விஜய்யின் அடுத்த மூவ் ‘வேற லெவல்’.. அரசியல் பிரவேசத்துக்கு அஸ்திவாரம்.. தேதி குறிச்சாச்சு! ஆஹா!
சென்னை : நடிகர் விஜய் அரசியலுக்கு வரப்போகிறார் என்ற பேச்சுகள் தீவிரமாக இருந்துவரும் நிலையில், வரும் 5ஆம் தேதி சென்னையை அடுத்த பனையூரில் விஜய் மக்கள் இயக்க வழக்கறிஞர்கள் அணி கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டம் விஜய்யின் முக்கியமான அரசியல் மூவ் ஆக பார்க்கப்படுகிறது.
நேரடியாக அரசியலில் இறங்குவதாக விஜய் அறிவிக்காவிட்டாலும், கடந்த ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கணிசமான இடங்களில் விஜய் மக்கள் இயக்கம் பெயரில் போட்டியிட்டவர்கள் வெற்றி பெற்றனர். அவர்களை நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார் விஜய். தொடர்ந்து, நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேச பயணம் வேகமெடுத்து வருகிறது.

விஜய் தீவிரம்: விஜய் மக்கள் இயக்கத்தில் புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும் பணிகள் அண்மையில் தீவிரப்படுத்தப்பட்டது. கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் ஒவ்வொரு மாவட்டமாக விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து விஜய்யுடன் மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு நடந்தது.
கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி சட்டமேதை அம்பேத்கரின் பிறந்த நாள் விழாவையொட்டி அம்பேத்கரின் சிலைக்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் என்று அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் நடிகர் விஜய் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, விஜய் மக்கள் இயக்கத்தினர் தமிழ்நாடு முழுவதும் அம்பேத்கர் சிலைகளுக்கு மரியாதை செலுத்தினர். அதன் தொடர்ச்சியாக தீரன் சின்னமலை, காயிதே மில்லத், சிவந்தி ஆதித்தனார், பாரதிதாசன் உள்ளிட்டோரின் பிறந்தநாளன்றும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் அவர்களது சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அடுத்தடுத்து முக்கிய நிகழ்வுகள்: கடந்த மே 28ஆம் தேதி உலக பட்டினி தினத்தையொட்டி அனைத்து இடங்களிலும், இலவச மதிய உணவு வழங்க விஜய் உத்தரவிட்டார். பசி என்னும் பிணியைத் தீர்ப்போம் என்கிற நோக்கத்துடன் ஏழை எளியோருக்கு உணவு வழங்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தனது ரசிகர்களை களத்தில் இறக்கினார் விஜய். அதன்படி, தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும், புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, உள்ளிட்ட மாநிலங்களிலும் பொதுமக்களுக்கு இலவச மதிய உணவை விஜய் மக்கள் இயக்கத்தினர் வழங்கினர்.
அதைத் தொடர்ந்து கடந்த ஜூன் 17ஆம் தேதி, தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ மாணவிகளையும், அவர்களின் பெற்றோர்களையும் நேரில் சந்தித்து ஒவ்வொருவருக்கும் ஊக்கத்தொகை, பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார் நடிகர் விஜய்.
விஜய்யின் அட்வைஸ்: அப்போது மாணவர்கள் மத்தியில் பேசும்போது, ஓட்டுக்கு பணம் வாங்காதீர்கள். பெற்றோரையும் பணம் வாங்க விடாதீர்கள் என பேசி பரபரப்பை ஏற்படுத்தினார் விஜய். அதைத்தொடர்ந்து, காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15ஆம் தேதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பல இடங்களில் விஜய் பயிலகம் என்ற பெயரில் மாலை நேர படிப்பகங்கள் தொடங்கப்பட்டன.
இந்நிலையில் தான், வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி விஜய் மக்கள் இயக்க அலுவலகம் அமைந்துள்ள சென்னையை அடுத்த பனையூரில் விஜய் மக்கள் இயக்க வழக்கறிஞர்கள் அணி மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் விஜய் கலந்துகொள்ளாவிட்டாலும், விஜய்யின் அறிவுறுத்தலின்படியே நடப்பதாகத் தெரிகிறது.
ஆகஸ்ட் 5ல் முக்கிய ஆலோசனை: விஜய் மக்கள் இயக்கத்தை அடுத்தக் கட்டத்துக்கு கொண்டு செல்லத் தேவையான விஷயங்களையும், சட்டரீதியாக சந்திக்க நேரிடும் பிரச்சனைகள், அமைப்பு ரீதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய விஷயங்கள் குறித்தும் ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், ஆகஸ்ட் 6 ஆம் தேதி கேரள ரசிகர்களுடனான விஜய்யின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் ரசிகர்களையும் நிர்வாகிகளையும் விஜய் சந்தித்த நிலையில், அடுத்தபடியாக தற்போது அணி வாரியாக நிர்வாகிகளை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது. விஜய்யின் ஒவ்வொரு நகர்வும், அரசியல் பிரவேசத்தை நோக்கியே இருந்து வருவதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications