போர் பதற்றத்தால் 36 விமானங்கள் ரத்து.. 3வது நாளாக சென்னையில் விமான சேவை கடும் பாதிப்பு!
சென்னை: போர் பதற்றத்தால் சென்னை விமான நிலையத்தில் 3வது நாளாக சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் இருந்து துபாய், அபுதாபி, சார்ஜா, குவைத், மஸ்கட் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல வேண்டிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் இருந்து புறப்பாடு விமானங்கள் 18 மற்றும் சென்னைக்கு வருகை தரும் விமானங்கள் 18 என மொத்தம் 36 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் காரணமாக 3வது நாளாக விமான சேவை பாதிக்கப்பட்டு உள்ளது.

அணு ஆயுத ஒப்பந்தத்தில் கையெழுத்திட முரண்டு பிடித்து வரும் ஈரான் மீது, அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து நேற்று முன்தினம் திடீர் தாக்குதல் நடத்தின. இதில் ஈரானின் உச்சத் தலைவர் கமேனி உள்பட பலர் கொல்லப்பட்டனர். பெண்கள், குழந்தைகள் என பொதுமக்களும் கொல்லப்பட்டதால் மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றம் உருவாகியுள்ளது.
இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது ஈரான் 2ஆவது நாளாக பதில் தாக்குதல் நடத்தியது. துபாய் மற்றும் கத்தார் தலைநகர் தோஹாவில் பலத்த குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. இதனால் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் போர் காரணமாக, மத்திய கிழக்கு நாடுகளில் வான் எல்லை மூடப்பட்டுள்ள நிலையில், இந்தியா - மத்திய கிழக்கு நாடுகள் இடையே 444 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னையில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்ல வேண்டிய மற்றும் வர வேண்டிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
நேற்று முன்தினம் (சனிக்கிழமை) சென்னை விமான நிலையத்திற்கு துபாய், அபுதாபி, பஹ்ரைன், மஸ்கட் ஆகிய நாடுகளில் இருந்து இயக்கப்படும் 16 வருகை விமானங்களும், சென்னையில் இருந்து மேற்கண்ட நாடுகளுக்குச் செல்லும் புறப்பாடு விமானங்கள் 12 என, மொத்தம் 28 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
2வது நாளான நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் இருந்து துபாய், அபுதாபி, சார்ஜா, பஹ்ரைன், குவைத், மஸ்கட் உள்ளிட்ட 17 புறப்பாடு விமானங்கள், இந்த நாடுகளில் இருந்து சென்னைக்கு வரவேண்டிய 16 வருகை விமானங்கள் மொத்தம் 33 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டன.
இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணி வரை துபாய், பஹ்ரைன், தோஹா, சார்ஜா, அபுதாபியில் இருந்து சென்னைக்கு வர வேண்டிய 18 விமானங்களும், சென்னையிலிருந்து புறப்பட வேண்டிய 18 விமான சேவைகள் என மொத்தம் 36 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது.
லண்டன், அமெரிக்கா, ஜெர்மன் உள்ளிட்ட நாடுகளில் இருந்து சென்னை வரும் பல்வேறு விமானங்கள் ஈரான், மத்திய கிழக்கு நாடுகளின் வான்வெளிகள் மூடப்பட்டுள்ளதால், மாற்றுப் பாதைகளில் விமானங்கள் சுற்றி வந்து மீண்டும் புறப்பட்டு செல்வதற்கு பல மணி நேரம் தாமதம் ஏற்படலாம் என்பதால், அந்த விமானங்கள் ரத்து செய்யப்படவும் வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு வருவதால் பயணிகள் கடும் அவதியடைந்து வருகிறனர். பயணிகள் தங்களுடைய விமான நிறுவனத்தை தொடர்பு கொண்டு முன்கூட்டியே தகவலை தெரிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications