முதல்ல நீட்டுக்கு full form என்னன்னு விஜய்கிட்ட கேளுங்க! தெரியுதானு பார்ப்போம்! பாஜக நிர்வாகி நறுக்
சென்னை: நடிகர் விஜய்யிடம் நீட்டிற்கு விரிவாக்கம் என்ன என கேட்க வேண்டும். யாரோ எழுதி கொடுத்ததை விருது வழங்கும் விழாவில் பேசியுள்ளார் என பாஜக நிர்வாகி வினோஜ் செல்வம் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் வினோஜ் செல்வம் பேசியதாவது: நடிகர் விஜய் மக்களை சந்திக்க வேண்டும். செய்தியாளர்களும் விஜய்யை சந்தித்து எதற்காக நீட் வேண்டும் என சொல்கிறீர்கள் என கேட்க வேண்டும். அதற்கு முன்பாக நீட் என்பதற்கு full form (விரிவாக்கம்) என்ன என்பதையும் நீங்கள் (செய்தியாளர்கள் கேட்க வேண்டும்).

நீட் என்பதன் விரிவாக்கத்தை சரியாக விஜய் சொல்லிவிட்டார் என்றால் நீட்டோட தேவை என்ன, எதற்காக அதை விஜய் எதிர்க்கிறார் என்ற 3 விஷயங்களை விஜய் கூற வேண்டும். எங்களை கேட்பது போல் விஜய்யையும் கேள்வி எழுப்பினால் மக்கள் அதை வைத்து புரிந்து கொள்வார்கள்.
நடிகர்களின் பின்னால் ஏமாந்து செல்வதற்கு மக்கள் தயாராக இல்லை. நடிகர்களை திரையில் பார்த்து ரசிக்க தயாராக இருக்கிறார்கள். ஆனால் தமிழகத்திற்கு தலைமை பண்போடு மக்களை வழிநடத்தக் கூடிய தலைவர்கள் தேவை. அத்தகைய தலைவர்கள் பாஜகவில் இருக்கிறார்கள்.
2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் ஒரு நல்லாட்சி, ஒரு நல்ல மாற்றம் ஏற்படும். தமிழகத்திற்கு தேவையான ஒரு தலைமையை கொடுக்க போகிறோம். ஏற்கெனவே வந்த அரசியலுக்கு வந்த ஒரு நடிகர் உதயநிதியை போல் இப்போது வந்த நடிகர் விஜய், நீட் வேண்டாம் என சொல்கிறார்.
கட், காப்பி, பேஸ்ட் செய்வதெல்லாம் விட்டுவிட்டு ஆராய்ந்து உண்மைத்தன்மையை அறிந்து நீட் எதற்காக கொண்டு வரப்பட்டது , அதன் முக்கியத்துவம் என்ன என்பதை தெரிந்து கொண்டு பண்போடு பேச வேண்டும் என அவரை நான் கேட்டுக் கொள்கிறேன்.
அது போல் கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என விஜய் சொல்வதும், யாரோ எழுதி கொடுத்த அறிக்கையை அவர் வாசித்துள்ளார். அறிக்கையில் கூட கம்ப்யூட்டரைஸ்டு கையெழுத்து போடுவதன் மூலம் அவர் அந்த காலத்தில் இருக்கிறார். இன்னும் அரசியலுக்கு வரவில்லை. இரு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த படங்கள் வெற்றி பெற என் வாழ்த்துகள். படங்கள் எல்லாம் வெளியாகி மக்களை சந்தித்து நீட் எதற்காக வேண்டாம் என சொல்கிறார் என அவரே பதில் சொன்னால் நன்றாக இருக்கும். இவ்வாறு வினோஜ் செல்வம் தெரிவித்திருந்தார்.
நடிகர் விஜய் நேற்று நடந்த விருது வழங்கும் விழாவில் நீட் குறித்து பேசியிருந்தார். அவர் பேசுகையில் நீட் தேர்வால் ஏழை, கிராமப்புற பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். நீட் தேர்வில் நான் மூன்று முக்கிய பிரச்சினைகளை பார்க்கிறேன். முதலில் நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானது.
கல்வி முன்பு மாநில பட்டியலில் இருந்தது. அதை மத்திய அரசு பொது பட்டியலுக்கு கொண்டு வந்த போதுதான் சிக்கல் ஏற்பட்டது. ஒரே நாடு, ஒரே பாடத்திட்டம், ஒரே தேர்வு என்பதை அடிப்படையில் கல்வி கற்றலுக்கே எதிரான விஷயமாக பார்க்கிறேன். ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஏற்றவாறு பாடத்திட்டம் இருக்க வேண்டும்.
பன்முகத்தன்மை என்பது பலமே தவிர பலவீனம் அல்ல. இரண்டாவது மாநில பாடத்திட்டத்தில் படித்துவிட்டு என்சிஇஆர்டி பாடத்திட்டத்தின்படி நடத்தப்படும் தேர்வை எப்படி எல்லோராலும் எழுத முடியும். அதுவும் மருத்துவ கல்விக்கான நுழைவுத் தேர்வை எழுதுவது என்பதை யோசித்து பாருங்கள்.
மூன்றாவதாக, நீட் தேர்வு குளறுபடிகள் பற்றி நாம் நிறைய செய்திகளை வாசித்தோம். அதன்மூலம் நீட் தேர்வு மீதான நம்பகத்தன்மையே மக்களுக்குப் போய்விட்டது. நீட் தேர்வு தேவையில்லை என்பதுதான் ஊடகச் செய்திகள் மூலமாக நாம் புரிந்து கொண்ட விஷயமாக உள்ளது என கூறிய அவர் தமிழக சட்டசபையில் நீட் விலக்கு கோரி போடப்பட்ட தீர்மானத்தை வரவேற்பதாக தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications