"விஜய்க்கு பெரிய ஷாக்".. வருது அதிமுக + திமுக கூட்டணி ஆட்சி? கம்யூனிஸ்ட் - விசிகவிடம் கேட்ட ஸ்டாலின்
சென்னை: தமிழகத்தில் மெஜாரிட்டியை நிரூபிக்க விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் திணறி வருகிறது. இந்நிலையில் தான் தேர்தலுக்குப் பிந்தைய பல்வேறு வாய்ப்புகள பற்றி திமுக ஆராய்ந்து வருகிறது. அந்த வகையில் அதிமுக தலைமையில் ஆட்சியை அமைப்பது பற்றி முதல்வர் ஸ்டாலின் இன்று 2 கம்யூனிஸ்ட் மற்றும் விசிகவுடன் விவாதித்துள்ளதாக வெளியாகி உள்ள தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சட்டசபை தேர்தலில் 108 தொகுதிகளில் தனிப்பெரும் கட்சியாக வந்திருந்தாலும் கூட மெஜாரிட்டி பெறவில்லை. மெஜாரிட்டிக்கு 118 எம்எல்ஏக்கள் வேண்டும். ஆனால் தவெக மெஜாரிட்டி இல்லாதால் ஆட்சி அமைக்க திணறி வருகிறது. இதனால் விஜய் முதல்வராவதில் இழுபறி நீடித்து வருகிறது.

இந்நிலையில் தான் நேற்று மாலையில் விஜய் மெஜாரிட்டியை நிரூபிக்காவிட்டால் அதிமுகவும், திமுகவும் கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே தான் திமுக தலைவர் ஸ்டாலின், தவெகவின் ஆட்சி அமைக்கட்டும். 6 மாதங்கள் வரை எந்த இடையூறையும் வழங்க மாட்டோம் என்று கூறியிருந்தார். இதனால் தவெகவினர் நிம்மதியடைந்தனர்.
ஆனால் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது தமிழகத்தில் திமுக-அதிமுக கூட்டணிக்கான சாத்தியக்கூறுகள் உருவாகி வருவது வெறும் யூகமில்லை. அதனை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான அரசியல் ஆலோசனைகளும், திரைமறைவு பேச்சுவார்த்தைகளும் தொடர்ந்து நடைபெற்று வரும் தகவல் வெளியாகி உள்ளன.
அதாவது இன்று சென்னையில் முதல்வர் ஸ்டாலினை, திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் சந்தித்து பேசினர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன், விசிக தலைவர் தொல் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் உள்ளிட்டவர்கள் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினர். இந்த கட்சிகள் திமுக கூட்டணியில் போட்டியிட்டு தலா 2 எம்எல்ஏக்கள் என்று மொத்தம் 6 எம்எல்ஏக்களை வைத்துள்ளனர்.
இந்நிலையில் தான், பல்வேறு முக்கிய விஷயங்கள் பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் தேர்தலுக்கு பிந்தைய நிலவரங்கள் நிலையற்றதாக உள்ளது பற்றியும், இது தொடரும் பட்சத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் ஸ்டாலின் விவாதித்துள்ளார்.
திமுகவை பொறுத்தவரை விஜய் மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடித்து விட்டால் இடையூறு செய்யக்கூடாது என்ற முடிவில் ஸ்டாலின் இருக்கிறார். அதேவேளையில் மெஜாரிட்டி நிரூபிப்பதில் சிக்கல் வந்தால் அடுத்தக்கட்ட நடவடிக்கையை தொடங்க வேண்டும் என்பதில் ஸ்டாலின் உறுதியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி அதிமுக தலைமையிலான கூட்டணி அரசு அமைப்பது பற்றியும் ஸ்டாலின் விவாதித்துள்ளாராம். இந்த விவாதம் நடந்தாலும் கூட அதில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்ற தகவல் கிடைத்துள்ளது. இதுதொடர்பாக அதிமுக - திமுகவினர் பொதுவெளியில் அப்படியான எந்த திட்டமும் இல்லை என்று மறுத்து வந்தாலும் கூட திரைமறைவில் தமிழக அரசியல் சூழல் கருதி இருகட்சிகளும் கூட்டணியாக இணைந்து ஆட்சியை பிடிப்பதற்கான முயற்சியை முழுமையாக கைவிடவில்லை. அதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி விவாதித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது தற்போது விஜய் தலைமயைிலான தவெகவினரை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. ஏனென்றால் தவெக - காங்கிரஸ் கூட்டணிக்கு மொத்தம் 113 எம்எல்ஏக்கள் உள்ளன. மெஜாரிட்டிக்கு இன்னும் 5 எம்எல்ஏக்கள் தேவையாக உள்ளது. இதனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் விசிக என 3 கட்சிகளிடம் இருக்கும் 6 எம்எல்ஏக்களின் ஆதரவை பெற விஜய் முயன்றுள்ளார். தவெகவிற்கு ஆதரவு கொடுக்கலாமா? வேண்டாமா? என்பது பற்றி நாளை முடிவு எடுக்க உள்ள நிலையில் ஸ்டாலினின் இந்த விவாதம் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
இப்போது உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம். திமுக - அதிமுக சேர்ந்தால் மெஜாரிட்டி கிடைக்குமா? என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். இருகட்சிகளும் இணைந்தால் எளிதில் மெஜாரிட்டியை எட்டும். ஏனென்றால் திமுகவுக்கு 59 எம்எல்ஏக்கள் உள்ளனர். அதிமுகவிற்கு 47 எம்எல்ஏக்கள் உள்ளனர். இவர்களை சேர்த்தால் மொத்தம் 106 எம்எல்ஏக்களாகும். மேலும் அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு 4 எம்எல்ஏக்கள், அமமுக - பாஜகவிற்கு தலா ஒரு எம்எல்ஏக்கள் என்று மொத்தம் 7 பேர் உள்ளனர்.
இவர்களை சேர்த்தால் மொத்த எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 112 ஆக உயரும். இதுதவிர திமுக கூட்டணியில் 2 கம்யூனிஸ்ட், விசிகவிடம் தலா 2 எம்எல்ஏக்கள் என்று தலா 6 எம்எல்ஏக்களும், தேமுதிகவிடம் ஒரு எம்எல்ஏவும், ஐயூஎம்எல் கட்சியிடம் 2 எம்எல்ஏக்களும் உள்ளன. இவர்களை சேர்த்தால் 121 எம்எல்ஏக்கள் வருவார்கள். இது மெஜாரிட்டிக்கு தேவையான 118 எம்எல்ஏக்களை விட அதிகம். இதனால் தான் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாதல் ஆட்சியமைப்பதில் தடுமாறினால் அதிமுக - திமுக கைகோர்த்தால் எளிதில் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications