சிக்கல்.. எடப்பாடி பழனிசாமியின் எஃகு கோட்டை.. "ஆடியோ குண்டு" வைத்து தகர்க்க முடியுமா.. என்ன பிளான்?
அதிமுகவை சசிகலா விரைவில் கைப்பற்றுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுகிறது
சென்னை: சசிகலாவின் ஆடியோ லீக் ஆனதையடுத்து, அதிமுகவை அவர் விரைவில் கைப்பற்றிவிடுவாரா? அது சாத்தியமா? அதிலும் எடப்பாடி பழனிசாமியிடமிருந்து அதிமுகவை முழுமையாக மீட்டெடுப்பது எளிதான ஒன்றா என்ற கேள்வி எழுகிறது...!
Recommended Video
அதிமுகவின் தேர்தல் தோல்விக்கு பிறகு ஓபிஎஸ் - இபிஎஸ் இடையேயான பனிப்போர் அதிகமாகி கொண்டே இருக்கிறது..
2 பேருக்குமே அதிமுகவை தங்களின் ஒற்றத்தலைமையின் கீழ் வரவேண்டும் என்ற ஆசை இருக்கிறது.. இதற்காக ஆளுக்கொரு திசையில் முயற்சித்து வருகின்றார்கள்.

ஓபிஎஸ்
அதன்படியே தனி தனி அறிக்கைகள், தனித்தனி கூட்டங்களும் நடத்தி கொண்டிருக்கிறார்கள்.. ஆனால், ஓபிஎஸ்ஸை தன்னுடைய செல்வாக்கால் எடப்பாடி ஓரங்கட்டிவிட்டதாகவே அரசியல் நோக்கர்கள் சொல்லி வருகிறார்கள்.. இதனால், சசிகலாவை வைத்து அதிமுகவை தன் தலைமையின்கீழ் கொண்டு வர ஓபிஎஸ் மறைமுக முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும், இதற்காகவே சசிகலாவிடம் மத்தியஸ்தர்களை வைத்து தூது விட்டுக் கொண்டிருப்பதாகவும் கூறப்பட்டன.

முயற்சி
ஆனால், அதிமுகவை தன்னுடைய ஒற்றைத்தலைமையின் கீழ் கொண்டு வரவேண்டும் என்று சசிகலா ஒரு பக்கம் முயன்றுள்ளார்.. அதன் வெளிப்பாடாகவே, நேற்றைய தினம் தன்னுடைய ஆதரவாளருடன் போனில் பேசிய ஆடியோ லீக் செய்யப்பட்டுவிட்டதாக தெரிகிறது.. இதை வெளியிட்டது சசிகலா தரப்பு தான் என்றும், ஒட்டுமொத்த அதிமுகவினருக்கும் சசிகலா தெரிவிக்கும் மெசேஜ் இது என்றும் தெரிகிறது.

திணறல்
ஆனால், எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து கட்சியை கைப்பற்றுவது அவ்வளவு எளிதான காரியமா? ஓபிஎஸ்ஸே இந்த 4 வருடமாக திணறி கொண்டுவரும் நிலையில், கட்சியில் இல்லாத சசிகலாவால் இது சாத்தியமா? அதிலும் ஜெயிலில் இருந்து வந்துள்ளதால், அதிமுக தொண்டர்களின் ஆதரவு சசிகலாவுக்கு கிடைக்குமா? என்ற சந்தேகங்களும் எழுகின்றன.

விசுவாசம்
அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள், அல்லது சீனியர்கள் யாருக்காவது, சசிகலா மீது நிஜமான விசுவாசம் இருந்தால், அவர் ரிலீஸ் ஆகி வந்த உடனேயே நேரில் சென்று சந்தித்திருக்கலாம்.. குறைந்தபட்சம் ஜெயலலிதா பிறந்தநாள் அன்று, சீமான், சரத்குமார் ஆகியோர் சென்று சந்தித்ததுபோல இவர்களும் சென்று வந்திருக்கலாம்.. ஆனால், கருணாஸ்கூட சென்று சந்திக்காதபோது, அதிமுக தரப்பில் ஒருத்தருமே சசிகலாவை நாடி செல்லவில்லை. அந்த அளவுக்கு எடப்பாடி பழனிசாமி தன்னுடைய ஆதரவாளர்களை கைப்பிடிக்குள் இறுக்கமாக வைத்திருந்தார்.

சசிகலா
யாராவது சசிகலாவுடன் நெருக்கம் பாராட்டுகிறார்களா? போனில் தொடர்பு கொண்டு வருகிறார்களா? என்றெல்லாம் கண்காணிக்க உளவுத்துறைக்கு அப்போதே வாய்மொழி உத்தரவையும் போட்டிருந்தார்.. அவரது வார்த்தைக்கு கட்டுப்பட்டே அனைத்து அதிமுக நிர்வாகிகளும் நடந்து கொண்டனர்.. அவ்வளவு ஏன், சசிகலாவை பற்றி செய்தியாளர்கள் கேள்வி கேட்டாலே, செல்லூர் ராஜு பதில் சொல்லாமல், தெறித்து ஓடிய நிகழ்வுகளும் நடந்தது.

சாத்தியமா?
விளைவு... கொங்கு மண்டலம் என்றில்லாமல், சசிகலாவின் செல்வாக்கு நிறைந்த தென்மண்டல அதிமுக நிர்வாகிகளின் ஆதரவை எடப்பாடி பழனிசாமி பெற்றுவிட்டார்.. இது தினகரனுக்கு மட்டுமல்ல, சசிகலாவுக்கே சற்று அதிர்ச்சிதான்.. மொத்தமுள்ள 65 அதிமுக எம்எல்ஏக்களில் 61 பேர் எடப்பாடிக்கு தான் ஆதரவு தெரிவித்து எதிர்க்கட்சி தலைவராக உட்கார வைத்துள்ளதையும் இங்கு நினைவுகூர வேண்டி உள்ளது.. இப்போதும் இதே நிலைமைதான் நீடிக்கிறது.. எனவே, இதையெல்லாம் சசிகலா, எந்த அளவுக்கு தகர்ப்பார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications