கக்கூடாது என்பதற்காக சென்னை முழுவதும் மழைநீர் வடிகால்களை சீரமைக்கும் பணி தமிழக அரசு சார்பில் நடைபெற்று வருகிறது.
பெரும் சிரமம்: ஒரே நேரத்தில் நடைபெற்று வரும் மழை நீர் வடிகால் மற்றும் மெட்ரோ ரயில் பணிகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக மழைநீர் வடிகால் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால் ஒருநாள் மழைக்கே சென்னை மாநகரம் வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
போர்க்கால அடிப்படையில் மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்படும் என பொய்யான வாக்குறுதி அளித்த தமிழக அரசை இந்த நேரத்தில் வன்மையாக கண்டிக்கிறேன். மழைநீர் வடிகால் பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளங்களால் சென்னையில் பெரும்பாலான சாலைகள் சேதம் அடைந்துள்ளது. சாலைகள் தெரியாத அளவுக்கு மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
எச்சரிக்கை: பள்ளி கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் முதல் வயதானவர்கள் வரை சேதம் அடைந்த தார் சாலைகளால் அவதியடைந்து வருகின்றனர். மழைநீர் வடிகால் பணிகளால் சென்னையில் எந்த சாலையும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னையில் மழை தொடரும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால், மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறும் இடங்களில் அமைச்சர்கள் ஆய்வு செய்து, அப்பணிகளை போர்க்கால அடிப்படையில் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தரமான வடிகால் கால்வாய்கள், சாலைகள் அமைத்து இனி வருங்காலங்களில் மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கவனம்: சென்னையை சர்வதேச தரத்துக்கு உயர்த்துவோம் என வசனங்கள் பேசுவதை விட்டுவிட்டு, ஆமை வேகத்தில் நடைபெறும் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார். நேற்றைய தினம், சென்னை மாநகரில், மழைநீர் தேங்காதவாறு பெரும்பாலான பணிகள் முடுக்கிவிடப்பட்ட நிலையில், அதுகுறித்த செய்திகளும் மீடியாக்களில் வெளியான நிலையில், எதிர்க்கட்சிகள் திமுக அரசை குற்றஞ்சாட்டுவது திமுகவின் கவனத்தை திருப்பி வருகிறது.












Click it and Unblock the Notifications