காளிமுத்து மகன் டேவிட் அண்ணா துரை.. ராஜகுமாரி சாருபாலா.. டீம் தினகரனின் விஐபி வேட்பாளர்கள்!
சென்னை: அமமுகவின் முதல் கட்ட லோக்சபா தேர்தல் வேட்பாளர்கள் பட்டியலில் சில முக்கிய வேட்பாளர்களும் இடம் பெற்றுள்ளனர்.
முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகன் டேவிட் அண்ணாதுரை, முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா, திருச்சி மாநகராட்சி முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான் இவர்களில் சிலர்.
முக்கியஸ்தர்கள் மட்டுமல்லாமல் ஜெயலலிதா ஸ்டைலில் சாதாரண தொண்டர்களுக்கும் கூட சீட் கொடுத்துள்ளார் தினகரன்.
சாருபாலா
புதுக்கோட்டை சமஸ்தான குடும்பத்தைச் சேர்ந்தவர் சாருபாலா தொண்டைமான். காங்கிரஸிலும், பின்னர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிலும் இருந்தவர். திருச்சி மாநகர மேயராக இருந்தவர். அவருக்கென்று தனி செல்வாக்கும் உள்ளது. திருச்சியில் நிச்சயம் சாருபாலா தொண்டைமான் வாக்குகளைப் பிரிப்பார் என்பதால் திருச்சியில் போட்டியிடும் மற்ற முக்கிய கட்சிகளுக்கு சிரமம்தான்.
திருச்சியில் டஃப் கொடுக்க களம் இறக்கப்படுகிறார் சாருபாலா தொண்டைமான்.. தினகரன் "நச்" மூவ்!
காளிமுத்து மகன் டேவிட்
மறைந்த காளிமுத்துவின் மகன் டேவிட் அண்ணாதுரை மதுரை லோக்சபா தொகுதியில் வேட்பாளராக்கப்பட்டுள்ளார். இவரும் முக்குலத்தோர் பிரிவைச் சேர்ந்தவர்தான். மதுரை தொகுதியில் நிச்சயம் சிபிஎம் வேட்பாளருக்கும், அதிமுக கூட்டணி வேட்பாளருக்கும் நல்ல சவாலாக இருப்பார் டேவிட் அண்ணாதுரை. காளிமுத்துவுக்கென்று உள்ள பெயருடன், ஜாதி வாக்குகளும் இணையும் என்ற எதிர்பார்ப்பு அமமுகவுக்கு உள்ளது.
தென் சென்னை இசக்கி சுப்பையா
ஜெயலலிதா காலத்தில் அமைச்சராக குறுகிய காலம் இருந்தவர் இசக்கி சுப்பையா. ரிசார்ட் உள்ளிட்ட சொத்துக்களுடன் செட்டிலானவர். மிகப் பெரிய பணக்காரர். இவரது பண பலம் தென் சென்னையில் விளையாடும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. தென் சென்னையில் திமுக போட்டியிடுகிறது. எனவே இங்கு இசக்கி சுப்பையாவின் டஃப் எப்படி இருக்கும் என்பது எதிர்பார்ப்புக்குரியது.
ஸ்ரீபெரும்புதூர் தாம்பராம் நாராயணன்
ஸ்ரீபெரும்புதூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தாம்பரம் நாராயணன், ஆரம்பத்தில் காங்கிரஸ், தமாகா என்று வலம் வந்தவர். தமாகாவை ஜி.கே.வாசன் மீண்டும் உருவாக்கியபோது அதன் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். ஆனால் சேர்ந்த 3 மாதத்திலேயே கட்சியை விட்டு விலகினார் பின்னர் அதிமுகவில் இணைந்தார். தினகரனுடன் இணைந்து அமமுகவுக்கு வந்தார். தற்போது வேட்பாளராகியுள்ளார். பண பலம் படைத்த வேட்பாளும் கூட. டி.ஆர். பாலு ஸ்ரீபெரும்புதூரில் நிற்பார் என்பதால் கடுமையான போட்டியை நாராயணன் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவர்கள் தவிர மற்ற வேட்பாளர்களும் கூட ஏதாவது ஒரு வகையில் கடுமையான போட்டியைக் கொடுக்கக் கூடியவர்களே. எனவே ஒவ்வொரு தொகுதியிலும் பெருமளவில் வாக்குகளைப் பிரிப்பார்கள் என்பதால் போட்டி நிச்சயம் கடுமையாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.