அமைச்சர்களுக்கு எதிராக சொத்து வழக்குகள்.. தானாக முன்வந்து விசாரிக்கும் ஹைகோர்ட்.. முக்கிய உத்தரவு
சென்னை: சொத்து குவிப்பு வழக்குகளில் இருந்து இன்னாள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்குகளில் உரிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டதா? என்பது குறித்து தலைமை பதிவாளர் விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்குகளில் இருந்து அமைச்சர்கள் பொன்முடி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ஐ.பெரியசாமி ஆகியோரும், முன்னாள் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், வளர்மதி ஆகியோரும் விடுவிக்கப்பட்டதற்கும், விடுதலை செய்யப்பட்டதற்கும் எதிராக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து மறு ஆய்வு வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது

இதில், KKSSR ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, பொன்முடி மற்றும் ஓ.பன்னீர் செலவம் தொடர்பான வழக்குகள் இன்று நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தன.
அப்போது சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அமைச்சர் பொன்முடி தொடர்பான வழக்கில் தாம் இணைக்கப்பட்டுள்ளதாக தமது தரப்பு வாதத்தை முன்வைக்க அவகாசம் வேண்டுமென கோரிக்கை வைத்தார்.
இதனையடுத்து இந்த வழக்கில் மட்டுமல்ல அனைத்து வழக்குகளிலும், உரிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டனவா? என்பது குறித்து தலைமை பதிவாளர் விளக்கம் அளிக்க வேண்டுமென நீதிபதி தெரிவித்தார்.
அனைத்து வழக்குகளிலும் பதில் அளிப்பதாகவும் அதற்கு அவகாசம் வேண்டுமென கோரினார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி விசாரணையை ஜனவரி மாதம் எட்டாம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
முன்னதாக சொத்துக்குவிப்பு வழக்குகளில் இருந்து அமைச்சர்கள் பொன்முடி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ஐ.பெரியசாமி ஆகியோரும், முன்னாள் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், வளர்மதி ஆகியோரும் விடுவிக்கப்பட்டதற்கும், விடுதலை செய்யப்பட்டதற்கும் எதிராக தானாக முன்வந்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வழக்கு தொடந்தார்.
இந்தவிவகாரத்தில் விமர்சனம் எழுந்த நிலையில், தலைமை நீதிபதியின் அனுமதி பெற்றுதான் அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் ஆகியோருக்கு எதிராக தாமாக முன்வந்து மறுஆயவு வழக்குகளை விசாரணைக்கு எடுத்துள்ளதாக விளக்கம் அளித்துள்ள சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், எந்த வழக்கிலிருந்தும் விலகப்போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்தார். இந்த வழக்குகள் குறித்து உச்ச நீதிமன்றத்தை நாடலாமே என்றும் கேள்வி எழுப்பினார். இதனிடையே இந்த வழக்கை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொன்முடி தரப்பில் மேல்மறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம், வழக்கை எதிர்கொள்ள அறிவுறுத்தியது.
ஒவ்வொரு 3 மாதங்கள் அல்லது ஆறு மாதங்களுக்கு ஒருமுறை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அனைவரும் சென்னை மற்றும் மதுரைக்கு மாறுவது வழக்கம். அப்படி ஆனந்த் வெங்கடேசன் மதுரை கிளைக்கு மாறி உள்ளதால் , இந்த வழக்கை நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்து வருகிறார்.












Click it and Unblock the Notifications