இந்தியாவிலேயே மிகப்பெரிய வெற்றி பெறுவோம்.. பாஜக கூட்டணியில் இணைந்தது ஏன்? அன்புமணி விளக்கம்
சென்னை: பாஜக - பாமக கூட்டணி இன்று உறுதி செய்யப்பட்டது. இதற்கான ஒப்பந்தமும் கையெழுத்து ஆனது. தொடர்ந்து பேசிய அன்புமணி ராமதாஸ், இந்தியாவிலேயே மிகப்பெரிய வெற்றி பெறுவோம் என்று கூறினார். மேலும், பாஜகவுடன் இணைந்தது ஏன் என்றும் அன்புமணி ராமதாஸ் விளக்கம் அளித்துள்ளார்.
லோக்சபா தேர்தல் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்தே அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழகத்தில் பாமக, தேமுதிக அதிமுகவுடன் கூட்டணி அமைக்குமா இல்லை பாஜகவுடன் கூட்டணி அமைக்குமா என்று எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இதில், பாமக இன்று பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது.

இதற்காக இன்று காலை தைலாப்புரத்தில் பாஜக - பாமக கூட்டணி உறுதி செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. தொடர்ந்து பேசிய அன்புமணி ராமதாஸ், "வெறுப்பான ஒரு சூழல் இருக்கிறது. மக்களுக்கு ஒரு மாற்றம் வர வேண்டும் என்ற ஒரு எண்ணம் ஆழமாக இருக்கிறது. இதனை பூர்த்தி செய்ய தான் நாங்கள் இந்த முடிவை எடுத்து இருக்கிறோம். எங்கள் கூட்டணி தமிழ்நாட்டில் மட்டுமில்லை.. இந்தியாவிலேயே மிகப்பெரிய வெற்றி பெறும். மோடி 3 வது முறையாக இந்தியாவின் பிரதமராக தேர்வு செய்யப்படுவார் தமிழ்நாட்டில் மாற்றம் ஏற்பட இந்த முடிவை எடுத்து இருக்கிறோம்" என்று பேசினார்.
முன்னதாக திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் இல்லத்திற்கு இன்று காலை அண்ணாமலை, எல் முருகன் ஆகியொர் வந்தனர். பின்னர் பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோருடன் பாஜகவின் அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகள் தீவிர ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக்கு பிறகு இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.
பாமகவிற்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பாஜக கூட்டணியில் பாமக போட்டியிடும் தொகுதிகள் எவை என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று அண்ணாமலை கூறினர். இன்று சேலத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்திற்கு பின்னர் இது குறித்து முடிவு செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
எனினும், கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகும் போதே அண்ணாமலை -ராமதாஸ் உள்ளிட்டோர் தனி அறையில் ஆலோசனை நடத்தினர். அப்போது போட்டியிடும் தொகுதிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. விழுப்புரம், சிதம்பரம், மத்திய சென்னை, திண்டுக்கல், தர்மபுரி, கடலூர், ஆரணி, அரக்கோணம், ஸ்ரீபெரும்பதூர், சேலம் ஆகிய தொகுதிகளில் பாமக போட்டியிடலாம் எனக் கூறப்படுகிறது.
பாமகவிற்கு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்படுமா? என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்று மட்டுமே கூறினார். ராஜ்யசபா சீட் தொடர்பாக எதுவும் கூறவில்லை.












Click it and Unblock the Notifications