“ஊதினால் அணைய நாம் என்ன தீக்குச்சியா? உதயசூரியன்! அடக்க நினைத்தால் நின்று எதிர்ப்போம்" : ஸ்டாலின்
சென்னை: "ஊதினால் அணைய நாம் என்ன தீக்குச்சியா? உதயசூரியன்! நம்மை அடக்க நினைத்தால், நம் மண், மொழி, மானத்தைக் காப்பாற்ற ஒன்றாக நின்று எதிர்ப்போம்" என திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், சார்பு அணிச் செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் ஆலோசனைக் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக இன்று நடைபெற்றது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் இருந்து காணொளிக் காட்சி வாயிலாக பேசினார் முதல்வர் ஸ்டாலின்.

திமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசுகையில், "உடன்பிறப்பே வா நிகழ்ச்சி மூலம் இதுவரை 24 தொகுதிகளின் நிர்வாகிகளுடன் ஒன் - டூ- ஒன் சந்திப்பை நடத்தியிருக்கிறோம். ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பு என்பது திமுகவுக்கான உறுப்பினர் சேர்க்கைக்காக மட்டுமல்ல. தமிழ்நாட்டின் மண். மொழி, மானம் காக்க அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி.
ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இணைந்தவர்களில் விருப்பம் உள்ளவர்கள் திமுகவில் உறுப்பினர்களாகவும் இணைவார்கள். சாதி, மதம், கட்சி சார்பு என எதையும் பார்க்காமல் தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தையும் நாம் சென்றடைய வேண்டும். தமிழ்நாட்டுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக மக்களை ஒன்றிணைக்க வேண்டும்.
கீழடி உண்மைகள் புதைக்கப்படுகிறது; இந்தியைத் திணிக்கிறார்கள்; கல்வி நிதி மறுக்கப்படுகிறது; நீட் மூலம் மாணவர்கள் பலி வாங்கப்படுகிறார்கள்; தொகுதி மறுவரையறை மூலமாக நாடாளுமன்றத்தில் நம் வலிமையைக் குறைக்க சதி நடக்கிறது. பண்பாடு, பொருளாதாரம், அரசியல் என எல்லா வகையிலும் நம் மீது வன்மத்துடன் செயல்படுகிறார்கள்.
ஊதினால் அணைய நாம் என்ன தீக்குச்சியா? நாம் உதயசூரியன். நம்மை அணைக்க நினைத்தால் நம் மண், மொழி, மானத்தை காப்பாற்ற ஒன்றாக நின்று எதிர்ப்போம். இது தான் தமிழர்களின் தனி குணம். ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் நோக்கமும் இதுதான்.
வாட்ஸ் அப், எக்ஸ் தளம், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற லோகோவை காமன் டிபி ஆக கட்டாயமாக வைக்க வேண்டும்" என அறிவுறுத்தி உள்ளார்.












Click it and Unblock the Notifications