"பயத்தை காட்டிட்டியே பரமா"! வேட்புமனு நிறுத்தி வைப்பால் பதறிய ஆதவ் அர்ஜுனா! கடைசியில் ஏற்பு!
சென்னை: வில்லிவாக்கம் சட்டசபை தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் ஆதவ் அர்ஜுனாவின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அவரது வேட்புமனுவை தேர்தல் பார்வையாளர் சரிபார்த்ததில் அனைத்து விவரங்களும் சரியாக இருப்பதால் வேட்புமனுவை ஏற்க உத்தரவிட்டார். இதனால் தவெகவினர் நிம்மதியடைந்தனர்.
தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் வரும் 23 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கான நேற்றுடன் முடிவடைந்தது.

இந்த நிலையில் 7600-க்கும் மேற்பட்டோர் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனு தாக்கல் கடந்த 30 ஆம் தேதி தொடங்கியது. முதல் நாளில் முதல்வர் ஸ்டாலின், தவெக தலைவர் விஜய், நாம் தமிழர் சீமான், உள்ளிட்டோர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். முதல் நாளில் மட்டும் 573 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
2ஆவது நாளில் 788 பேரும், 3 ஆம் நாளில் 2,069 பேரும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். கடந்த 3 நாட்களில் 3,430 வேட்புமனுக்கள் தாக்கலாகின.
நேற்றைய தினம் வேட்புமனுவுக்கு கடைசி நாள் என்பதால் ஏராளமானோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இந்த நிலையில் காலை 11 மணிக்கு வேட்புமனு மீதான பரிசீலனை தொடங்கியது. இது எப்போது முடியும் என தெரியவில்லை. வரும் 9ஆம் தேதி வேட்புமனுக்களை திரும்ப பெறலாம் என சொல்லப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்றைய தினம் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கியது. அதில் தவெக தலைவர் விஜய் (பெரம்பூர், திருச்சி கிழக்கு), முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, விருதுநகர் விஜயபிரபாகரன், செந்தில் பாலாஜி, தமிழிசை சவுந்திரராஜன், முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார், எம்.சி. சம்பத், கே.பி.அன்பழகன், வானதி சீனிவாசன், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சேகர்பாபு, கே.என்.நேரு, ராஜகண்ணப்பன், சீமான், பிரேமலதா விஜயகாந்த், பொற்கொடி ஆம்ஸ்ட்ராங், புஸ்ஸி ஆனந்த், தவெக பொருளாளர் வெங்கட்ரமணன், திலகபாமா, முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்டோரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன.
அப்போது விஜய்யின் மனுவுக்கு பாமக உள்ளிட்ட வேட்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதாவது விஜய் இரண்டாவது முறையாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்த போது சொத்து மதிப்பை கூட்டியுள்ளதால் அவரது வேட்புமனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
அதற்கு தேர்தல் அலுவலர்கள், ஏதாவது ஆதாரங்கள் இருந்தால் கொடுங்கள் என கூறினர். இதைத் தொடர்ந்து வில்லிவாக்கம் தொகுதியில் ஆதவ் அர்ஜுனாவின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டது. அவரது மனுவை ஏற்கக் கூடாது என சுயேச்சை வேட்பாளர்கள் தேவராஜன், முரளி வினோத் என்பவர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதாவது பிரமாணபத்திரத்தில் ஆதவ் மனைவியின் பெயரில் உள்ள 35 நிறுவனங்களின் பெயர்களை குறிப்பிடவில்லை. மேலும் வருமான வரிக் கணக்கில் காட்டாமல் ஆதவ்விடம் ரூ 1 கோடி இருப்பதாக தெரிவித்துள்ளதால் அவரது வேட்புமனுவை ஏற்கக் கூடாது என்றனர்.
இதனால் தேர்தல் பார்வையாளர் வரும் வரை காத்திருக்குமாறு கூறி ஆதவ் அர்ஜுனாவின் வேட்புமனுவை தேர்தல் அலுவலர்கள் நிறுத்தி வைத்தனர். இதையடுத்து கொளத்தூரில் இருந்த தேர்தல் பார்வையாளர் வில்லிவாக்கம் அலுவலகத்திற்கு வந்தார். அதற்குள் ஆதவ் அர்ஜுனாவும் பதறியடித்துக் கொண்டார் வந்திருந்தார். ஆதவ்வின் பிரமாண பத்திரத்தை சரிபார்த்த தேர்தல் பார்வையாளர், அந்த வேட்புமனுவை ஏற்க சொன்னார். இதனால் ஆதவ் நிம்மதி பெருமூச்சுவிட்டார்.
அது போல் ஆர்.கே.நகர் தவெக வேட்பாளர் மரிய வில்சன், மயிலாப்பூர் தொகுதி திமுக வேட்பாளர் பாலு, விளவங்கோடு காங்கிரஸ் வேட்பாளர் பிரவீன் உள்ளிட்டோரின் வேட்புமனுக்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சிதம்பரம் தொகுதியின் தவெக வேட்பாளர் பாரியின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அவரது மனுவில் எழுத்துப் பிழை இருப்பதாகவும் பல இடங்கள் நிரப்பாமல் விடுபட்டதாகவும் கூறி நிராகரிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications