விஜயே சத்தமில்லாம தான் வருவாரு..மா.செ பதவியால் அலப்பறை! ஈசிஆர் சரவணனால் இம்சை! பனையூரில் பஞ்சாயத்து!
சென்னை: தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் கட்ட மாவட்ட செயலாளர்கள் பட்டியலை நேற்று விஜய் வெளியிட்டார். பதவி பெற்ற உற்சாகத்தில் ஈசிஆர் சாலையில் ஊர்வலமாக சென்ற ஈசிஆர் சரவணனால் சுமார் ஒரு மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது, பனையூருக்கு விஜயே சத்தம் இல்லாமல் வந்து செல்லும் நிலையில் முதல் நாளே மாவட்ட செயலாளர் கொடுத்த அலப்பறையால் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். மேலும் ஆரம்பத்திலேயே இப்படி என்றால் இன்னும் போகப் போக என்னவெல்லாம் நடக்குமோ? என நொந்து கொண்டனர்.
தமிழ் திரையுலகின் நம்பர் ஒன் நடிகராக இருந்து தற்போது அரசியல்வாதி அவதாரம் எடுத்திருக்கிறார் விஜய். கட்சியின் பெயரை அறிவித்தது தொடங்கி உறுப்பினர் சேர்க்கை, ஆலோசனை, மாநில மாநாடு, புத்தக வெளியீட்டு விழா, நிர்வாகிகளுடன் சந்திப்பு என மிகவும் பிசியாகவே இருக்கிறார்.

இது ஒருபுறம் இருக்க கட்சியில் மாவட்ட நிர்வாகிகள் பட்டியல் பல கட்டங்களாக அறிவிக்கப்பட இருக்கிறது. இதுவரை 2 பட்டியல் வெளியாகி இருக்கும் நிலையில், ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு கட்சியில் பதவி அளிக்கப்பட இருக்கிறது.
தமிழகத்தில் அமைப்பு ரீதியாக நூற்றுக்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்களை நியமனம் செய்ய விஜய் திட்டமிட்டு இருக்கிறார். தமிழகத்தில் 234 தொகுதிகள் இருக்கும் நிலையில் இரண்டு தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்ற அடிப்படையில் மாவட்ட செயலாளர் நியமனம் நடைபெற இருக்கிறது. மேலும் மாவட்ட தலைவர், மாவட்ட செயலாளர், மாவட்டத் துணைச் செயலாளர் என தனது ரசிகர் மன்றத்தில் இருந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட இருக்கிறது.
மேலும் துணைத் தலைவர், துணைச் செயலாளர் பதவிகளில் பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் அதிகளவு வாய்ப்பு தர திட்டமிடப்பட்டிருக்கிறது. அது மட்டும் அல்லாமல் 28 சார்பு அணிகளும் விஜய் கட்சியில் உருவாக்கப்பட இருக்கிறது. மகளிர் அணி, தொண்டரணி, இளைஞர் அணி, மருத்துவர் அணி, பொறியாளர் அணி, இலக்கிய அணி உள்ளிட்ட 28 அணிகளுக்கும் தலைவர், செயலாளர், அமைப்பாளர்கள் உள்ளிட்ட பொறுப்புகள் வழங்கப்பட இருக்கிறது.

தற்போது கட்சியின் அடிப்படையான மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த வாரம் தமிழக வெற்றி கழகத்தின் முதல் கட்ட நிர்வாகிகள் பட்டியல் வெளியான நிலையில் நேற்று இரண்டாவது பட்டியலை விஜய் வெளியிட்டார். அதில் தி-நகர், ஆயிரம் விளக்கு மாவட்ட செயலாளர் அப்புனு, அம்பத்தூர் மதுரவாயலுக்கு பாலாஜி முருகன், சோழிங்கநல்லூர் ஆலந்தூருக்கு ஈசிஆர் சரவணன் ஆகியோர் மாவட்ட செயலாளராக அறிவிக்கப்பட்டனர்.
இதேபோல மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, நாகப்பட்டினம், திண்டுக்கல், தர்மபுரி ஆகிய 19 புதிய மாவட்ட செயலாளர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டது. அப்போது மாவட்ட நிர்வாகிகளிடையே பேசிய விஜய்," உங்கள் நம்பி தான் கட்சியை ஆரம்பித்துள்ளேன். இவ்வளவு நாள் ரசிகர் மன்ற பணிகளை கவனம் செலுத்திய நீங்கள் என்னுடன் இணைந்து அரசியல் பணிகளிலும் சிறப்பாக செயல்பட வேண்டும். மக்களுக்கு எந்த வித இடையூறும் இல்லாமல் முனைப்போடு செயல்பட வேண்டும். கட்சிக்கு வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும்" என அறிவுறுத்தினார்.

ஆனால் அதற்கு அடுத்த சில நிமிடங்களிலேயே வேலையை காட்டியுள்ளார் ஈசிஆர் சரவணன். பனையூரிலிருந்து தனது வீட்டிற்கு செல்லும் வரை ஈசிஆர் சாலையில் சொகுசு காரில் நின்று தனது ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக சென்று இருக்கிறார். காரில் நின்றுவாறு சரவணன் முன்னே செல்ல பின்னால் நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்கள் கார்களில் அவரது ஆதரவாளர்கள் பின்தொடர்ந்து இருக்கின்றனர்.
இதனால் ஈசிஆர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பியவர்களும் பள்ளி முடிந்து வீட்டுக்கு திரும்பிய பெற்றோர்களும் கடும் அவதி அடைந்தனர். பலர் பனையூருக்கு விஜய் வந்து சென்றாலே மிக அமைதியாகத்தான் இருக்கும். ஆனால் மாவட்ட செயலாளர் பதவியை வாங்கிக்கொண்டு இப்படி இவர் அலப்பறை செய்கிறார்களே என புலம்பினர். மேலும் தமிழக வெற்றிக் கழகத்தின் ஒரு சில நிர்வாகிகளே ஆரம்பத்திலேயே இப்படி செய்வது மக்களிடம் கெட்ட பேர் எடுத்துக் கொடுக்கும் என சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications