சட்டசபை தேர்தலில் போட்டியிடுவோம்...மநீம உறுப்பினர்களின் குரல் சட்டசபையில் ஒலிக்கும் - கமல்
2021ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவோம் என்றும் மக்கள் நீதி மய்ய உறுப்பினர்களின் குரல் சட்டசபையில் ஒலிக்கும் என்றும் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
சென்னை : சட்டசபை தேர்தலில் நல்லவர்களுடன் இணைந்து கூட்டணி அமைத்து போட்டியிடுவோம் என்றும் சட்டசபையில் மக்கள் நீதி மய்ய உறுப்பினர்களின் குரல் ஒலிக்கும் என்றும் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். எங்கள் அணி மூன்றாவது அணி அல்ல முதல் அணியாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
சட்டசபை தேர்தலுக்கு தயாராகி வருகிறது மக்கள் நீதி மய்யம். கடந்த நான்கு நாட்களாக தனது கட்சி நிர்வாகிகளுடன் தியாகராயநகரில் உள்ள தனியார் ஹோட்டலில் ஆலோசனை நடத்தினார் கமல்ஹாசன். மக்கள் மத்தியில் கட்சிக்கு உள்ள செல்வாக்கு, அரசியல் கள நிலவரம், கூட்டணி அமைப்பது யாருடன், வேட்பாளர்கள் தேர்வு என்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.
ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், சட்டசபைத் தேர்தலில் போட்டியிடப்போவதாகவும் நல்லவர்களுடன் மட்டுமே கூட்டணி அமைத்து போட்டியிடுவோம் என்றும் கூறினார்.

சட்டசபையில் குரல் ஒலிக்கும்
நேர்மையை வியூகமாகக் கொண்டு நல்லவர்களுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம். சட்டசபையில் எங்கள் உறுப்பினர்களின் குரல் ஒலிக்கும். எங்கள் அணியில் நல்லவர்கள் இணைவார்கள். நாங்கள் எப்போதும் மூன்றாவது அணியாக இருக்க மாட்டோம் முதல் அணியாகவே எங்கள் அணி இருக்கும்.

முதல்வர் வேட்பாளர்
மக்கள் நீதி மய்யத்தின் முதல்வர் வேட்பாளராக என்னை அறிவித்துள்ளனர். நான் எந்த தொகுதியில் போட்டியிடுவேன் என்று வேட்புமனு தாக்கல் செய்யும் போது தெரியும். இதுவரை எந்த தொகுதியில் போட்டியிடுவது என்று முடிவு செய்யவில்லை.

ரஜினியின் உடல் நலம்
ரஜினிக்கு அரசியலைவிட உடல் நலம் ரொம்ப முக்கியம் என்று கூறிய கமல், அரசியல் பற்றி ரஜினிதான் முடிவெடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். நான் எப்போதும் பி டீம் கிடையாது என்றும் கூறினார்.

வேல் யாத்திரைக்கு தடை
வேல் யாத்திரை பற்றிய கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன், வேலை வாங்கிக்கொடுப்பதே எங்கள் வேலையாக இருக்கும் என்று கூறினார். புழக்கத்தில் இல்லாத மனுஸ்மிருதி புத்தகம் பற்றி இப்போது பேச தேவையில்லை என்றும் கூறியுள்ளார் கமல்ஹாசன்.












Click it and Unblock the Notifications