எங்க கேப்டன் எப்படி இருக்கிறார்? மாவட்டச் செயலாளர்களுக்கு ஹெல்த் அப்டேட்ஸ் தரும் விஜயகாந்த் மகன்!
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் பற்றியும் அவரது உடல்நலம் பற்றியும் நாள் தவறாமல் மாவட்டச் செயலாளர்களுக்கு அப்டேட் செய்துவிடுகிறார் விஜய பிரபாகாரன்.
விஜயகாந்தை மருத்துவமனையில் உடனிருந்து கவனித்துக்கொள்வது அவரது மூத்த மகன் விஜய பிரபாகரன் தானாம். இவரிடம் இருந்து தான் விஜயகாந்த் ஹெல்த் பற்றிய அப்டேட்கள் கட்சி நிர்வாகிகள் செல்கிறது.
பல மாவட்டச் செயலாளர்கள் கேப்டனை பார்த்து நலம் விசாரிக்க நேரில் வருகிறோம் என்ற ஆவலை வெளிப்படுத்திய நிலையில், இப்போதைக்கு வேண்டாமே, இன்பெக்ஷன் ஆகக்கூடும் என்ற பதில் கிடைத்திருக்கிறது.

சர்க்கரை வியாதி
சர்க்கரை வியாதியால் அவதிப்பட்டு வரும் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு ரத்த ஓட்டம் சீராக இல்லாததால், 2 நாட்களுக்கு முன்னர் அவரது வலது காலில் விரல் அகற்றப்பட்டது. இந்த நிகழ்வு தேமுதிக தொண்டர்களை அதிர்ச்சியிலும் கவலையும் ஆழ்த்தியது. சினிமா படத்தில் விஜயகாந்த் காலில் உதைத்து சண்டை போடும் காட்சிகளை சுட்டிக்காட்டி, அவருக்கா இந்த நிலைமை என சமூக வலைதளங்களிலும் பலரும் பரிதாபப்பட்டனர்.

முதல்வர் -பிரதமர்
விஜயகாந்த் காலில் விரல் அகற்றப்பட்ட தகவலையும் அவருக்கு சர்க்கரையின் அளவு கூடிய தகவலையும் அறிந்த முதல்வரும், பிரதமரும் உடனடியாக அவரது குடும்பத்தினரிடம் நல விசாரித்ததோடு விரைவில் நலம் பெற வேண்டும் என்ற வாழ்த்தையும் வெளியிட்டார்கள். இந்தச் சூழலில் விஜயகாந்த் எப்படி இருக்கிறார்? அவருக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் என்ன? என்ற விபரங்களை அறிந்துகொள்வதில் ஆர்வம் காட்டும் தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் விஜய பிரபாகரனை நாள்தோறும் தொடர்பு கொண்டு தெரிந்து வருகிறார்கள்.

ஹெல்த் அப்டேட்
விஜயகாந்தை மியாட் மருத்துவமனையில் முழுமையாக உடனிருந்து கவனித்துக் கொள்ளும் அவரது மூத்த மகன் விஜய பிரபாகரன், தனது தந்தையின் ஹெல்த் ஸ்டேடஸ் குறித்த தகவலை மாவட்டச் செயலாளர்களுக்கு அப்டேட் செய்து வருகிறார். விஜயகாந்தை நேரில் நலம் விசாரிக்க வருவதாக மாவட்டச் செயலாளர்கள் பலரும் விஜய பிரபாகரனிடம் அனுமதி கேட்டதாகவும் இப்போது சிகிச்சைகள் சென்று கொண்டிருப்பதால் நேரில் வருவதை தவிர்க்குமாறும் அவர் கேட்டுக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அறுவைச் சிகிச்சை புண்
விஜயகாந்த் காலில் அறுவைச் சிகிச்சை புண் ஆறுவதற்கு குறைந்தது 15 நாட்களாவது ஆகக்கூடும் என்பதால் அதன் பிறகு கேப்டனை பார்த்து நலம் விசாரிக்க வருமாறு மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாம். இதனிடையே இன்று மீண்டும் சர்க்கரையின் அளவு விஜயகாந்துக்கு அதிகரித்துவிட்டதாக தகவல் பரவிய நிலையில் அது குறித்து அறிவதற்காக தேமுதிக மாவட்டச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பனப்பட்டி தினகரனை தொடர்பு கொண்டு பேசினோம்.

நலமுடன் உள்ளார்
அவர் கூறியதாவது, ''கேப்டன் இப்போது நலமுடன் உள்ளார். அண்ணியாரிடமும், விஜய பிரபாகரனிடமும் தினமும் பேசி கேப்டனின் உடல்நலம் பற்றி தெரிந்துகொள்கிறேன். இன்பெக்ஷன் உள்ளிட்ட ஒரு சில காரணங்களால் உடனடியாக கேப்டனை சந்திக்க வர வேண்டாம் எனக் கூறப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் அவர் வீடு திரும்பவுள்ளார்.'' எனக் கூறினார்.












Click it and Unblock the Notifications