விஜய் பாட்டு வந்ததுக்கு என்ன செய்ய முடியும்? இளையராஜாவுக்கு எழும் ஆதரவு குரல்கள்!
சென்னை: இளையராஜாவின் யூடியூப் பக்கத்தில் அவருடைய இசையில் வெளிவந்த பழைய பாடல்கள் தொடர்ச்சியாக பதிவேற்றப்பட்டு வருகிறது. அதில் விஜய் பாட்டு பதிவேற்றப்பட்டதற்கு கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், தற்போது இளையராஜாவுக்கு ஆதரவு குரல்கள் அதிகரித்திருக்கின்றன.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. ரிசல்ட் வர இன்னும் ஒரு நாள்தான் இருக்கிறது. முன்னதாக வெளியான கருத்துக்கணிப்பில், திமுக ஆட்சியை கைப்பற்றும் என்று பெரும்பாலான நிறுவனங்களும், ஒரே ஒரு நிறுவனம் மட்டும் விஜய் ஆட்சிக்கு வருவார் என்றும் கூறியிருந்தது.

எனவே ரிசல்ட் மீதான எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. இந்த நேரத்தில் விஜய்யின் அரசியல் நகர்வுகள் குறித்து பல்வேறு விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன. அரசியலற்ற கூட்டம் என்றும், சித்தாந்தம் இல்லாத தலைவர் விஜய் என்றும், இப்படி ஒரு கூட்டம் எந்த மாதிரியான எதிர்காலத்தை உருவாக்கும்? எனவும் கேள்விகள் எழுந்திருந்தன.
பதிலுக்கு விஜய்தான் மாற்று அரசியல் என்றும், வேலையின்மை, உழைப்பு சுரண்டல், நிர்வாக பிரச்சனைகள், சாமானிய மக்களை உள்ளடக்காத பொருளாதார வளர்ச்சி என எல்லாவற்றையும் விஜய்தான் சரி செய்வார் என்றும் தவெகவினர் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
இப்படி இருக்கையில்தான் இளையராஜாவின் பெயர் இந்த விவாதங்களில் அடிபட்டது. அதாவது, இளையராஜாவின் யூடியூப் பக்கத்தில் அவருடைய இசையில் வெளிவந்த பழைய பாடல்களை தொடர்ச்சியாக பதிவேற்றப்பட்டு வருகிறது. நேற்று விஜய்யின் பழைய பாடல் ஒன்றை அதில் அப்லோட் செய்யப்பட்டது. இதுதான் சலசலப்புக்கு காரணம்.
எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான 'இது எங்கள் நீதி' என்ற படத்தில் உள்ள "சின்ன தம்பி உன்ன நம்பி இந்த நாடு காத்திருக்கு" எனத் தொடங்கும் பாடல் தான் அது.
உடனே விஜய் ரசிகர்கள், இளையராஜா விஜய்க்கு ஆதரவு தெரிவித்துவிட்டார், விஜய்யின் அரசியலுக்கு இளையராஜா சப்போர்ட் செய்கிறார் என்று பேச தொடங்கினர். மறுபுறம், இளையராஜா பழசை எல்லாம் மறந்துவிட்டு விஜய் பக்கம் போய்விட்டார் என்று மற்றொரு பிரிவினர் விமர்சனங்களை முன்வைத்தனர்.
இப்படியாக நேற்றிரவு முழுவதும் இளையராஜா, விஜய் காம்போதான் சோஷியல் மீடியாவில் ஹிட் அடித்திருந்தது. இன்று வழக்கம் போல இந்த படத்தின் மற்ற பாடல்களும் யூடியூப் சேனலில் அப்லோட் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த பஞ்சாயத்து முடிவுக்கு வந்திருக்கிறது. அதாவது ரெகுலராக பாடல்களை அப்லோடு செய்யும்போது எதார்த்தமாக விஜய் பாடல் வந்திருக்கிறது.
இதற்காக எழுந்த விமர்சனங்களை கண்டுக்கொள்ளாமல், அடுத்தடுத்த பாடல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதால், விஜய் பாட்டு உள்நோக்கத்துடன் பதிவேற்றம் செய்யப்படவில்லை என்பது தெளிவாகியிருக்கிறது. எனவே இரு தரப்பினரும் இந்த விஷயத்தை கடந்து போய் இருக்கிறார்கள்












Click it and Unblock the Notifications