தமிழ்நாட்டிலும் SIR.. ஜனநாயகப் படுகொலையை எதிர்த்து தமிழ்நாடு போராடும்.. முதல்வர் ஸ்டாலின்
சென்னை: தமிழ்நாடு, கேரளா உள்பட 12 மாநிலங்களில் SIR எனப்படும் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த பணி மேற்கொள்வதற்கான அறிவிப்பினை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின், "மக்களின் வாக்குரிமைதான் ஜனநாயகத்தின் அடிப்படை. அதனைப் பறிக்கத் துணியும் ஜனநாயகப் படுகொலையை எதிர்த்து தமிழ்நாடு போராடும்" என்று பதிவிட்டுள்ளார்.
SIR எனப்படும் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த பணியானது பீகார் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டது. இதை தொடர்ந்து தற்போது தமிழகம் உள்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தேர்தல் ஆணையத் தலைவர் ஞானேஷ் குமார் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார்.

தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு திருத்தப் பணி மேற்கொள்ள பிரதான எதிர்க்கட்சியான அதிமுக முழு ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின், அவசரகதியில் செய்யப்படும் SIR நடவடிக்கை மக்களின் வாக்குரிமையைப் பறித்து, பா.ஜ.க.வுக்குச் சாதகமாகத் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் சதியாக அமைந்துள்ளது என்று கூறியுள்ளார்.
தனது எக்ஸ் தளத்தில் ஸ்டாலின் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டிலும் #SIR: வாக்குரிமைப் பறிப்பைத் தடுப்போம்! வாக்குத் திருட்டை முறியடிப்போம்! தேர்தலுக்கு மிக நெருக்கத்தில், அதுவும் பருவமழைக் காலமான நவம்பர், டிசம்பர் மாதங்களில் #SIR மேற்கொள்வது நடைமுறைச் சவால்கள் நிறைந்தது. அவசரகதியில் செய்யப்படும் SIR நடவடிக்கை மக்களின் வாக்குரிமையைப் பறித்து, பா.ஜ.க.வுக்குச் சாதகமாகத் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் சதியாக அமைந்துள்ளது.
ஏற்கெனவே, பீகாரில் பெண்கள், சிறுபான்மையினர், பட்டியல் - பழங்குடியின மக்கள் உள்ளிட்டோர் அதிக அளவில் வாக்காளர் பட்டியிலில் இருந்து நீக்கப்பட்டதுடன், இந்த நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை இல்லாததும் சேர்ந்து, கடும் ஐயத்தை அனைவரது மனதிலும் எழுப்பியிருக்கிறது.
தமிழ்நாட்டில் அடுத்த வாரம் முதல் SIR மேற்கொள்ளப்படும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், கூட்டணிக் கட்சிகளுடன் கலந்து பேசியிருக்கிறோம். அதனடிப்படையில் வரும் நவம்பர் 2 அன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் அழைத்து, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கக் கூட்டம் நடத்தப்படும்.
மக்களின் வாக்குரிமைதான் ஜனநாயகத்தின் அடிப்படை. அதனைப் பறிக்கத் துணியும் ஜனநாயகப் படுகொலையை எதிர்த்து தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்! இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications