திமுகவுக்கு பயம் காட்டிட்டோம்ல.. “தோல்விகரமான வெற்றி”.. அசராமல் பேசிய அதிமுக மாஜி ஜெயக்குமார்!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவு தோல்விகரமான வெற்றி என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவிய நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தோல்விகரமான வெற்றி எனத் தெரிவித்துள்ளார்.
அரசு இயந்திரத்தை பயன்படுத்தி, அதிகார துஷ்பிரயோகம் செய்து வாக்காளர்களை அடைத்து வைத்து திமுக இந்த வெற்றியை பெற்றுள்ளது என ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி அணியைச் சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுகவை கண்டு திமுக உள்ளிட்ட கட்சிகள் பயந்தன எனக் கூறியுள்ளார்.

அதிமுக படுதோல்வி
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். அதேசமயம், எதிர்க்கட்சியான அதிமுக, காங்கிரஸ் வேட்பாளர் வாங்கிய வாக்குகளில் சரிபாதி வாக்குகள் கூட பெற முடியாமல் படுதோல்வியைச் சந்தித்துள்ளது. இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி ஆணவத்தோடு செயல்பட்டதே அதிமுகவின் படுதோல்விக்குக் காரணம் என ஓபிஎஸ் தரப்பினர் விமர்சித்து வருகின்றனர்.

ஜெயக்குமார் பேட்டி
இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தொண்டர்கள், தலைவர்கள் என்று அனைவரும் ஒன்றிணைந்துதான் செயல்படுகிறோம். காமாலைக்காரனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் என்பது போல தான் அவர்களுக்குத் தெரிகிறது. எங்களின் கட்சி வேகமாக செயல்பட்டு வருகிறது. எழுச்சியாக உள்ளது. வரும் காலங்களில் வீறுகொண்டு மகத்தான வெற்றியை பெறும் நிலையில் தான் கட்சி உள்ளது.

திமுக பயந்தது
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலைப் பார்த்து ஆளும் திமுக அரசு மிகப்பெரிய பயத்தில் இருந்தது. இதற்கு முன்பு எந்த தேர்தலிலும் இதுபோல அவர்கள் பயந்தது கிடையாது. 350 கோடி செலவு செய்து போலியான வெற்றியை திமுக பெற்றுள்ளது. 22 மாதங்களில் திமுக கொள்ளையடித்த பணத்தை ஈரோடு கிழக்கு தொகுதியில் செலவு செய்தனர். ஆளும் அரசின் பணம் பாதாளம் வரை பாய்ந்துள்ளது.

தோல்விகரமான வெற்றி
அரசு இயந்திரத்தை பயன்படுத்தி, அதிகார துஷ்பிரயோகம் செய்து வாக்காளர்களை அடைத்து வைத்து இந்த வெற்றியை பெற்றுள்ளனர். வாக்காளர்கள் எங்களை பார்க்காமல் இருப்பதற்கு பணம் கொடுத்துள்ளனர். இதை எல்லாம் தாண்டி 45 ஆயிரம் வாக்குகள் பெற்றுள்ளோம். எங்களைப் பொறுத்த வரையில் இது தோல்விகரமான வெற்றி தான். நாங்கள் தான் உண்மையாக வெற்றி பெற்றுள்ளோம். இது திமுகவிற்கு வெற்றி கிடையாது.

புது ஃபார்முலா
இனி திருமங்கலம் ஃபார்முலா கிடையாது. ஈரோடு கிழக்கு ஃபார்முலா தான். எந்த கட்சியும் இது போன்று சிந்திக்கவில்லை. மக்களை அடைத்து வைக்கும் கட்சி திமுக தான். ஈரோடு இடைத்தேர்தலில் திமுகவின் வெற்றி நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்காது. நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் அதிமுகவுக்கு ஆதரவளிப்பார்கள். ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தொடர்ந்த வழக்கை சட்டரீதியாக சந்திப்போம். சசிகலா எங்களை விட்டுவிட்டு, டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோரை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபடட்டும்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications