அன்று ரோகிணியில் அனுமதிக்கவில்லை.. இன்று 100 நரிக்குறவர்களுடன் நான் படம் பார்த்தேன்.. விஜயபிரபாகரன்
சென்னை: நரிக்குறவர்களுடன் யாத்திசை படத்தை பார்த்த அனுபவத்தை விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் பகிர்ந்துள்ளார்.
கடந்த மார்ச் 30-ஆம் தேதி நடிகர் சிம்பு, கவுதம் கார்த்திக் நடித்த பத்து தல படம் திரைக்கு வந்தது. அப்போது கோயம்பேட்டில் உள்ள ரோகிணி தியேட்டரில் பத்து தல படம் பார்ப்பதற்காக சிம்பு ரசிகர்கள் சில டிக்கெட்டுகளை வாங்கியிருந்தனர்.
அதில் சில டிக்கெட்டுகளை நரிக்குறவர்களுக்கு இலவசமாக வழங்கினர். இதனால் மகிழ்ச்சி அடைந்த நரிக்குறவர்கள் சினிமாவுக்கு செல்ல தயாராகி தியேட்டருக்கு வந்தனர். அப்போது குழந்தையுடன் வந்த ஒரு பெண் டிக்கெட்டை தியேட்டர் ஊழியரிடம் நீட்டினார்.

ஆனால் அந்த ஊழியரோ அவர்களை துரத்தினார். டிக்கெட் இருந்தும் அவரை படம்பார்க்க அனுமதிக்கவில்லை. அந்த பெண்ணும் "ஏண்ணா எங்ககிட்ட டிக்கெட் உள்ளே அனுப்புங்கள்" என சொல்லியும், சிறிதும் மனிதத்தன்மையற்று சைகையில் வெளியே செல்லுமாறு கூறினார். இதற்கு சிம்பு ரசிகர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது தொடர்பான வீடியோ வைரலானதை அடுத்து அவர்கள் தியேட்டருக்குள் படம் பார்க்க விட்டதாக தெரிகிறது. எனினும் இந்த சம்பவம் குறித்து கோயம்பேடு போலீஸார் விசாரணை நடத்தி அந்த ஊழியர் மீது வழக்குப் பதிவு செய்தனர். அது போல் எஸ்சி, எஸ்டி ஆணையமும் இதில் தலையிட்டது. அந்த ஊழியர் மீது வன்கொடுமை சட்டம் பாய்ந்தது. நரிக்குறவர்களை சினிமா பார்க்க அனுமதிக்காத சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர்.
என்னதான் எல்லாரும் ஒன்று என்றாலும் எங்களை பாகுபடுத்தியே பார்க்கிறார்கள் என நரிக்குறவர்கள் தெரிவித்தனர். இதே போல் விஜய் படத்திற்கும் எங்களை உள்ளே அனுப்பவில்லை என்றும் கண்ணீர் மல்க தெரிவித்தனர். எங்களை பார்த்தால் ஏன் பிடிக்கவில்லை என தெரியவில்லை என்றும் வெகுளியாக கூறினர். இந்த நிலையில் விரும்பாக்கத்தில் உள்ள ஐநாக்ஸ் திரையரங்கில் விஜயபிரபாகரன், பிரேமலதா உள்ளிட்டோர் பொன்னியின் செல்வன் பாகம் 2 திரைப்படத்தை நரிக்குறவ மக்களுடன் கண்டு களித்தனர்.
இது தொடர்பாக ரோகிணியில் அனுமதி மறுக்கப்பட்ட புகைப்படத்தையும் ஐநாக்ஸில் தங்களுடன் படம் பார்த்த புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள விஜயபிரபாகரன் கூறியிருப்பதாவது: உங்களை உள்ளே விடாமல் அன்று தடுத்து நிறுத்தினர். ஆனால் இன்று நாங்கள் உங்களுடன் படம் பார்க்க வந்திருக்கிறோம். சமூகத்தில் அண்மைக்காலமாக சில விஷயங்களில் சில ஜாதியினர் அநீதியும் பாகுபாடும் காட்டப்படுகிறது.

சினிமா தியேட்டர்களில் படம் பார்க்கக் கூட அவர்களைவிட வில்லை என்றால் அது மனதிற்கு பெரும் வருத்தத்தை கொடுக்கிறது. அதனால் அந்த கோயம்பேடு தியேட்டர் சம்பவத்திற்கு ஆறுதல் அளிக்கும் எதையாவது செய்ய வேண்டும் என நினைத்தேன். இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோரிடம் ஆலோசனை கேட்டேன்.
அவர்களின் அறிவுறுத்தலின்படி யாத்திசை எனும் படத்தின் ஒரு ஷோவுக்கான மொத்த டிக்கெட்டுகளையும் வாங்கினேன். 100 க்கும் மேற்பட்ட நரிக்குறவ மக்களுடன் படம் பார்த்தேன். சமூகத்தில் அனைவரையும் சமமாக நடத்த வேண்டும் என தேமுதிகவில் உள்ள ஒவ்வொருவரும் குரல் கொடுத்துள்ளோம், இனியும் குரல் கொடுப்போம். யாத்திசை படக்குழுவினருக்கு நன்றி. எங்களை சிறப்பாக வரவேற்ற ஐநாக்ஸ் திரையரங்கு நிர்வாகத்திற்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications