நத்தம் விஸ்வநாதனுக்கு நல்ல நேரம்! விஜயகாந்திடம் அடிவாங்காமல் தப்பித்தார்! மாஜி MLA பகிரும் பழைய கதை!
சென்னை: விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது சட்டசபையில் குறுக்கே டேபிள் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால், அப்போது அமைச்சராக இருந்த நத்தம் விஸ்வநாதனை அடித்திருப்பார் என சென்னை எழும்பூர் தொகுதி தேமுதிக முன்னாள் எம்.எல்.ஏ. நல்லதம்பி ஃபிளாஷ்பேக் பகிர்ந்துள்ளார்.
விஜயகாந்த் சட்டசபையில் நாக்கை துருத்தியதற்கு காரணமே அப்போது அமைச்சராக இருந்த நத்தம் விஸ்வநாதன், அதிமுக எம்.எல்.ஏ.வாகவும் அண்ணா தொழிற்சங்க நிர்வாகியாகவும் இருந்த சின்னச்சாமி உள்ளிட்ட இன்னும் ஒன்றிரண்டு பேர் தான் என நல்லதம்பி தெரிவித்துள்ளார். விஜயகாந்தை தனிப்பட்ட முறையில் அவர்கள் ஒருமையில் பேசியதால் தான் இவருக்கு இந்தளவுக்கு கோபம் வந்ததாக கூறியுள்ளார்.

இந்த நிகழ்வு நடக்கும் போது தாமும் சட்டசபையில் தான் இருந்தேன் என்றும், விஜயகாந்த் நாக்கை துருத்தி பேசும் வீடியோவை வெளியிட்டவர்கள் எதற்காக அப்படி பேசினார், அவரை சீண்டும் வகையில் யார் நடந்து கொண்டார்கள் என்ற வீடியோவை வெளியிடவில்லை என வேதனைத் தெரிவித்தார்.
தன்னையும் சிலர் அப்போது கோடிகளில் விலை பேசினார்கள் என்றும் ஆனால் தன்னால் விஜயகாந்துக்கு துரோகம் செய்ய முடியாது எனக் கூறிவிட்டதாகவும் எழும்பூர் தொகுதி தேமுதிக முன்னாள் எம்.எல்.ஏ. நல்லதம்பி தெரிவித்துள்ளார். விஜயகாந்துக்கு உடல்நிலை பாதிக்கப்பட காரணமே, அவருக்கு துரோகம் செய்துவிட்டு போன சட்டமன்ற உறுப்பினர்கள் தான் என்றும் மனதளவில் மனிதர் நொந்து போய்விட்டார் எனவும் நல்லதம்பி தெரிவித்துள்ளார்.
குறிப்பாக சிறுவயது முதலே நண்பனாக இருந்த மதுரை சுந்தர்ராஜன், ஈரோடு சந்திரக்குமார் போன்றவர்கள் விலகியதை விஜயகாந்தால் ஏற்கவே முடியவில்லை என நல்லதம்பி கூறினார்.
தேமுதிகவிலிருந்து விலகிய பலரும் இப்போது மனம் கேட்காமல் மீண்டும் தேமுதிகவிலேயே இணைவதற்கு முயற்சித்து வருவதாகவும் அனைவரையும் அரவணைத்துச் செல்ல பிரேமலதாவும், விஜய பிரபாகரனும் தயாராக இருப்பதாகவும் நல்லதம்பி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications