கொரோனா பரவலைத் தடுக்க தமிழகத்தில் வார் ரூம்கள்.. "போரில்" வெல்ல ஸ்டாலினின் அதிரடி மூவ்!
சென்னை: கொரோனா பரவலை கட்டுப்படுத்த வார் ரூமை முதல்வர் ஸ்டாலின் தொடங்கியுள்ளது ஆக்கப்பூர்வமான முன்னெடுப்பாகவே பார்க்கப்படுகிறது. கொரோனாவை ஒழித்தே தீருவது என்ற யுத்தத்தில் மற்ற மாநிலங்களுடன் தமிழகமும் வேகமாக பயணிப்பதையே காட்டுகிறது.
நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இந்த மோசமான இரண்டாவது அலை சிலருக்கு அறிகுறியே இல்லாமல் கொரோனா பாசிட்டிவ் என வந்து மிகுந்த மோசமான நிலைக்கு தள்ளப்படுகிறது.
சென்னை மாநகராட்சி ஆணையராக ககன்தீப் சிங் பேடி நியமனம்.. ஸ்டாலினின் அடுத்த அதிரடி!
இந்தியாவில் ஆங்காங்கே ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆக்ஸிஜன் கிடைக்காமல் பல நோயாளிகள் உயிரிழக்கிறார்கள். கொரோனாவுக்கு உயிரிழக்கிறார்களோ இல்லையோ ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உயிரிழக்கிறார்கள்.
ஆக்ஸிஜன் தேவை
இதனால் ஆக்ஸிஜன் இருப்பு, ஆக்ஸிஜன் தேவை, ஆக்ஸிஜன் வசதி கொண்ட படுக்கைகள் குறித்த விவரங்களை அறிய வார் ரூம் எனப்படும் கட்டுப்பாட்டு கட்டளை மையம் பெரும்பாலான மாநிலங்களில் திறக்கப்பட்டன. டெல்லி, மும்பை, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் வார் ரூம்கள் திறக்கப்பட்டு ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையிலான குழுக்கள் கண்காணித்து வருகிறார்கள்.
108 ஆம்புலன்ஸ்
ஆக்சிஜன் தேவை, இருப்பு, படுக்கை வசதிகள் குறித்த விவரங்களை 104 என்ற எண்ணை தொடர்பு கொண்டு விவரங்களை அறியலாம். அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் இருப்பு மற்றும் படுக்கையின் எண்ணிக்கையை இந்த வார் ரூம் விரல் நுனியில் வைத்திருக்கும்.
அலைச்சல்
104க்கு கொரோனா நோயாளியோ அவர்களது உறவினர்களோ போன் செய்தால் எந்த மருத்துவமனையில் ஆக்ஸிஜன் இருக்கிறது, எந்த மருத்துவமனையில் எத்தனை படுக்கை வசதி இருக்கிறது என்பதை இந்த குழுவினர் தெரிவிப்பார்கள். இதன்மூலம் நோயாளியை மருத்துவமனை மருத்துவமனையாக தூக்கிச் செல்லும் அலைச்சல் மிச்சமாகும்.
முதல்வர் ஸ்டாலின்
அது போல் ஆம்புலன்ஸ் எங்கே இருக்கின்றன என்பது குறித்தும் இந்த வார் ரூம்கள் தெரிவிக்கும். சில மாநிலங்களில் முதல் அலை வீசிய போதே இது போன்ற வார் ரூம்கள் தொடங்கிவிட்டதாக கூறப்படுகின்றன. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா வார் ரூமை உருவாக்குமாறு தலைமை செயலாளர் இறையன்புவிற்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
வார் ரூம்கள் தயார்
அதன் பேரில் வார் ரூம்கள் தயார் செய்யப்பட்டு அதற்கு 6 ஐஏஎஸ் அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர். திமுக வென்றது முதலே கொரோனா ஒழிக்க ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வந்தார். தற்போது முதல்வராக பொறுப்பேற்ற நிலையில் கொரோனா தொற்றை ஒழிக்க மிக தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
நல்ல முன்னெடுப்பு
இன்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கூட ஆக்ஸிஜன் கையிருப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் ஆக்ஸிஜன் வீணாக அனுமதிக்கக் கூடாது என்றும் துறை சார்ந்த அமைச்சர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் கொரோனா ஒரு உயிர் கூட பலியாகக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளார். கேரளாவில் வார் ரூம்கள் உருவாக்கப்பட்டது போல் தமிழகத்தில் வார் ரூம்கள் செயல்படுத்தப்படுவது நல்ல முன்னெடுப்பாகவே பார்க்கப்படுகிறது.