"மக்களுக்காக அழுவதைவிட பிரியாணிக்காக அழுவது மேல்".. இது வித்தியாசமான பிறந்தநாள் வாழ்த்தா இருக்கே!
மகளின் பிறந்தநாளுக்கு தந்தை அனுப்பிய வாழ்த்தி செய்தி ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
சென்னை: மகளின் 21வது பிறந்தநாளில் தந்தை அனுப்பிய வாழ்த்து செய்தி ஒன்று சமூகவலைதளங்களை ஆக்கிரமித்து வருகிறது.
எந்த ஒரு வீட்டிலும் ஆண் பிள்ளைகள் அம்மா செல்லமாகவும், பெண் பிள்ளைகள் அப்பா செல்லமாகவும் தான் இருப்பர். அதனால் தான் "மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு தான் தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்ததில்லை என்று.." என நா.முத்துகுமார் எழுதினார் போலும். எப்போதுமே பெண் பிள்ளைகளுக்கு அப்பா என்றால் கொஞ்சம் ஸ்பெஷல் தான். அப்பாக்களுக்கும் மகள்கள் திருமணமாகி போனால்கூட எப்போதுமே லிட்டில் பிரின்சஸ் தான்.
இதனை மெய்ப்பிக்கும் வகையில் வைரலாகி இருக்கிறது மகளின் பிறந்தநாளுக்கு தந்தை அனுப்பிய வாழ்த்து செய்தி ஒன்று. ரூபாஸ்ரீ என்பவர் தனது சமூகவலைதளப்பக்கத்தில், தனது தந்தை தனக்கு அனுப்பிய பிறந்தநாள் வாழ்த்து செய்தியை பகிர்ந்து, "நான் எனது பெற்றோருக்கு தகுதியற்றவள்", என குறிப்பிட்டிருந்தார்.
அந்த வாழ்த்து செய்தியில், "பிறந்தநாள் வாழ்த்துகள் மனு பேட்டா. இன்று காலை நீ அழுவதை பார்த்தேன். உனது அன்புக்கு தகுதியற்றவர்களுக்காக நீ அழக்கூடாது. உனக்கு 21 வயதாகிவிட்டது. உனது மதிப்பை நீ அறிந்து கொள்ள வேண்டும். உன் வாழ்வில் நிறைய பேர் வருவார்கள் போவார்கள். அதை மாற்ற முடியாது. எனவே உனது மதிப்பை அறிந்து நீ உன்னை முதலிடத்தில் வை.
இப்படி ஒரு பாசமா.. நினைத்து பார்க்கவே முடியவில்லை.. கண் கலங்க வைத்த திருப்பூர் அண்ணன்-தங்கை
மக்களுக்காக அழுவதைவிட பிரியாணிக்காக அழுவது எவ்வளவோ மேல். ஆனால் நீ உனது உணவுப் பழக்கத்தை மாற்றியே ஆக வேண்டும். நாளுக்கு நாள் நீ குட்டி யானை போல் பெருத்துக்கொண்டே போகிறாய். அடுத்தமுறை உன்னை யாராவது துன்புறுத்தினால் இப்படி அழுது கொண்டிருக்காதே. அவர்களது எலும்பை உடைத்து மருத்துவமனைக்கு அனுப்பிவிடு. பிறந்தநாள் வாழ்த்துகள்", என அந்த தந்தை தனது மகளுக்கு அனுப்பிய வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
ரூபாஸ்ரீயின் இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் அவரது தந்தையை பாராட்டி வருகின்றனர். இந்த பதிவு ஆயிரக்கணக்கான லைக்குகளை பெற்று வருகிறது.