அண்ணாமலை அரசியல் செய்கிறார்.. நாங்க மக்களுக்கு நல்லது செய்கிறோம்.. விளாசிய முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: பாஜக தலைவர் அண்ணாமலை அரசியல் செய்கிறார். நாங்கள் மக்களுக்கு நல்லது செய்கிறோம். அதுதான் எங்களுக்கும், அவருக்கும் உள்ள வித்தியாசம், என்று முதல்வர் ஸ்டாலின் இன்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
முதல்வர் ஸ்டாலின் டெல்டா பயணத்தை முடித்துக்கொண்டு இன்று சென்னை திரும்புகிறார். நேற்று தஞ்சாவூரில் நடக்கும் தூர்வாரும் பணிகளை முதல்வர் ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார். அதேபோல் நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் பல்வேறு பகுதிகளுக்கு ஆய்வு பணிக்காக முதல்வர் ஸ்டாலின் சென்றார்.
அங்கும் பல்வேறு இடங்களில் தூர்வாரும் பணிகள் நடந்து வருகின்றன. கல்லாறு தூர்வாரும் பணிகளை அவர் பார்வையிட்டார். பின்னர் திருவாரூரில் ஆய்வு பணிகளை செய்துவிட்டு சென்னை திரும்புவதற்காக அவர் திருச்சி விமான நிலையம் வந்தார்.

செய்தியாளர் சந்திப்பு
திருச்சியில் முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், டெல்டா பயணம் மகிழ்ச்சியாக இருந்தது. உழவர்களுக்கு ரூ.61 கோடி மதிப்பில் வேளாண் தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்படும். டெல்டா மாவட்டங்களில் 4418 கிலோ மீட்டர் தூரத்திற்கு தூர்வாரும் பணிகள் நடைபெற்று உள்ளன. மகசூல் பெருக்கம், மகிழும் விவசாயி திட்டம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கத்தான் இந்த மின்னல் வேக பயணத்தை மேற்கொண்டேன்.

நல்ல பயணம்
வழக்கமாக 3.5 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி டெல்டாவில் செய்யப்படும். கடந்த வருடம் முறையாக தூர்வாரும் பணிகளை செய்ததால் கடைமடை வரை நீர் வந்தது. இந்த முறையும் முறையாக தூர்வாரும் பணிகள் செய்யப்பட்டு உள்ளன. இந்த ஆண்டு பருவமழைக்கு முன்பே டெல்டாவில் 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் செய்யப்பட்டுள்ளன. 681 பணிகளை விரைவாக முடிக்க உத்தரவிட்டு இருந்தேன்.

ஸ்டாலின் பேச்சு
நீர் நிலையில் இருக்கும் ஆக்கிரமிப்புகள் எல்லாம் அகற்றப்பட்டு உள்ளன. மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் இதற்காக பொறுப்பில் அமர்த்தப்பட்டு இருந்தன. சி மற்றும் டி கால்வாய்களை தூர்வாரும் பணிகள் நடந்து வருகின்றன. மே மாதம் 24ம் தேதியே இந்த முறை மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளது. சுதந்திர இந்தியாவில் முதல்முறை இப்படி திறக்கப்பட்டு உள்ளது. இதனால் குருவை சாகுபடி பரப்பு உயரும், என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

அண்ணாமலை
தொடர்ந்து முதல்வர் ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து பல்வேறு விஷயங்களில் அரசை விமர்சிக்கிறாரே என்று செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு. பாஜக அண்ணாமலை அரசியல் செய்கிறார். நாங்கள் மக்களுக்கு நல்லது செய்கிறோம். அதுதான் எங்களுக்கும், அவருக்கும் உள்ள வித்தியாசம், என்றார்.

எடப்பாடி பழனிச்சாமி
தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு கெட்டுவிட்டதாக எடப்பாடி பழனிச்சாமி சொல்லி இருக்கிறாரே அதற்கு என்ன பதில் என்ன கேள்விக்கு பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின், நானும் ஒருவன் இருக்கிறேன் என்பதை மக்களுக்கு காட்ட எடப்பாடி பழனிசாமி எதையாவது சொல்லி வருகிறார். ஒவ்வொரு நாளும் எதையாவது அவர் சொல்லிக்கொண்டு இருக்கிறார். தமிழ்நாடு தற்போது அமைதிப் பூங்காவாக இருக்கிறது. கலவரம், சாதி, மத மோதல், துப்பாக்கிச்சூடு தற்போது இல்லை.

சட்ட ஒழுங்கு
இது போன்ற சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியாக இருப்பதால்தான் வெளிநாட்டு முதலீடுகள் தேடி வருகின்றன. இதையடுத்து அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய வயதை குறைக்க திட்டமா? என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த முதல்வர் இப்போது முடிவு எடுக்கவில்லை. பேசிக்கொண்டு இருக்கிறோம். முடிவு எடுத்த பின் அறிவிப்போம், என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications