டிடிஎஸ் தொகையை முறையாக செலுத்தாத வழக்கு.. நடிகர் விஷாலுக்கு எதிராக ஜாமீனில் வரமுடியாத பிடிவாரண்ட்
சென்னை: நடிகர் விஷாலுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவழக்கு நீதிமன்றம் நடிகர் விஷாலுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.மேலும் நடிகர் விஷால் வரும் ஆகஸ்ட் 28-ம் தேதிக்குள் ஆஜராக சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் விஷாலின் தயாரிப்பு நிறுவன ஊழியர்களிடம் பிடித்த டிடிஎஸ் வரி தொகையை முறையாக செலுத்தவில்லை என வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்துள்ளது.
நடிகர் விஷாலுக்கு சொந்தமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தில் கடந்த 5 ஆண்டுகளாக, பல்வேறு நபர்களுக்கு வழங்கிய தொகைக்கு டிடிஎஸ் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த டிடிஎஸ் தொகையை வருமானவரித் துறைக்கு குறித்த காலத்துக்குள் செலுத்தவில்லை என புகார் எழுந்தது.
இது தொடர்பாக வருமான வரித்துறை பலமுறை நடிகர் விஷாலுக்கு நோட்டீஸ் பிறப்பித்தும் அவர் பதில் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனையடுத்து வருமான வரி துறை சார்பில் எழும்பூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடிகர் விஷாலுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
வருமான வரித் துறை சார்பில் டிடிஎஸ் தொகையை செலுத்தாத நடிகர் விஷால் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
வழக்கை விசாரித்த எழும்பூர் நீதிமன்ற நீதிபதி மலர் மதி, இதுதொடர்பாக விஷால், வரும் ஆகஸ்ட் 2-ம் தேதி அதாவது இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டிருந்தார்
ஆனால் நடிகர் விஷால் இன்று விசாரணைக்கு ஆஜராகவில்லை வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கில் ஏற்கனவே இரண்டு முறை சம்மன் அனுப்பியும் நடிகர் விஷால் வருமான வரித்துறை விசாரணைக்கு ஆஜராகாததால் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது நீதிமன்றம்.