4 மணி வரை உக்கிரமா இருப்பேன்! சுட்டெரிக்கும் வெயில்..வயதானவர்களுக்கு வார்னிங்! எப்போது வாக்களிப்பது?
சென்னை: தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் சேலத்தில் வாக்களிக்கச் சென்ற இரு முதியவர்கள் மயங்கி விழுந்து பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று மாலை 4 மணி வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் வயதானவர்கள் நான்கு மணிக்கு மேலே வாக்களிக்க செல்லலாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
பதினெட்டாவது மக்களவைக்கான 543 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் வகையில் நாடாளுமன்ற தேர்தலானது ஏப்ரல் 19ஆம் தேதியான இன்று தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் ஒரே கட்டமாக 39 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவானது காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
கொளுத்தும் வெயில்: கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். அதே நேரத்தில் கோடை வெயிலில் இருந்து வாக்காளர்களை காக்கும் பொருட்டு தேர்தல் ஆணையத்தின் சார்பில் பந்தல்கள், குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.
இருவர் பலி: இந்த நிலையில் கோடை வெயில் தாக்கம் மிகக் கடுமையாக இருக்கிறது. சென்னை, சேலம், ஈரோடு, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொளுத்தும் கோடை வெயிலால் வாக்குப்பதிவு சற்றே மந்தமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் சேலம் அருகே வாக்களிக்கச் சென்ற சின்ன பொண்ணு 75 வயது மூதாட்டியும் பழனிச்சாமி என்ற 65 வயது முதியவரும் கடும் வெயில் காரணமாக மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெயிலின் தாக்கம்: இன்று மாலை நான்கு மணி வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் எனவும் வெப்ப அலை காரணமாக உடலில் நீர் இழப்பு, உடல் சோர்வு ஆகியவை ஏற்பட வாய்ப்புள்ளதால் வயதானவர்கள் நான்கு மணிக்கு மேலே சற்றே வெயில் குறைந்த பிறகு வாக்களிக்க வர வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும் அதிக அளவில் தண்ணீர் பருக வேண்டும் குளிர்ச்சியான உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் வெயில் நேரத்தில் வெளியே வருவதை முதியவர்கள் குழந்தைகள் தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
எப்போது வாக்களிக்கலாம்?: மாலை நேரத்தில் வாக்களிக்க வரும் முதியோர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையமும் கேட்டுக் கொண்டுள்ளது. அது மட்டுமல்லாமல் 6 மணிக்குள்ளாக வந்தாலே காத்திருப்பவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு ஆறு மணிக்கு மேல் வாக்களிக்க அனுமதிக்கப்படும் என்பதால் முதியவர்கள் வெயிலில் வாக்களிக்க வருவதை தவிர்க்க வேண்டும் எனவும் மாலையில் வாக்களித்துக் கொள்ளலாம் என தேர்தல் ஆணைய அதிகாரிகளும் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications