“வில்லன் அடிச்சிக்கிட்டே இருப்பான்.. ஹீரோ கடைசியா ஒரே அடி..“ ஓபிஎஸ் பற்றி வைத்திலிங்கம் பரபர பேச்சு!
சென்னை: "வில்லனிடம் ஹீரோ தொடர்ந்து அடி வாங்கி கொண்டே இருப்பார். ஆனால், கடைசியில் ஹீரோவின் ஒரே அடியில் வில்லன் அவுட்" என கூறியுள்ளார் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்.
அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் நீக்கப்பட்டு, எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச் செயலாளரான நிலையில், அதிமுக கொடி, சின்னம் மற்றும் லெட்டர் பேட் உள்ளிட்டவற்றை ஓபிஎஸ் மற்றும் அவரது தரப்பினர் பயன்படுத்த இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மேல்முறையீட்டு மனு நாளை விசாரணைக்கு வருகிறது.

இதற்கிடையே, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தீவிர இடுப்பு வலி, முதுகு வலி காரணமாக கடந்த ஒரு வாரமாக சிங்கப்பூரில் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் இன்று சென்னை திரும்பிய அவர், அதிமுக கரை வேட்டி இன்றி, அதிமுக கொடி இல்லாத காரில் பயணித்தார். இவ்வளவு நாளாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் தான் தான் என்று கூறிவந்த ஓபிஎஸ், நீதிமன்ற உத்தரவின் காரணமாக கட்சி கரை வேட்டியை கூட கட்ட முடியாத நிலைக்குச் சென்றுள்ளார்.
சென்னை வந்ததும் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் தலைமையில் இன்று சென்னையில் உள்ள அவரது வீட்டில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த முன்னணி தலைவர்களான முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், புகழேந்தி, வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஓபிஎஸ் வீட்டுக்கு வந்த நிர்வாகிகளின் கார்களிலும் அதிமுக கொடி கட்டப்படவில்லை. அவர்களும் அதிமுக கட்சிக் கொடி இல்லாத காரில் வருகை தந்தனர். அதிமுக கொடி உள்ளிட்டவற்றை ஓபிஎஸ் தரப்பினர் பயன்படுத்த இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஓபிஎஸ் தலைமையில் இன்று முக்கிய ஆலோசனை நடைபெற்றுள்ளது.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், கட்சிக் கரை வேட்டி கட்டுவது அவரவர் விருப்பம், அதில் யாரும் தலையிட முடியாது என்றார். அதைத்தொடர்ந்து, அதிமுக கட்சி தொடர்பான வழக்குகளில் ஓபிஎஸ் தரப்புக்கு தொடர்ந்து பின்னடைவு ஏற்படுவது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த வைத்திலிங்கம், "திரைப்படங்களில் ஹீரோ, வில்லனிடம் தொடர்ந்து அடி வாங்கி கொண்டே இருப்பார். ஆனால், இறுதியில் ஹீரோவின் ஒரே அடியில் வில்லன் அவுட்டாகி விடுவான். அந்த கதைதான் நடக்கும். கடைசியில் ஓபிஎஸ் வில்லனை வீழ்த்துவார்.
நாங்கள் கட்சி வேட்டி கட்டுவதை யாரும் தடுக்க முடியாது. நீதிமன்ற உத்தரவுக்கிணங்க கார்களில் கொடி கட்டவில்லை. அதிமுக நன்றாக இருக்க வேண்டும், அதிமுக ஒன்றிணைய வேண்டும், தமிழ்நாட்டில் மீண்டும் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்பதே ஓ.பன்னீர்செல்வத்தின் நிலைப்பாடு. தேர்தல் நெருங்கும் போது ஓபிஎஸ் சசிகலாவை சந்திப்பார் என தெரிவித்தார்.
அவரை தொடர்ந்துத் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி, "நீதிமன்ற உத்தரவால் மக்கள் மன்றத்தில் ஓ.பி.எஸ்க்கு அனுதாபம் ஏற்பட்டுள்ளது. அது நாடாளுமன்ற தேர்தலில் வெற்றியாக மாறும்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications