வில்லங்க சான்றிதழ்.. அதைவிடுங்க.. ரொக்க பரிமாற்றமா? ஆவண எழுத்தர் உரிமம்.. தமிழக பத்திரப்பதிவு அதிரடி
சென்னை: பொதுமக்களின் நன்மைக்காகவும், வசதிக்காகவும், பல்வேறு அறிவிப்புகளையும், சலுகைகளையும் வெளியிட்டு வருகிறது பத்திரப்பதிவு துறை. இந்நிலையில், ஆவண எழுத்தர் உரிமம் குறித்து பதிவுத்துறை தலைவர் இப்போது ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
வீடு, மனை போன்ற சொத்துக்களை வாங்கும்போது, ஆவண எழுத்தர்கள் மிகவும் அவசியம்.. காரணம், வில்லங்கம் பார்ப்பதில் ஆரம்பித்து, கிரையப்பத்திரம் பதிவு செய்வது வரை, ஒவ்வொரு நிலையிலும் ஆவண எழுத்தர்களின் பணிகளை மக்கள் நம்பியிருக்க வேண்டியிருக்கிறது.

பதிவுத்துறை: அதனால்தான் தமிழகம் முழுவதும், 5,000க்கும் மேற்பட்ட ஆவண எழுத்தர்களுக்கு பதிவுத்துறை உரிமம் வழங்கியுள்ளது.. இவர்களுக்கான பணிகள் என்ன? பத்திரப்பதிவில் இவர்களின் பொறுப்பு என்ன? என்றெல்லாம் பதிவுத்துறை வகுத்து வைத்திருக்கிறது.
இந்நிலையில், சார் பதிவாளர் அலுவலகங்களில் ஆவண எழுத்தர்கள் நுழைய சமீபத்தில் தடை விதிக்கப்பட்டது.. இதையடுத்து, ஆன்லைன் முறையில் குடிமக்களுக்கான நுழைவு வசதியை பயன்படுத்தி, சொத்து பரிமாற்ற விபரங்களை, அடையாள விபரங்களை பொதுமக்களே உள்ளீடு செய்யலாம் என்று ஒரு சாரார் தெரிவித்து வருகின்றனர்.
எழுத்தர்கள்: ஆனால், சரியான வழிகாட்டி மதிப்பை குறிப்பிடுவது, முத்திரை தீர்வை, பதிவு கட்டணம் ஆகியவற்றை கணக்கிடுவதில் ஆவண எழுத்தர்களின் உதவி தேவைப்படுகிறது என்பதால், ஆவண எழுத்தர்களை, சார் பதிவாளர் அலுவலகங்களில் அனுமதிக்க வேண்டும் என்று மற்றொரு சாராரும் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.
இப்படிப்பட்ட சூழலில், ஆவண எழுத்தர்களின் உரிமம் புதுப்பித்தல் பணிக்கு, ஆன்லைன் வசதியை பதிவுத்துறை அறிமுகம் செய்திருக்கிறது.. காரணம், இப்போதைக்கு 5,141 பேர் உரிமம் பெற்ற ஆவண எழுத்தர்களாக உள்ளனர்.. மாவட்ட பதிவாளர்கள் வாயிலாக, இவர்களின் உரிமம் 5 வருடத்துக்கு ஒரு முறை புதுப்பிக்கப்பட வேண்டும் என்பது விதியாகும்..
புதிய உத்தரவு: இந்நிலையில், பதிவுத் துறையில் பல்வேறு பணிகளுக்கான கட்டணங்கள், ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட்டிருக்கின்றன.. எனவே, ஆவண எழுத்தர் உரிமம் புதுப்பித்தலில், ரொக்க பரிமாற்றம் இருப்பதை தடுக்க வேண்டும் என்று பதிவுத்துறை முடிவு செய்திருக்கிறது.. எனவே, இதற்காக, பத்திரப்பதிவுக்கான இணையதளத்தில், ஆவண எழுத்தர் உரிமம் புதுப்பித்தல் கட்டணம் செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த வசதியை பயன்படுத்தி கட்டணம் செலுத்தும்படி, ஆவண எழுத்தர்களை மாவட்ட பதிவாளர்கள் மற்றும் சார் - பதிவாளர்கள் அறிவுறுத்த வேண்டும் என்று பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications