ஆஹா.. எடப்பாடியை "ஓவர்டேக்" செய்யும் சசிகலா.. முதல்வர் ஸ்டாலினுக்கு வைத்த மெகா கோரிக்கை.. நடக்குமா
திமுக அரசுக்கு சசிகலா முக்கிய கோரிக்கையை வைத்துள்ளார்
சென்னை: முதல்வர் ஸ்டாலினுக்கு, விகே சசிகலா முக்கிய கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.. அதிமுகவை முந்திக் கொண்டு சசிகலா செய்யும் அரசியல் அவரது ஆதரவாளர்களிடம் பெருத்த நம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறது.
தமிழகம் முழுவதும் கடந்த வாரம் பலத்த மழை கொட்டி தீர்த்தது.. இதில் சென்னை மிக மோசமாகவே பாதித்தது.
அந்த ஒரு வாரம் முழுவதுமே வெள்ள பாதிப்பு பகுதிகள் அனைத்தையும் முதல்வர் ஸ்டாலின் நேரடியாகவே பார்வையிட்டு ஆய்வு செய்தார்.. அதேபோல, எடப்பாடி பழனிசாமியும் நேரடியாகவே ஆய்வு செய்தார்.

ஆய்வு
இதனிடையே சசிகலாவும் மழை அரசியலுக்கு தயாரானார்... மழை வெள்ளத்தினால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து மக்களை காப்பாற்ற தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் தயார் நிலையில் இருக்குமாறு வைத்துக்கொள்ள வேண்டும் என்றும், கனமழையின் காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தகுந்த இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் திமுக அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார் சசிகலா..

நிவாரணம்
அதுமட்டுமல்லாமல், நேரடியாகவே ஆய்வு பணிகளில் ஈடுபட்டார்.. தென்சென்னையில் தி.நகர் கிரியப்பா சாலையில் தொடங்கி, கோட்டூர்புரம், சைதாப்பேட்டை, அசோக் நகர், விருகம்பாக்கம் பகுதிகளில் பார்வையிட்டு, பொதுமக்களுக்கு ஆறுதல் தெரிவித்த நிவாரண உதவிகளையும் வழங்கினார்... அத்தனை நாட்களும் வெறும் அறிக்கை மூலமாகவே, தன் அரசியலை சசிகலா முன்னெடுத்த நிலையில், முதல்முறையாக நேரடியாகவே களமிறங்கியது அவரது ஆதரவாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதேசமயம், அதிமுக மேலிடத்துக்கு கலக்கத்தை தந்தது.

அறிக்கை
இப்போது இன்னொரு விஷயத்தையும் கையில் எடுத்துள்ளார் சசிகலா.. வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு, முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு, அம்மா உணவகங்களில் இருந்து இலவச உணவு வழங்கப்படும் என்றும், சென்னையில் மழை, வெள்ள நீர் வடியும்வரை அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு விநியோகிக்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் கடந்த 9-ம்தேதி அறிவித்திருந்தார்.

அறிக்கை
அதற்கேற்றார்போல், மாநகரில் மழை வெள்ள நீர் வடிந்துவிட்டதால் அம்மா உணவகங்களில் வழக்கம்போல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சியும் நேற்று அறிவித்திருந்தது... அரசின் இந்த முடிவுக்கு சசிகலா எதிர்ப்பு தெரிவித்து ஒரு அறிக்கையும் வெளியிட்டுள்ளார். அதில், " மாநகரில் இன்றும் அநேக இடங்களில் மழைநீர் வடியாமல், கழிவுநீருடன் தேங்கி நிற்பதால் அதனை அப்புறப்படுத்த பொதுமக்கள் போராடி வருகின்றனர். அவர்கள் மாநகராட்சியால் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களில் மட்டுமல்லாமல், கழிவுநீர் கலந்த வெள்ளநீர் தேங்கிய அதே குடிசை வீடுகளிலேயே தங்கி உள்ளனர்.

இலவச உணவு
இதுபோன்று பாதிப்படைந்த வீடுகளில் உள்ள மக்களால், தங்களது இயல்பு வாழ்க்கையை மீண்டும் தொடர முடியாமல், குறிப்பாக தங்கள் சமையலறையில் சமையல் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே மழை வெள்ள நீர் வடியாத குடிசைப் பகுதிகளிலாவது அம்மா உணவகங்களில் இலவச உணவை தொடர்ந்து வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வெள்ள நீர் வடியாத குடிசை வீடுகளுக்கு மாநகராட்சி சார்பாக மூன்று வேளையும் உணவு தயாரித்து, அவர்களின் வசிப்பிடத்துக்கு சென்று வழங்க வேண்டும்" என்று சசிகலா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வேளாண் துறை
மேலும், பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் சம்பா நெற்பயிர்களை காப்பீடு செய்ய இன்றுடன் கடைசி நாள் என்று வேளாண் துறை அறிவித்துள்ளது. ஆனால் டெல்டா மற்றும் தென்மாவட்டங்களில் இன்னும் மழை பெய்து வருவதால் பல இடங்களில் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய முடியாமல் உள்ளனர்.
தொடர் பருவமழையை கருத்தில் கொண்டு, அனைத்து விவசாயிகளும் காப்பீடு செய்வதற்கு வசதியாக, குறைந்தது இரண்டு வாரங்களாவது அவகாசம் அளிக்க வேண்டும் என்றும் தமது அறிக்கையின் மூலம் மத்திய, மாநில அரசுகளுக்கு சசிகலா கோரிக்கை விடுத்துள்ளார்.
Recommended Video

அறிவிப்பு
இதுதான் அதிமுக மேலிடத்துக்கு மேலும் கலக்கத்தை தந்து வருகிறது.. அம்மா உணவகம் குறித்து இதுவரை எந்த ஒரு அறிவிப்பையும் எடப்பாடி பழனிசாமி வெளிப்படுத்தாத நிலையில், சசிகலா அவரை முந்தியுள்ளார்.. அதுமட்டுமல்ல, தங்கள் மீது விசாரணை கமிஷன் வைத்ததை மட்டுமே செல்லுமிடமெல்லாம் எடப்பாடி பழனிசாமி புலம்பி கொண்டு, முதல்வரை விமர்சித்து வரும் நிலையில், சசிகலாவின் இந்த ஆக்கப்பூர்வமான கோரிக்கையும், திமுகவிடம் முன்வைத்துள்ள வேண்டுகோளும் அவரது ஆதரவாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.












Click it and Unblock the Notifications