விஜயின் பவுன்சர்கள் வந்த கார் விபத்து.. இன்னொரு கார் மீது மோதியது.. பொதுக்குழுவுக்கு முன் பரபரப்பு
சென்னை: தவெக சார்பில் இன்று மாமல்லபுரத்தில் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் நடிகரும், கட்சியின் தலைவர் விஜயும் பங்கேற்றுள்ளார். இந்த விழாவுக்கு நடிகர் விஜய் காலை 10 மணிக்கு சென்றார். அப்போது அவரை பின்தொடர்ந்து விஜயின் பாதுகாப்புக்காக சென்ற பவுன்சர்களின் கார் இன்னொரு காரில் மோதி விபத்துக்குள்ளானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலையொட்டி நடிகர் விஜய் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வந்தார். செப்டம்பர் 27 ம் தேதி கரூரில் நடந்த பிரசாரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் வரை பலியாகினர். இதையடுத்து விஜய் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டார். அதுமட்டுமின்றி அவர் தனது தேர்தல் பிரசாரத்தை ஒத்திவைத்தார்.

அதன்பிறகு தற்போது படிப்படியாக தவெக நிர்வாகிகளும், விஜயும் மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபட தொடங்கி உள்ளனர். முதற்கட்டமாக கூட்ட நெரிசலில் இறந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் அழைத்து விஜய் ஆறுதல் தெரிவித்து மன்னிப்பு கோரினார். பிறகு தவெகவின் கட்சியின் அன்றாடப்பணிகளை மேற்கொள்ள பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் உள்பட 28 பேர் கொண்ட நிர்வாகக்குழுவை விஜய் நியமித்தார்.
பிறகு கூட்டங்களின்போது அசம்பாவிதங்களை தடுக்க 2,500 இளைஞர்களை கொண்ட மக்கள் பாதுகாப்பு படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஓய்வுபெற்ற போலீஸ் ஐ.ஜி. ரவிக்குமார் மற்றும் ஓய்வுபெற்ற போலீசார் அறிவுரைகளை வழங்கினர்.
இதன் அடுத்தக்கட்டமாக தவெகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. இதற்காக விஜய் காலை 10 மணிக்கு காரில் வந்தார். அவரை பின்தொடர்ந்து விஜயின் பாதுகாப்புக்கான பவுன்சர்கள் காரில் வந்தனர்.
அப்போது திருப்பம் ஒன்றில் விஜயின் பவுன்சர்கள் வந்த கருப்பு நிற கார், இன்னொரு வெள்ளை நிற காரில் மோதியது. இதில் வெள்ளை நிற காரின் டோர் சேதமானது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. இதையடுத்து இருகார்களும் அங்கிருந்து புறப்பட்டு சென்றன. இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications