ஆரம்பித்த இடத்திலேயே ஆப்பு வைத்த விக்கிரவாண்டி மக்கள்.. தவெகவை குப்புற வீழ்த்திய 8 மாவட்டங்கள்
சென்னை: விக்கிரவாண்டி மண்ணில் இருந்து தனது அரசியல் பயணத்தைத் தொடங்கிய விஜய்யின் தவெக, தேர்தல் முடிவுகளில் அதே மண்ணில் பலத்த அடியை சந்தித்துள்ளது. தமிழகம் முழுவதும் 108 இடங்களை அள்ளிக் குவித்து தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், முதல் மாநாடு நடந்த விக்கிரவாண்டி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் ஒரு தொகுதியைக் கூட அக்கட்சியால் கைப்பற்ற முடியவில்லை. கோட்டையை நோக்கி விஜய் நடைபோடும் இந்தச் சூழலில், ஆரம்பப்புள்ளியான விழுப்புரமே அவருக்கு அதிர்ச்சித் தோல்வியைப் பரிசாக அளித்துள்ளது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
தமிழகமே நேற்று முன்தினம் வெளியான தேர்தல் முடிவுகளில் திகைத்துப் போயிருக்கிறது. 108 இடங்களை அள்ளிக் குவித்து, திராவிடக் கோட்டைகளை சரித்து, கோட்டை நோக்கித் தனது அரசியல் பயணத்தை உறுதி செய்துள்ளார் விஜய்.

தவெக விஜய் ரிசல்ட்
அமைச்சர்களும் ஜாம்பவான்களும் சரிந்த இந்தத் தேர்தல் ரிசல்ட்டில், யாரும் எதிர்பார்க்காத வகையில் 8 மாவட்டங்கள் மட்டும் தவெகவிற்குப் பெரும் முட்டுக்கட்டையைப் போட்டுள்ளன.
குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு நடந்த அதே விக்கிரவாண்டியில் அக்கட்சி சந்தித்திருக்கும் தோல்விதான் அரசியல் வட்டாரத்தில் இன்று ஹாட் டாபிக்காக ஓடிக் கொண்டிருக்கிறது. விஜய் அரசியல் பேசத் தொடங்கிய மண்ணில், அவருக்கு தோல்வியே இருக்காது என்று நம்பிய தவெக தொண்டர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் அந்தத் தொகுதியை தவெக கோட்டை விட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தின் ஒரு தொகுதியில் கூட அக்கட்சியால் ஜெயிக்க முடியவில்லை. விக்கிரவாண்டி பூத்களில் இருந்து வெளியான தகவலின்படி, ஆரம்பத்தில் தவெக முன்னிலை வகித்தாலும், கிராமப்புற வாக்குகள் எண்ணப்படும் போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. மாநாட்டிற்குத் திரண்ட கூட்டம், அந்த மண்ணின் பாரம்பரிய வாக்குகளை மாற்றத் தவறிவிட்டது அப்பட்டமாகத் தெரிகிறது.
தவெகவை குப்புற வீழ்த்திய 8 மாவட்டங்கள்
விழுப்புரம் தவிர்த்து அரியலூர், நாகப்பட்டினம், தென்காசி, கன்னியாகுமரி, திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நீலகிரி என மொத்தம் 8 மாவட்டங்களில் உள்ள 33 தொகுதிகளில் தவெக ஒரு இடத்தை கூட பிடிக்கவில்லை.
டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் திராவிடக் கட்சிகள் வைத்திருக்கும் அந்த "அடிமட்டத் தொண்டர் படை" இன்னும் சிதறவில்லை என்பதையே இது காட்டுகிறது. உதாரணமாக, நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் பகுதிகளில் நீண்டகாலமாக பதிந்துள்ள கட்சி விசுவாசத்தை உடைத்து, தவெகவின் புதிய அரசியல் உள்ளே நுழைய முடியவில்லை.
விக்கிரவாண்டியில் களப்பணி செய்யலியா
"விஜய் மீது ஆர்வம் இருக்கிறது, ஆனால் ஓட்டு என்று வரும்போது எங்களுக்கென ஒரு அடையாளம் இருக்கிறது" என்பதே அந்த பகுதி வாக்காளர்களின் மனநிலையாக உள்ளது.
சாதீய கணக்குகளும், லோக்கல் நிலவரங்களும் இந்த தோல்விகளுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகின்றன. விக்கிரவாண்டி போன்ற பகுதிகளில் குறிப்பிட்ட சமூக வாக்குகளை தன்பக்கம் இழுக்க தவெக எடுத்த முயற்சிகள் எடுபடவில்லை... தொகுதிக்கான வேலையை யாரும் செய்யவில்லையா? அல்லது செய்தும் ஏன் எடுபடவில்லை என தெரியவில்லை.
ஆனால் களத்தில் ஒரு வலுவான உள்ளூர் நிர்வாகக் கட்டமைப்பு இல்லாததுதான், 108 இடங்களை வென்ற விஜய்க்கு இந்த 33 தொகுதிகளில் ஏமாற்றத்தைத் தந்துள்ளதாக தெரிகிறது.
ஆரம்பித்த இடத்திலேயே ஆப்பு
தமிழகத்தின் ஆட்சி கட்டிலுக்கு மிக அருகில் விஜய் சென்றுள்ள நிலையில், அவரைப் புறக்கணித்த இந்த 8 மாவட்டங்கள் ஒரு பெரும் பாடத்தையே கொடுத்துள்ளன.
அதுவும் ஆரம்பித்த இடமான விக்கிரவாண்டியிலேயே சறுக்கியிருப்பது, வரும் காலங்களில் தவெக தனது களப்பணிகளை எப்படி மாற்றியமைக்க வேண்டும் என்பதற்கான சிக்னலாகவே அரசியல் நோக்கர்களால் பார்க்கப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications