விருதுநகர் பலாத்கார சம்பவம்...இதுதான் பெண்களுக்கு தரும் பாதுகாப்பா? கடும் நடவடிக்கை தேவை - இபிஎஸ்
பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் பன்மடங்கு இந்த அரசின் கீழ் அதிகரித்திருக்கிறது , இதுதான் தாங்கள் பெண்களுக்கு அளிக்கும் பாதுகாப்பா என்று எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: விருதுநகர் பெண் பாலியல் பலாத்கார வழக்கில் கண்துடைப்பு கைது நடவடிக்கை மட்டுமில்லாமல்,திமுக அரசு இக்குற்றத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார். பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் பன்மடங்கு இந்த அரசின் கீழ் அதிகரித்திருக்கிறது , இதுதான் தாங்கள் பெண்களுக்கு அளிக்கும் பாதுகாப்பா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
விருதுநகர் பெண் பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறியுள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் இளம்பெண்ணை கடந்த சில மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்த 8 பேர் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர். தனியார் ரெடிமேட் ஆடைகள் தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த அந்த பெண்ணை, திமுக பிரமுகர் ஹரிஹரன் காதலித்தார்.

ஆபாச வீடியோ
ஹரிஹரன் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி அந்தப் பெண்ணுடன் பாலியல் உறவு வைத்து அதை வீடியோவாக பதிவு செய்துள்ளார். இதனிடையே அந்த இளம்பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஹரிஹரனை வற்புறுத்தியுள்ளார். ஆனால் ஹரிஹரன் திருமணம் செய்ய மறுத்துள்ளார். இதை அடுத்து அந்த இளம்பெண்ணிற்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

பாலியல் பலாத்காரம்
இதற்கிடையில் ஹரிஹரன், ஏற்கனவே பதிவு செய்த வீடியோ காட்சிகளை வைத்து மிரட்டி பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளார். பிறகு அந்த வீடியோவை ஹரிஹரன் தனது நண்பர்களுக்கு சமூக ஊடகம் மூலம் அனுப்பி வைத்துள்ளார். ஹரிஹரனின் நண்பர்களும் அந்த வீடியோவை இளம் பெண்ணிடம் காட்டி மிரட்டி அவருடன் பாலியல் உறவு வைத்ததும், ஹரிஹரன் தொடர்ந்து இளம் பெண்ணை தொந்தரவு செய்து வந்ததும் தெரிய வந்துள்ளது.

பெண்ணிடம் அத்துமீறல்
ஜுனைத் அகமது பெண்ணின் ஆபாச வீடியோவை காண்பித்து மிரட்டி அந்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார் . அத்துடன் ஹரிஹரன் மற்றும் அவரது நண்பர் உட்பட 7 பேர் ஆபாச வீடியோவை காட்டி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளனர். இதுகுறித்து சமீபத்தில் விருதுநகர் பாண்டியன் நகர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

திமுக நிர்வாகி உள்ளிட்ட 8 பேர் கைது
திமுகவை சேர்ந்த 2 பேர், கூலி தொழிலாளர்கள் 2 பேர், பள்ளி மாணவர்கள் 4 பேர் என 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் குற்றவாளிகள் மீது உரிய தண்டனை எடுக்கப்பட வேண்டுமென திமுக எம்.பி. கனிமொழி , மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன், பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

எடப்பாடி பழனிச்சாமி
அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், "விருதுநகரில் இளம் பெண் ஒருவரை திமுக பிரமுகர் உட்பட 8பேர் சேர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி அவரது வாழ்வை சீரழித்துள்ள கொடுஞ்செய்தி கேட்டு பெருவருத்தம் அடைந்தேன், கண்துடைப்பு கைது நடவடிக்கை மட்டுமில்லாமல்,திமுக அரசு இக்குற்றத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

குற்றங்கள் அதிகரிப்பு
பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் பன்மடங்கு இந்த அரசின் கீழ் அதிகரித்திருக்கிறது , இதுதான் தாங்கள் பெண்களுக்கு அளிக்கும் பாதுகாப்பா? " என்று பதிவிட்டுள்ளார். விருதுநகர் பெண் பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications